பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 4851 அடி உயரத்திலும் இயற்கையின் வரப்பிரசாதமாய் நந்திக் குன்று அமைந்துள்ளது. சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் இருக்கும் நந்திக் குன்று பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதால் பயணிகள் எளிதாக இந்த சுற்றுலாத் தலத்தை அடையலாம்.
வரலாற்றோடு பிணைந்திருக்கும் அழகு
நந்திக் குன்று சுவையான வரலாற்று நிகழ்வுகளை கொண்டதோடு, மரபு சார்ந்த மர்மங்களுக்கும் உறைவிடமாய் திகழ்கிறது. சிலர், நந்திக் குன்று பார்ப்பதற்கு தூங்கும் எருது போல் காட்சியளிப்பதால் அதற்கு அப்பெயர் வந்ததாக கூறுவர்.
சோழப் பேரரசின் ஆளுகையில் நந்திக் குன்று இருந்த போது அனந்த கிரி என்ற பெயருடன் அது விளங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது நந்திக்குன்றில், சோழ கட்டிட கலைக்கே உரித்தான பாணியில் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
சுதந்திர போராட்ட காலத்தில் இங்கு நந்தி துர்கா என்ற பெயரில் திப்பு சுல்தானால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது . எவராலும் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த அந்த கோட்டை 1791-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
நந்திக் குன்றுக்கு வரும் போது திப்பு சுல்தானின் கோடை கால வாசஸ்தலம், திப்புவின் வீழ்ச்சி, அவர் தப்பிச்சென்ற ரகசிய வழி போன்ற இடங்கள் வரலாற்றை நம் கண்முன் கொண்டு வருவதோடு, மறக்க முடியாத அனுபவமாகவும் இருக்கும்.
இவை தவிர கவி வீரபத்திர கோயில், அம்ரிதா சரோவர் ஏரி, தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட இடங்களும் பயணிகளின் ரசனைக்கு விருந்தளிக்க கூடியவை. அதே போல் பேராக்ளைடிங், மிதிவண்டி பயணம் போன்றவைகளும் பயணிகளுக்கு பேரனுபவமாக அமையும்.