இது விமானப் பயணிகளுக்கான ஒரு குட் நியூஸ்! ஆம், இனி விமான நிலையங்களில் உள்ள செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள்
கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க முடியாது என விமான போக்குவரத்து அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விமான போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஃபர்ஸ்ட் போன்ற விமான நிறுவனங்கள், செக்-இன் கவுண்டரில் வழங்கும் போர்டிங் பாஸ்களுக்கு நபருக்கு 200 ரூபாயை கட்டணமாக வசூலிக்கின்றன.
பயணிகளிடம் இருந்து போர்டிங் பாஸுக்கு கூடுதல் தொகையை விமான நிறுவனங்கள் வசூலிப்பது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த கூடுதல் தொகை விதிகளின்படி இல்லை. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, விமான நிலையத்தின் செக் இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ்களை வழங்குவதற்கு பயணிகளிடம் கூடுதல் தொகையை வசூலிக்க வேண்டாம் என்று விமான
நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் "விமான விதி 135, 1937" இன் கீழ் இதைப் பரிசீலிக்க முடியாது எனவும் இதைத் தொடர்ந்து செய்ய முடியாது எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை அன்று ட்வீட் செய்துள்ளது.
கொரானா தொற்றுக் காரணமாக மே 21, 2020 அன்று முதல், பயணிகள் இணையச் செக்-இன் செய்து போர்டிங் பாஸைப் பெறுவதை அமைச்சகம் கட்டாயமாக்கியது.
மே 9, 2022 அன்று, விமான நிறுவனங்கள் பயணிகள் "சரியான நேரத்தில் வெப் செக்-இன் மற்றும் பேக் டேக் அச்சிடுதல்" மற்றும் வெப் செக் இன் செய்யாததை "குறைக்க அல்லது தவிர்க்க" பயணிகள் மீது அபராதம் விதிக்கப்படுவதையும் விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
விமான நிலைய செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ்களை வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை மே 9 உத்தரவுக்கு ஏற்ப இல்லை என்று அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கூடுதல் கோரிக்கைகள்
மேலும், இருக்கையை தேர்வு செய்ய விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன எனவும் சமூக வலைதளங்களில் பலர் புகார் அளித்துள்ளனர். பல விமான நிறுவனங்கள் லக்கேஜ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இவை யாவும் இதைப் போலவே அமைச்சகம் கவனத்திற்கு செல்லும் எனவும், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.