தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் ஃபோக்ஸ் வேர்ல்ட் என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் "கோடை கொண்டாட்டம் 2௦22" ஜூன் 2ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை மாதம் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவு இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், பணிச்சுமைக்கிடையே பொழுதுபோக்குவதற்காகவும் பெற்றோர் அதிக அளவில் பொருட்காட்சிக்கு வந்து செல்கின்றனர்.
பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்
இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும் வகையில் நீருற்றுடன் செயற்கையாக குற்றால அருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குளித்து மகிழலாம்.
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ஸ்நோ வேர்ல்ட், ஜியான்ட் வீல், வாட்டர் ரோலர், டோரா டோரா போன்ற 2௦க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் மேஜிக் ஷோ, கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் வீடு, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, 3D தியேட்டர் மற்றும் ஒட்டக சவாரி போன்றவையும் இங்கு உள்ளன.டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற வகைவகையான திண்பண்டங்களையும் உண்டு மகிழலாம்.
நடைபெறும் இடம் மற்றும் கட்டணம்
இந்த கோடை கொண்டாட்டம் பொருட்காட்சி சென்னையின் தீவு திடலில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சி தொடர்ந்து 9௦ நாட்கள் நடைபெறும். பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 35, சிறுவர்களுக்கு ரூ 20, மாணவர்களுக்கு ரூ 20 வசூலிக்கப்படுகிறது. திங்கள் முதல் சனிக் கிழமைகளில் மதியம் 3 மணி முதல் இரவு 1௦ மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 1௦ மணி வரையிலும் பொருட்காட்சி திறந்திருக்கிறது. அண்ணா சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள தீவு திடலை மாநகர பேருந்துகள், டாக்சி அல்லது இரு சக்கர வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இங்கே வந்து செல்லுங்கள்.