ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கண்களைக் கவரும் பனி மூடிய இமயமலை தொடர்கள் மற்றும் மலையடிவாரத்தில் பசுமையான காடுகளையும் கொண்ட அழகிய சுற்றுலாத்தலம் தான் நர்கண்டா.
நர்கண்டா நகரத்தில் இருக்கும் சுற்றுலாப் பகுதிகளில், மிகவும் பிரபலமான இடமாக இந்நகரிலேயே உயரமான பகுதியாக விளங்கக் கூடிய ஹடூ சிகரம் உள்ளது. மலையின் உச்சியில் அமைந்திருக்கும் ஹடூ மாதா கோவில் உள்ளூர்வாசிகளால் பயபக்தியுடன் கொண்டாடப்படும் புனிதத்தலமாக விளங்குகிறது.
இந்து மதத்தில் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்படுகின்ற காளி தேவிக்காக கட்டப்பட்டிருக்கும் மாகாமாயா கோவில் நர்கண்டாவின் மற்றுமொரு புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது.
தானேடாரில் உள்ள ஸ்டோக்ஸ் பண்ணை, பரவலான மக்களால் அறியப்படும் ஆப்பிள் பழத் தோட்டமாகவும் மற்றும் உலகளவில் புகழ் பெற்ற இடமாகவும் உள்ளது. 18-வது நூற்றாண்டில் இந்த பண்ணையைத் துவக்கிய அமெரிக்கரான சாமுவேல் ஸ்டோக்ஸ் என்பவரின் பெயரைத் தாங்கியதாக இந்த இடம் விளங்குகிறது.
நர்கண்டாவில் இருந்து 17 கிமீ தொலைவில், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பழமையான கிராமமான கோட்காருக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம். இந்த கிராமம் 'U' வடிவ பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது.
கோட்காரில் இருந்தபடியே குலு பள்ளத்தாக்கின் சுற்று வட்டக்காட்சிகள் (Panoramic View), ஜிக்ஜாக் சாலைகள் மற்றும் பனி படர்ந்த இமயமலை தொடர்கள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளால் ரசித்திட முடியும்.
பனிச்சறுக்கு மற்றும் மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற நர்கண்டா நகரம், சுற்றுலாப் பயணிகள் பனி மூடிய இமயமலை சரிவுகளில் குளிர்கால விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்பினை தரும் இடமாகும்.
ஏப்ரல் முதல் ஜுன் மாதங்கள் வரை, மிதமான வெப்பத்தை தாங்கிய கோடைகாலம் நீடிப்பதால் நர்கண்டாவிற்கு வருகை தர உகந்த நாட்களாக இவை உள்ளன. நர்கண்டா நகரம் விமானம், சாலை மற்றும் இரயில் ஆகிய போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடையும் இடமாக உள்ளது.