சீமாந்திரா மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றுதான் இந்த நெல்லூர். மாநிலத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட ஆறாவது நகரமாக அறியப்படுவதுடன், இது ஸ்ரீ பொட்டிராமுலு நெல்லூர் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. ஆரம்பகாலத்தில் இம்மாவட்டம் நெல்லூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பல பிரசித்திபெற்ற கோயில்கள் அமைந்துள்ளதுடன் முக்கியமான விவசாய கேந்திரமாகவும் இம்மாவட்டம் திகழ்கிறது.
நெல்லூர் நகரமானது பெண்ணா ஆற்றின் தென் கரையில் அமைந்திருக்கிறது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து விஜயவாடா நகரம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் இது முக்கியமான தொழில் மற்றும் வியாபாரக்கேந்திரமாக உருவெடுத்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் மிகச்சிறந்த கட்டுமான வசதிகளுடன் வளர்ந்துவரும் செழிப்பான நகரமாகவும் இது புகழ் பெற்றுள்ளது.
வரலாற்றுப்பின்னணி
வரலாற்றுக்காலத்தில் விக்கிரமசிங்கபுரி என்றழைக்கப்பட்ட இந்த நெல்லூர் நகரம் பல ராஜவம்சங்களின் ஆட்சிகளை சந்தித்து வந்துள்ளது. நெல்லூர் பற்றிய மிகப்பழமையான குறிப்புகள் மௌரிய வம்சத்தினரின் காலம் வரை பின்னோக்கி நீள்கின்றன. 3ம் நூற்றாண்டில் இந்தியப்பேரரசாக திகழ்ந்த அசோக சாம்ராஜ்யத்தில் இது இடம் பெற்றிருந்ததாக தெரிய வருகிறது.
அதன்பின்னர் காலப்போக்கில் பல ராஜ வம்சங்கள் இந்த நெல்லூர் பூமியை ஆண்டுள்ளன. பல்லவர்கள், தெலுங்குச்சோழர்கள், சாதவாஹனர்கள் போன்ற ராஜவம்சங்கள் உட்பட இதர ராஜவம்ச மன்னர்களும் இவற்றில் அடங்குவர்.
இப்படி பல்வேறு வம்சங்கள் ஆண்டதன் அடையாளமாக பல புராதனக்கோயில்களும் கட்டுமானங்களும் இன்றும் நெல்லூர் மாவட்டத்தில் காலச்சாட்சியங்களாக வீற்றிருக்கின்றன.
மொத்தத்தில் ஒரு தொழில் வணிகக்கேந்திரமாக மட்டுமல்லாமல், காலனிய காலத்துக்கும் முற்பட்ட புராதனக்கோயில்கள் வீற்றிருக்கும் வரலாற்று நகரமாகவும் இந்த நெல்லூர் புகழுடன் அறியப்படுகிறது.
நெல்லூர் – பெயர்க்காரணம்
காலனிய ஆட்சியின் போது சுதந்திரப்போராட்ட அரசியல் பரபரப்புகள் ஏதும் நிகழாத ஒரு அமைதியான பகுதியாகவே இந்த நெல்லூர் இருந்துள்ளது. இருப்பினும் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இது ஒரு முக்கியமான அரசியல் களமாக மாறியது.
மதராஸ் மாகாணத்தின் (மெட்ராஸ் பிரசிடென்சி) அங்கமாக விளங்கி வந்த இந்த நெல்லூர் மாவட்டம் 1953 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ‘கர்நூலை’ தலைநகராக கொண்டு உருவான புதிய ஆந்திர மாகாணத்தில் சேர்க்கப்பட்டது.
அதன் பின்னர் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி ‘ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம்’ இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு, பரந்த சீமாந்திரா மாநிலமாக ஹைதராபாத் நகரை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டபோது அதனுடன் இந்த நெல்லூர் மாவட்டமும் இணைக்கப்பட்டது.
இப்படி பரந்த சீமாந்திரா மாநிலம் உருவானதில் நெல்லூருக்கும் முக்கிய பங்குண்டு. இப்பகுதியை சேர்ந்த பொட்டி ஸ்ரீ ராமுலு எனும் புகழ்பெற்ற அரசியல்தலைவர் பரந்த ஒன்றுபட்ட ஆந்திரத்தை உருவாக்க பாடுபட்டவர்களில் ஒருவராவார். எனவே அவர் ஞாபகார்த்தமாகவே நெல்லூர் மாவட்டமானது ‘ஸ்ரீ பொட்டிராமுலு நெல்லூர் மாவட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
விசேஷ அம்சங்கள்
நெல்லூரிலுள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் அதன் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. நெல்லூர் நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ள இக்கோயில் 600 ஆண்டுகள் பழமை உடையதாகும்.
பார்த்தவுடனேயே இந்த கோயிலின் முக்கிய சிறப்பம்சமாக தெரியும் விதத்தில் இதன் கோபுரம் 70 அடி உயரத்தில் வானோக்கி உயர்ந்து காணப்படுகிறது. ‘காலிகோபுரம்’ என்ற தெலுங்கு சிறப்புப்பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.
‘காற்றுக்கோபுரம்’ என்பதே இந்தப்பெயரின் பொருளாகும். இந்த காலிகோபுரத்தின் உச்சியில் 7 தங்கக்கலசங்கள் இடம் பெற்றுள்ளன. இவை கோயிலின் தோற்றத்துக்கு மேலும் கம்பீரத்தை தருகின்றன.
நெல்லூருக்கு அருகில் பல இயற்கை எழில் அம்சங்களும் நிறைந்துள்ளன. இவற்றில் மைப்பாடு பீச், புலிகாட் ஏரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. நேலபட்டு பறவைகள் சரணாலயமும் நெல்லூருக்கு அருகில் உள்ளது. இங்கு பல அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன.
ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் மட்டுமல்லாமல் நெல்லூரில் வேறு பல புராதனக்கோயில்களையும் பயணிகள் தரிசிக்கலாம். இவற்றில், நகரமையத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலுள்ல நரசிம்மஸ்வாமி கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நெல்லூருக்கு அருகில் உள்ள சோமசீலம் எனும் இடம் ஒரு பிரபலமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. அற்புதமான இயற்கை காட்சிகளுடன் அமைதி தவழும் ஏகாந்த ஸ்தலமாக இந்த சோமசீலம் காட்சியளிக்கிறது.
பெரும்பாலும் வருடமுழுக்க வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவநிலையை நெல்லூர் கொண்டுள்ளது. நெல்லூரை சுற்றிலுமுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
மே மாதத்தின்போது நெல்லூர் பகுதியில் அதிகபட்சம் 41°C வரையிலும் வெப்பநிலை உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இப்பகுதியில் அனல் காற்று வீசுவதால் மக்கள் இதனால் பெரிதும் பாதிப்படைந்து உடல் நலம் குன்றியவர்கள் வெப்பதின் காரணமாக இறப்பதும் உண்டு. எனவே குளிர்காலத்தில் இந்நகரத்துக்கு விஜயம் செய்வது உத்தமம்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வெகு அருகில் இந்த நெல்லூர் அமைந்திருப்பதும் ஒரு முக்கியமான தகவலாகும். சென்னையிலிருந்து வெறும் 200 கி.மீ தூரத்திலேயே நெல்லூர் நகரம் உள்ளது. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நகரம் 450 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.