மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதிகளில் அமைந்திருக்கும் நாந்தேட் நகரம், பயணிகள் மற்றும் புனித யாத்ரிகர்களை ஒருசேர கவர்ந்திழுக்கும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இந்த நகரில் குரு கோபிந்த் சிங்கின் இறப்புக்கு பிறகு கட்டப்பட்ட ஹஜூர் சாஹிப் அல்லது சச்கண்ட் குருத்வாரா என்ற சீக்கிய ஆலயம் உலகப் புகழ்பெற்றது.
இந்திய துணை கண்டத்தை முகாலயர்கள் ஆளத் துவங்கிய நாள் முதலாக நாந்தேட் நகரம், முக்கியத்துவம் வாய்ந்த புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
இன்றும் இந்த நகரில் உள்ள சீக்கிய கோயில்களையும், மசூதிகளையும் தேடி நூற்றுக்கணக்கான புனித யாத்ரிகர்களும், பயணிகளும் தினந்தோறும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு நாந்தேட் நகரம் பிரசித்திபெற்ற சில ஹிந்து கோயில்களுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
நாந்தேட் நகரில் தன் வாழ்வின் இறுதி கணங்களை கழிக்க எண்ணிய சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங், தன்னையே சீக்கியர்களின் கடைசி குருவாக அறிவித்துக் கொண்டார். அதன் பிறகுதான் 'குரு கிரந்த் சாஹிப்' என்ற புனித நூலை சீக்கியர்களின் அடிப்படை விதியாக நிர்மாணித்தார் குரு கோபிந்த் சிங்.
நாந்தேட் நகரம், கந்தார் தர்கா மற்றும் பிஹோலி மஸ்ஜித் போன்ற புனித ஸ்தலங்களுடன், நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த் பாக் மற்றும் இஸாபூர் அணைக்காகவும் மிகப்பிரபலம். மேலும், நாந்தேட் நகரில் ஹிந்துக்களின் பண்டிகையான நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
வீதி கலாச்சாரம்
நாந்தேட் நகர வீதிகள் அங்காடி வியாபாரிகளின் கூச்சல் காரணமாக எப்போதும் ஆரவாரம் மிக்கதாகவே காணப்படும். இந்த வீதிகளில் தார்ப் பாயால் மூடப்பட்டு இருக்கும் கடைகளில் சமயம் சார்ந்த பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள், சீக்கியர்களின் வீரவாள் மற்றும் உடைவாட்களின் மாதிரிகளையும் நீங்கள் வாங்கிச் செல்லலாம். ஆனால் நீங்கள் பேரம் பேசும் வித்தையை அறிந்தவராக இருப்பது முக்கியம்.
மேலும் இந்த வீதிகள் சமயச் சிறப்பை தவிர, உங்கள் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் சுவையான உணவுப் பண்டங்களுக்காகவும் பிரபலம். அதுவும் மாலை நெருங்க நெருங்க நாந்தேட் வீதிகளில் கொத்துக் கொத்தாக நிறைய கடைகள் திடீரென முளைத்து நொறுக்குத் தீனி விற்கும் வியாபாரத்தில் பரபரப்புடன் இயங்க ஆரம்பித்து விடும்.
கோட்டைகளும், திறந்தவெளிகளும்
நாந்தேட் நகரம் கந்தார், தரூர், குந்தலிகிரி போன்ற தொன்மையான கோட்டைகளுக்காகவும் பிரசித்தம். இந்த மராட்டிய கோட்டைகள் ஒவ்வொன்றும் புகைப்படக்காரர்களின் சொர்க்க பூமியாகவே திகழ்ந்து வருகிறது. அதோடு உலகம் முழுவதிலுமிருந்து நாந்தேட் வரும் பயணிகள் இந்தக் கோட்டைகளுக்குள் காலாற நடந்து செல்லும் அனுபவத்தை பெரிதும் விரும்புகின்றனர்.
நாந்தேட் நகருக்கு முதல் முறையாக வரும் பயணிகள், வழிகாட்டியின் துணையோடு நகரை சுற்றிப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். அவ்வாறு யாரேனும் ஒரு பயண வழிகாட்டியை உடன் அழைத்துச் செல்வதால் நமக்கு நேரம் நிறைய மிச்சம் ஆகும் .
இதன் மூலம் நான்கைந்து நாட்களில் நாந்தேட் நகரை முழுமையாக சுற்றிப் பார்த்து விடலாம். மேலும், நடைபயணம் செல்லவும், புகைப்படம் எடுக்கவும் ஓரிரு நாட்கள் கூடுதலாக செலவிடவும் முடியும்.
நாந்தேட் நகரம் வரட்சியான கோடை காலத்தையும், மிதமான மழைக் காலத்தையும், குளிர்ச்சியூட்டும் பனிக் காலத்தையும் கொண்டது. இந்த நகரை அதன் பனிக் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.
நாந்தேட் நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலை என்று எந்த மார்கத்திலும் சுலபமாக அடைந்து விடலாம். இந்த நகரின் விமான நிலையம் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும் இப்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாந்தேட் நகரை ரயில் மூலமாக அடைவது சிறந்ததொரு பயண அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும்.