"லேண்ட் ஆஃப் ரைசிங் சன்" எனப் போற்றப்படும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு அழகிய இடமாகும்.
ஆனாலும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு என தனி விமான நிலையம் ஏதும் இதுவரை இல்லை.
அஸ்ஸாமின் லிலாபரி விமான மற்றும் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆகும். அருணாச்சலுக்கு செல்ல மக்கள் இதுவரை அந்த விமான நிலையங்களையே
உபயோகித்து வருகின்றனர். தங்கள் மாநிலத்திற்கு என ஒரு விமான நிலையம் வந்துவிடக் கூடாதா என பல காலமாக காத்து கிடக்கின்றனர். ஆனால் அந்த நீண்ட கால காத்திருப்பிற்கு இப்போது முடிவு வந்துவிட்டது.
ஆம்! இந்திய விமான நிலைய ஆணையத்தால் அருணாச்சலப் பிரதேசத்தின் ஹாலோங்கியில் 645 கோடி மதிப்பீட்டில் 4,100 சதுர மீட்டர் பரப்பளவில் 2300மீ நீளமுள்ள ஓடுபாதையைக் கொண்டுள்ள விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
எட்டு செக் இன் கவுண்டர்களுடன், அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 200 பயணிகள் வரை தங்கலாம். இந்த முனையம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் நிலையான நிலப்பரப்புடன் ஆற்றல் திறன் கொண்ட கட்டிடமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்திய விமான நிலைய ஆணையம் ஜூலை 19 அன்று, ஹோலோங்கி கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தில் முதல் விமான சோதனை தரையிறக்கத்தை நடத்தியது. அன்று நடந்த நிகழ்வில் மாநில சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நாகப் நாலோ, "இந்த சோதனை ஓட்டத்தில் நாம் வெற்றி பெற்றோம். விமான நிலையத்தில் ஓடுபாதை மற்றும் பிற உள்கட்டமைப்பைப் பாராட்டினார்.
ஹோலோங்கி இட்டாநகரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே மக்கள் 80 கி.மீ தொலைவில் உள்ள அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள லிலாபரி விமான நிலையத்திற்கோ அல்லது கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கோ செல்ல வேண்டிய சிரமம் இனி ஏற்படாது" என்று கூறினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் அழகு நம் மனத்தைக் கட்டி இழுத்தாலும் கூட அங்கு செல்வது சற்று சிரமமாகவே உள்ளது. அருணாச்சலப் பிரதேசம் ஏற்கனவே பிரபலமான இடமாக இருந்தாலும், குறிப்பாக சாகச மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில், விமான இணைப்பு இல்லாததால் அருணாச்சலத்தை சுற்றிப் பார்க்க பல சுற்றுலாப் பயணிகள் இருமுறை யோசிப்பது உண்மைதான்.
மாநிலத்தின் புதிய விமான நிலையத்தின் மூலம், அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பயணிகள் தங்கள் இடங்களை மிகக் குறுகிய நேரத்தில் மற்றும் மாற்றுப்பாதையில் சிரமமின்றி அடைய முடியும். ஆகவே ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து பயன்பாட்டிற்கு வரவிருக்கிற அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய விமான நிலையம் ஏராளமான பார்வையாளர்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.