தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களுடன் முழு உலகமும் டிஜிட்டல் மயமாகி விட்டது என்றே சொல்லலாம். மனிதர்களின் சேவை குறைந்து அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் அனைத்திற்கும் திறவுகோல், இந்த இணையம் தான்! சாதரணமாக ஆரம்பித்து இப்போது 5G வரை நாம் முன்னேறிவிட்டோம்! எதற்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் நாம் இணையத்தை தான் சார்ந்து இருக்கிறோம், அதற்கு ஏற்றார்போல் எல்லாமும் ஆன்லைனிலேயே விரைவாக நமக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் 5G சேவை அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டுவிட்டது. டெல்லி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முதல் 5G விமான நிலையமாக மாறியுள்ளது. இது எப்படி, எங்கே எல்லாம் 5G சேவை உடனடியாக கிடைக்கும் என்பதையெல்லாம் இங்கே பார்ப்போம்!
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய 5G சேவை
பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC), 2022 இல் உள்ள C-DOT பெவிலியனில் C-DOT ஆல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 5G நான்-ஸ்டாண்டலோன் (NSA) மையத்தை அக்டோபர் 1 அன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் 5G விமான நிலையம்
விமான நிலையங்களின் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத வகையில் டெல்லி விமான நிலையம் இந்தியாவின் முதல் 5G விமான நிலையமாக முற்றிலும் தயராகி உள்ளது. இது உண்மையிலேயே மிகவும் பெருமையான தருணம் தான்! இனி தங்கள் ஸ்மார்ட்போன்களில் 5G இணைப்பு உள்ள பயணிகள்விமான நிலையத்திற்குள் சிறந்த சமிக்ஞை மற்றும் சரியான இணைப்பை அனுபவிப்பார்கள் என்று விமான நிலைய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விமான நிலையத்திலும் 5G சேவை
டெல்லி விமான நிலையத்திற்குள் உள்ள உள்நாட்டு புறப்பாடுகள், சர்வதேச வருகைகள், பேக்கேஜ் பகுதிகள் மற்றும் பல இடங்களில் அனைவரும் இந்த சேவைகளைப் பெறலாம். தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவுடன், பயணிகள் மட்டுமின்றி, ஜிஎம்ஆர் ஏரோசிட்டியில் உள்ள வெகுஜன மக்களும் விரைவான சேவைகளை அனுபவிப்பார்கள்.
20 மடங்கு வேகமான சேவை
டெல்லி விமான நிலையத்தில் தற்போதுள்ள WiFi வசதிகளுடன் ஒப்பிடுகையில், பயணிகள் சுமார் 20 மடங்கு வேகமான டேட்டா வேகத்தை அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பதிவிறக்கம், ஆன்லைனில் ஸ்ட்ரீமிங், 3D கேமிங்கில் தடையற்ற வேகம், சிறந்த VR அனுபவங்கள் என அனைத்திலும் இணைய வேகம் விரைவாக இருக்கும்.
அடுத்ததாக இந்த மாநகரங்களில்
5G சேவைகள் படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 13 நகரங்களில் முதலில் 5G நெட்வொர்க்குகள் படிப்படியாக தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, இனி நீங்கள் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் போதெல்லாம் இலவச அதிவேக 5G சேவையை அனுபவிக்கலாம்!