நாட்டின் ஒவ்வொரு மூலையும் மின்னுகிறது, ஒளிர்கிறது, மூவண்ணங்களால் பிரகாசிக்கிறது! 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக, சுதந்திரத்திற்கு வித்திட்ட மகான்களை தியாகங்களை கெளரவிக்கும் விதமாக, நாட்டின் ஒவ்வொரு மூலையில் பிரகாசிக்கிறது.
கோட்டைகளும், கோவில்களும், அருங்காட்சியகங்களும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும், பள்ளிகளும், கல்லூரிகளும், ஒவ்வொரு நகரமும், கிராமமும், தெருவும் மூவர்ணத்தினால் ஜொலிக்கிறது.
எங்கும் பரந்து இருக்கின்ற தேசபக்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது!
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்திய அரசு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் விழாவைக் கொண்டாடுகிறது. மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், இந்தியக் கொடியின் வண்ணங்களில் ஒளிரும். ஆனால் உலக அதிசயங்களில் ஒன்றான, நம் அன்பின் அடையாளமான தாஜ்மஹால் மூவர்ணத்தில் மின்ன போவது இல்லை.
இதற்கு காரணம், தாஜ்மஹாலில் கடைசியாக மார்ச் 20, 1997 அன்று இரவு புகழ்பெற்ற பியானோ கலைஞரான யானியின் நிகழ்ச்சிக்காக விளக்கேற்றப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த மறுநாள் காலையில், வெள்ளைப் பளிங்கு கல்லில் செத்த பூச்சிகள் நிரம்பி வழிந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு பளிங்கு அரிப்பை ஏற்படுத்தியது.
யானியின் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இரசாயனப் பிரிவு, தாஜ்மஹாலை இரவில் எரியவிடக் கூடாது என்று பரிந்துரைத்தது, ஏனெனில் நினைவுச்சின்னத்தின் மேற்பரப்பில் பூச்சிகள் நிறைய கறைகளை விட்டுச் செல்கின்றன.
விளக்குகள் பூச்சிகளை ஈர்க்கின்றன, இது தாஜின் கட்டமைப்பை பாதிக்கலாம் என்று கருதி அந்த நிகழ்வுக்கு பிறகு தாஜ்மஹாலில் விளக்கு ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனால் இப்போது மட்டும் எப்போதுமே இந்த 17 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னத்தை பாதுகாக்கும் பொருட்டு, இரவில் விளக்குகள் ஏற்றப்பட மாட்டாது!
ஆனால் ஏற்கனவே, மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்தப்படி ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக செல்லலாம். அதன்படி இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்களும் இலவசமாக தாஜ்மஹாலைப் பார்வையிடலாம்!