நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய அறிவுப்பரப்பு மற்றும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் புத்தர் ஆகிய பிம்பங்களைக் கொண்டிருக்கும் காட்சி தான் நம் மனக்கண்ணில் விரியும்.
5 ஆம் நூற்றாண்டு ஏடியில் நிறுவப்பட்ட இந்த நகரத்தின் பெயர், இரண்டாகப் பிரித்தால் “அறிவை வழங்கக்கூடியவர்” என்ற அர்த்தம் கொள்ளும் “நாலந்தா” என்கின்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததாகும்.
அதன் பெயரை நிரூபிப்பது போல், நாலந்தா பல்கலைக்கழகமானது, பழங்கால இந்தியாவின் முக்கிய மையமாக விளங்கியதை யாரும் மறுப்பதற்கில்லை.
திபெத்து, சீனா, துருக்கி, கிரேக்கம், பெர்ஷியா போன்ற ஏராளமான நாடுகளிலிருந்து அறிஞர்கள் பலரும், தூர தேசங்களிலிருந்து மாணவர்கள் பலரும் தம் கல்வி தாகத்தை தணித்துக் கொள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தை நாடி வந்தனர் என்பதிலிருந்தே இதன் பெருமைமிகு கடந்த காலத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும் இப்பல்கலைக்கழகம், அக்காலத்தில் உலகிலேயே தங்கும் வசதி படைத்த முதன்மையான சில பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
உலகெங்கிலுமிருந்து கல்விச் சேவையாற்றும் நோக்கோடு வந்த 2,000 ஆசிரியர்களுக்கும், கல்விக் கனவுகளோடு வந்த சுமார் 10,000 மாணாக்கர்களுக்கும் அடைக்கலம் தந்து அரவணைத்துள்ளது.
7 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் வருகை, உலக வரைபடத்தில் நாலந்தாவை பிரகாசமாக ஜொலிக்கச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிக்ஷுக்களால் பின்பற்றப்பட்ட இதன் தனித்தன்மை வாய்ந்த, பிரத்யேகமான கல்வி முறையைப் பற்றி அவர் விரிவாக எழுதியதோடல்லாமல் சில பிரதிகளையும் தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். இவையனைத்தும் பின்னர் சீன மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
பீஹாரின் தலைநகராகிய பாட்னாவிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாலந்தா பல்கலைக்கழகம் ஒரு கட்டுமான அற்புதமாகும். இதனை நாலந்தா சுற்றுலாத்துறை மிக நன்றாக பராமரித்து வந்துள்ளது.
சிவப்பு செங்கல்லால் கட்டப்பட்டு, சுமார் 14 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த கட்டிடம் கோயில்கள், வகுப்பறைகள், தியான அரங்கங்கள், ஏரிகள் மற்றும் பூங்காக்களை உள்ளடக்கியுள்ளது.
கடும் பிரயத்தனங்கொண்டு இயற்றப்பட்டு, பத்திரமாக பாதுகாக்கப்பட்ட பழங்காலக் குறிப்புகள் மற்றும் வேத நூல்களைக் கொண்ட நூலகம், ஒன்பது அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ளது.
எனினும், மேற்கிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் இப்பல்கலைக்கழகத்தை துவம்சம் செய்து, தீயிட்டு அழித்ததனால் நாலந்தா அதன் புனிதத்தன்மையை இழந்து விட்டது. நூலகம் மட்டுமே சுமார் 3 மாதங்கள் வரை தொடர்ந்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று, உலகின் மிகப் புராதனமான பல்கலைக்கழகமாக விளங்கி, நாலந்தா சுற்றுலாத் துறையினால் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் சிதிலங்கள் மற்றும் எச்சங்கள் இதன் கடந்தகால மகிமையை பறைசாற்றுகின்றன.
கோடைகளின் போது வெம்மையாகவும், குளிர்காலங்களின் போது குளிராகவும் இருக்கும் நாலந்தா, சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கக்கூடிய ஒரு ஸ்தலமாகும்.
நாலந்தாவில் இருக்கக்கூடிய ஒரே போக்குவரத்து வசதியான ரிக்க்ஷா அல்லது டோங்கா மூலம் நகரத்தை சுற்றிப் பார்த்து விட்டு நேரத்தோடு திரும்புவது நலம்.
நாலந்தா மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
நாலந்தா பல்கலைக்கழகத்தின் பிரசித்தி பெற்ற சிதிலங்களுக்கு அப்பாற்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய ஏராளமான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது நாலந்தா சுற்றுலாத்துறை.
பீஹார் ஷரீஃபின் சமாதியில் உள்ள மாலிக் இப்ராஹிம் பையாவின் தர்காவில் வருடாந்தர அர்ஸ் விழா கொண்டாடப்படுகிறது. நாலந்தா அருங்காட்சியகம் மற்றும் நவ நாலந்தா மஹாவிஹார் போன்றவற்றுக்கும் சென்று வரலாம்.
சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாரகோன், ஒரு சூரியக் கோயிலைக் கொண்டுள்ளது. இங்கு கொண்டாடப்படும் சத் பூஜா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
வருடத்திற்கு இரு முறை, மார்ச்-ஏப்ரல் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் சத் பூஜாவின் திருவிழாக்கோலம், புகைப்படக் கலைஞர்களுக்கு விருந்தளிப்பதாகத் திகழ்கிறது.
புத்த மதம் தொடர்பான படிப்புகளுக்கான சர்வதேச மையம் ஒன்று இங்கு 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரையில் பீஹார் மாநில சுற்றுலாத்துறை, ஒரு வண்ணமயமான கலை விழாவை ஏற்பாடு செய்கிறது.
இவ்விழாவில் கலைஞர்கள் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர். இங்கு விற்கப்படும், கையால் வண்ணம் தீட்டப்பட்ட பிரத்யேகமான மதுபானி ஓவியங்களை கலை ஆர்வலர்கள் கட்டாயம் வாங்கலாம்.