இந்தியாவின் தென் பகுதியில் நிர்வாக நகரமாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரமாகவும் விளங்கும் நாமக்கல் புகழ் பெற்ற சுற்றுலாதலமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சியான இடங்களை பெற்றுள்ளது. சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் மற்றும் கட்டுமான வசதிகள் நாமக்கல் நகருக்கு புகழ் சேர்க்கும் அணிகலன்களாக இருக்கின்றன.
நாமக்கல் நகரம் வரலாறு, கல்வி, கோழி வளர்ப்பு மற்றும் போக்குவரத்து கட்டுமானம் ஆகியவைகளுக்கான நகரமாக சிறப்புற்று விளங்கும் இடமாகும். சேலம் மாவட்டத்திலிருந்து 1997-ம் ஆண்டு முறைப்படி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நாமக்கல்லின் வரலாறு 7-வது நூற்றாண்டு வரை பின்னோக்கிச் செல்கிறது.
நாமக்கல்லில் உள்ள சுற்றுலாத்தலங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், கூலிப்பட்டி முருகன் கோவில், தத்தகிரி முருகன் கோவில், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் மற்றும் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாக இருக்கின்றன.
மேலும் இங்கிருக்கும் நாமக்கல் துர்கம் கோட்டை சுற்றுலாப் பயணிகளை கவரும் மற்றுமொரு இடமாக விளங்குகிறது. நாமக்கல் நகரின் கற்கோட்டையும், நைனா மலைக்கோவிலும் இந்த மாவட்டத்தின் பிற கவர்ச்சியான சுற்றுலாத் தலங்களாகும்.
நாமக்கல் நகரத்தைப் பற்றி ஒரு வரலாற்றுப் பார்வை
நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒற்றைப் பாறைப்படிவு மலையின் பெயரான நாமகிரி என்ற பெயராலேயே இந்த ஊருக்கு நாமக்கல் என்ற பெயர் ஏற்பட்டது. கொங்கு தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே நாமக்கல் இருந்து வந்திருக்கிறது.
அதியமானின் வம்சத்தைச் சேர்ந்த குணசீலர் என்ற அரசரால் இந்நகரம் ஆளப்பட்டு வந்தது. குணசீலரால் கட்டப்பட்ட வரலாற்று சின்னங்களான ரங்கநாத சுவாமி கோவிலும், நரசிம்ம சுவாமி கோவிலும் இன்றும் இங்கு நிலைத்திருக்கின்றன.
பல்லவ வம்சத்தினருடன் குணசீலர் மேற்கொண்ட திருமண உறவு இந்த நகரின் கட்டிடக்கலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு இந்த நகரம், சோழர்களாலும், ஹோய்சலர்களாலும் 14-ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டு வந்தது.
அதன் பின்னர், விஜய நகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள், பீஜாப்பூர் சுல்தான்கள், கோல்கொண்டா மைசூர் மன்னர்கள், மராத்தியர்கள், ஹைதர் அலி மற்றும் இறுதியாக ஆங்கிலேயர்கள் ஆகியோரால் தொடர்ச்சியாக ஆளப்பட்ட நகரமாக நாமக்கல் இருந்திருக்கிறது.
மேற்கண்ட ஒவ்வொரு அரசுகளும் தங்களுடைய முத்திரையை இந்நகரில் பதித்து, இதனை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாற்றிவிட்டன.
நாமக்கல்லின் பருவநிலை
தென்னிந்தியாவின் பிற பகுதிகள் போலவே நாமக்கல்லும் மிகவும் கடுமையான வெப்பமுடைய கோடைகாலத்தை அனுபவிக்கும் இடமாக இருப்பதால், இவ்விடத்திற்கு மழைக்காலம் முடிந்தவுடன், அதாவது அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் சுற்றுப்பயணம் வருவது மிகச் சிறந்த அனுபவம் தருவதாக இருக்கும்.
நாமக்கல்லை அடைவது எப்படி?
பல பெரிய நகரங்களுக்கு அருகில் நாமக்கல் அமைந்துள்ளதால் இவ்விடத்தை அடைவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. நாமக்கல் நகரம் சாலை வழியே மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலாத் தலமாக நாமக்கல் விளங்குகிறது.