ஆரஞ்சுப்பழங்களின் நகரம் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் நாக்பூர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமாகும். மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அடுத்த்தாக மூன்றாவது முக்கிய நகரமாக இது விளங்குகிறது.புலிகளின் தலை நகரம் என்ற இன்னொரு சிறப்பு பெயரையும் இது பெற்றுள்ளது. கோண்ட் ராஜ வம்சத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த நாக்பூர் நகரம் பின்னர் மராத்திய சாம்ராஜ்யத்தின் கீழ் போன்ஸ்லே வம்சத்தினரால் ஆளப்பட்டது. அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆளுகைக்கு கீழ் வந்த இந்த நகரம் ஆங்கிலேயர் காலத்திய இந்தியாவின் மத்திய மாகாணங்களின் தலைநகராக விளங்கியது.
நாக்பூர் நகரத்தின் பெயர்க்காரணம் மிக சுவாரசியமானது. ஒரு பாம்பினை போன்றே வளைந்து வளைந்து செல்லும் நாக் ஆற்றினை ஒட்டி இது அமைந்திருப்பதால் அந்த ‘நாக்’ எனும் சொல்லுடன் நகரம் என்ற பொருள் தரும் சம்ஸ்கிருத சொல்லான ‘பூர்’ எனும் சொல்லும் சேர்ந்து இந்த நாக்பூர் எனும் பெயர் உருவானது.
இன்றும் இந்த நகரத்தின் தபால் தலையில் ஒரு பாம்பின் ஓவியம் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். தக்காண பீடபூமியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் 10000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் காணப்படுகிறது.
பசுமையான சூழலுக்கு பிரசித்தி பெற்றிருக்கும் நாக்பூர் சண்டிகர் நகரத்துக்கு அடுத்தபடியான பசுமையான நகரம் என்ற பெருமையை பெறுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகர் என்று அழைக்கப் படும் அளவுக்கு இது முக்கியமான பெரு நகரமாகும்.
நாக்பூர் – வரலாற்றுப்பின்னணி, இயற்கை அழகு, கேளிக்கை அம்சம் கலந்த ஒரு கலவை
நவேகான் தேசிய பூங்கா, சீதாபல்டீ கோட்டை, பெஞ்ச் தேசியப்பூங்கா போன்றவை நாக்பூர் அருகில் உள்ள முக்கியமான இடங்களாகும். இங்குள்ள தீக்ஷா பூமி எனும் இடத்தில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் புத்த மதத்தை தழுவிய வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.
நாக்பூர் நகரத்தில் உள்ள தேசிய மையத்தில் ஜீரோ மைல் என்று குறிப்பிடப்படும் கற்தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான தூரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்டதாகும்.
நாக்பூர் நகரமானது பல ஏரிகளை கொண்டுள்ளது. மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையும் இயற்கையாகவே உருவானவையும் இதில் அடங்கும். இவற்றுள் அம்பாஜாரி ஏரியானது சிற்றுலா செல்வதற்கும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பதற்கும் பெயர் பெற்ற ஒன்றாகும்.
இங்குள்ள பாதிரியார் மலையில் (செமினரி ஹில்ஸ்) பாலாஜி மந்திர் குறிப்பிட த்தக்க பெரிய கோயிலாகும். இந்த மலையிலிருந்து நாக்பூர் நகரத்தின் முழு அழகைக் கண்டு ரசிக்கலாம்.
நடந்தே இந்த மலையில் ஏறுவது கடினமான சாதனை என்பதால் மலையேற்றத்தை விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். பொத்தரேஷ்வர் கோயில் மற்றும் வெங்கடேஷா கோயில் போன்றவையும் இங்குள்ள இதர ஆன்மீக திருத்தலங்களாகும். புத்த பகவானுக்காக நிறுவப்பட்டிருக்கும் டிராகன் பேலஸ் கோயில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நாக்பூரில் உள்ள மஹாராஜா பாக் என்றழைக்கப்படும் பூங்காத் தோட்டம் மிகவும் பெயர் பெற்றது. இதன் உள்ளே ஒரு வன விலங்கு காட்சியகமும் உள்ளது. இந்த பூங்கா போன்ஸ்லே மன்னர்களால் அமைக்கப்பட்டதாகும்.
மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடைபெற்ற போரில் உயிரை இழந்த வீரர்களுக்காக அமைக்கப்பட்ட சீதாபுல்தி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த பிரம்மாண்டமான கவில்காத் கோட்டையும் இங்குள்ளது.
நவராத்திரி, தசரா, கணேஷ பூஜை, துர்கா பூஜை, மொகர்ரம் போன்ற விழாக் கொண்டாட்டங்களின் போது நாக்பூர் நகரம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்வைத் தரக்கூடிய குதூகல நகரமாக மாறி தோற்றம் கொள்கிறது. இவ்விழாக்கள் யாவும் மிகப் பெரும் அளவில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நாக்பூர் மக்களால் கொண்டாடப்படுகிறது.
மறக்கக் கூடாத அம்சங்கள்
நாக்பூர் சென்றால் நிச்சயம் அங்கு கிடைக்கும் பெயர் பெற்ற ஆரஞ்சுகளை சுவைக்காமல் வர முடியாது அதே போல இங்குள்ள கடைத் தெருக்கள் மற்றும் அங்காடிகள் போன்றவற்றில் எல்லாவகையான கலைப்பொருட்கள், பாரம்பரிய அடையாள பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை நிரம்பி கிடக்கின்றன.
நாக்பூர் நகரம் வர்ஹதி உணவு முறைக்கு பெயர் பெற்றது. இந்த உணவில் சற்றே காரம் அதிகம். வெளி நாட்டவர்க்கு ஒவ்வாமல் போக வாய்ப்புண்டு.
தக்காண பீடபூமியில் காணப்படுவதாலும் அருகில் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தாலும் நாக்பூர் நகரம் கோடை, மற்றும் குளிர் காலத்தில் அதிக வெப்ப நிலையை கொண்டிருக்கிறது.
ஆகவே கோடைக்காலத்தில் நாக்பூரில் 500 C அளவுக்கு வெப்ப நிலை உயர்கிறது. குளிர்காலத்தில் ஓரளவுக்கு தாங்கக் கூடிய அளவுக்கு காணப்படுகிறது. மழைக்காலம் நாக்பூருக்கு செல்ல ஏற்றதல்ல என்பதால் குளிர்காலமே இங்கு விஜயம் செய்ய மிக உகந்த பருவமாகும்.
நாக்பூர் – ஒரு முக்கியமான மையக் கேந்திரம்
நாக்பூர் இந்தியாவின் மையத்தில் அமைந்திருப்பதால் ஏறக்குறைய எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் சம தூரத்தில் உள்ளது. மிகப்பெரிய நகரமான இது எல்லா நகரங்களுடனும் விமான சேவை, ரயில் பாதை, நெடுஞ்சாலைகள் போன்றவற்றால் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய ரயில் பாதைகளை இணைக்கும் மிகப் பெரிய ரயில் சந்திப்பாக விளங்குகிறது. அதே போல் மிக முக்கியமான இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் சந்திப்பாகவும் நாக்பூர் உள்ளது. ஆகவே சாலைப் போக்குவரத்துக்கும் எந்த பஞ்சமுமில்லை.
அரசுப்போக்குவரத்து மற்றும் தனியார் சுற்றுலா பேருந்துகள் நாக்பூர் நகருக்கு ஏராளமாய் பல அருகாமை பெரு நகரங்களிலிருந்து உள்ளன.
இந்தியாவின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாய் விளங்கும் நாக்பூர் அதன் பெருமளவு வருவாயை சுற்றுலாத் தொழில் மூலமாகவும் பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
பண்பாடு, வரலாற்று பின்னணி, பாரம்பரியம், ஆன்மீக, இயற்கை வளம் போன்ற யாவும் இந்த பெருநகரின் அடையாளத்தில் பின்னி பிணைந்து காணப்படுவது ஒரு பெருமையான விஷயம்.
இங்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்தியாவின் பழமையான வரலாற்றின் அம்சங்களையும் கடந்து போன சில பொற்காலங்களின் மிச்ச ஞாபகங்களையும் கண்டும், உணர்ந்தும், அனுபவித்தும் மகிழலாம்.