பரந்த வானத்தின் நடுவே வண்ணமயமான காத்தாடிகள் மேகங்களுக்குள் நுழைந்து பறப்பதைப் பார்ப்பது சற்று சிலிர்ப்பாகத் தான் இருக்கிறது அல்லவா! ஆம் இது கற்பனையல்ல. சென்னையில் நிஜமாக நடக்கப் போகிறது. தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவின் முதல் பதிப்பை சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடத்த தயாராக உள்ளது.
பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் அளவுகள் கொண்ட ஆயிரக்கணக்கான அழகான காத்தாடிகள் திறந்த வெளியில் எதற்கும் தடையின்றி பறப்பதைக் கண்டு நாம் குதூகலிக்கலாம். மகாபலிபுரத்தில் நடைபெறும் முதன்முதல் சர்வதேச காத்தாடி திருவிழாவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
சர்வதேச காத்தாடி திருவிழா
தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல நகரங்களிலிருந்தும் தொழில் வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள். இந்த மெகா காத்தாடி நிகழ்வு, குடும்ப திருவிழா போல ஆரவாரத்துடன் நடைபெறும். ஊடக அறிக்கைகளின்படி, மொத்தம் 10 அணிகள் 100 க்கும் மேற்பட்ட காத்தாடிகளுடன் பங்கேற்கின்றன. இந்த காத்தாடிகள் ரிப்ஸ்டாப் நைலானைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பயன்படுத்தும் காத்தாடிகளை தயாரிக்க இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் முழுவதும் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
20 அடி உயரம் முதல் மூன்றடி சிறிய ரகம் காத்தாடிகள் வரை இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன. வெவ்வேறு நாடுகள் தங்கள் காத்தாடிகளை அவர்களின் நுணுக்கம் மற்றும் நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்க வெவ்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். எனவே, வித விதமான, பல வண்ணங்களில், பல வடிவங்களில் வானத்தை ஆயிரக்கணக்கான காத்தாடிகள் அலங்கரிப்பதை நாம் கண்டு களிக்கலாம்.
முதல்முறையாக மகாபலிபுரத்தில் நடைபெறுகின்ற சர்வதேச காத்தாடி திருவிழா
தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து குளோபல் மீடியா பாக்ஸின் நிறுவனர் பெனடிக்ட் சாவியோ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். பெனடிக்ட் சாவியோ மேலும் கூறுகையில், "நான் பிரான்ஸ், சீனா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பல காத்தாடி திருவிழாக்களில் கலந்துக் கொண்டுள்ளேன், இந்த திருவிழா நண்பர்கள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்க உதவுகிறது மற்றும் அவர்களுக்கு ஒரு சிறந்த நேரத்தை அனுமதிக்கிறது என்று நான் நம்புகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
பெனடிக்ட் ஒவ்வொரு ஆண்டும் சென்னை பொள்ளாச்சியில் ஹாட் ஏர் பலூன் திருவிழாவை நடத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு 14 ஏக்கர் பரப்பளவில் மகாபலிபுரத்தில் உள்ள TTDC ஓஷன் வியூவில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி நடைபெறும் இடமே ஒரு அற்புதமான சூழலில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், காத்தாடிகள் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் ஆகியவை இடம் பெறும். மேலும், மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். நித்யஸ்ரீ, குமரன் டிரம்ஸ், கார்த்திக் தேவராஜ், திவாகர் போன்ற இசைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆகவே திருவிழாவில் நீங்கள் வருகை தரும் போது, பன்முகத்தன்மையைக் காண தயாராகுங்கள்.
ஏன் காத்தாடி திருவிழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்?
காத்தாடி திருவிழா தேதிகள் விடுமுறை நாட்களுடன் ஒத்திசைகின்றன.
ஆம், ஆகஸ்டில் வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் இந்த முதல் சர்வதேச காத்தாடி திருவிழா நடக்கிறது. எனவே, நீங்கள் சரியான வார இறுதி பயணத்தைத் திட்டமிடலாம்.
பல ஆயிரக்கணக்கான வண்ண வண்ண காத்தாடிகள் ஒரே நேரத்தில் வானத்தை அலங்கரிப்பதைக் காண நமக்கு கிடைக்கின்ற ஒரு அரிய நிகழ்வாகும். காத்தாடிகள் மட்டுமின்றி, ஷாப்பிங் செய்யலாம், பல வொர்க் ஷாப்கள்களில் பங்கேற்கலாம். கடற்கரையில் நம் குழந்தைகளுடன் நனையலாம். சுவைமிகு உணவுகளை ருசிக்கலாம்.
பல செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்குகள் வழங்கப்படுவதால், இது நிச்சயமாக தவறவிடக்கூடாத ஒரு சிறந்த நிகழ்வாகும். உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிகம் யோசிக்க வேண்டாம் & வரவிருக்கும் ஆகஸ்ட் வார இறுதிக்கான உங்கள் திட்டத்தில் தமிழ்நாடு சர்வதேச காத்தாடி விழாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!
நுழைவுக் கட்டணம் மற்றும் பிற தகவல்கள்
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த திருவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடையும்
மூன்று நாள் நிகழ்ச்சியாகும். குழந்தைகள்
திருவிழாவைப் பார்வையிடுவதற்கான கட்டணம் இலவசம், பெரியவர்கள் மட்டும் ரூ. 150
செலுத்தி டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
காத்தாடி திருவிழாவைப் பற்றி மேலும் அறிய www.tnikf.com என்ற இணையத்தளத்தை பார்வையிடவும். அல்லது 950000 1992 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளவும்.
பல வேடிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் கேளிக்கை நிறைந்த இந்த சர்வதேச காத்தாடி திருவிழாவை நிச்சயம் மிஸ் பண்ணிவிடாதீர்கள்!