எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் எதிலும் பொன்னியின் செல்வன்! ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ் அப் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் பொன்னியின் செல்வனே சமீப காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆம்! வீரம் நிறைந்த சோழர்களின் பொன்னாட்சி கால வரலாற்றைப் பிரதிபலிக்கும் இந்த படத்தை யார் தான் போற்றாமல் இருப்பார்கள். கதை தெரியாதவர்களும் கூட தேடித் பிடித்து தெரிந்துக் கொள்ளுகிறார்கள். நாமும் இந்தக் கதைக்குள் பிரயாணிக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன்
மாபெரும் கவிஞர், பத்திரிகையாளர், இந்திய சுதந்திர ஆர்வலர், ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி (எ) கல்கி 1950 களில் இந்த மாபெரும் சரித்திர காவியத்தை எழுதினார். 1950 மற்றும் 1954 க்கு இடையில், இது ஒரு தொடர் கதையாக கல்கியில் வெளியிடப்பட்டது.
அப்போது முதல் இதன் மீது கொண்ட மோகம் யாருக்கும் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும். வானதி பதிப்பகத்தால் 1955 இல் வெளியிடப்பட்ட ஐந்து பகுதிகள் கொண்ட புத்தகம், இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லாமல் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 70 வயது தாத்தா பாட்டிகள் முதல் 20 வயது இளசுகள் வரை அனைவரும் இங்கு பொன்னியின் செல்வன் ரசிகர்களாக உள்ளனர்.
பலரும் எடுக்க நினைத்த திரைப்படம்
இந்த நாவல் வந்த நாள் முதல் இதன் மீது வெகுஜன கூட்டம் காதல் கொண்டது. இக்கதையை திரைப்படமாக்க பலரும் முயன்றனர். 1970 களில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் இக்கதையை இயக்க ஆசைப்பட்டு அதை முயற்சியும் செய்தார், 1900 களில் உலக நாயகன் கமல்ஹாசன் இதை திரைப்படமாக்க முயன்றார்.
இவர்களைப் போல் பலரும் இக்கதையை திரைப்படமாக்க முயன்றனர். ஆனால் இதை சாத்தியமாக்கி காட்டிய பெருமை மணிரத்னம் அவர்களையே சேரும். செப்டம்பர் 30 இல் படம் வெளியாவதை ஒட்டி, படத்தின் பாடல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் மனதில் குதூகலத்தை உண்டாக்கி விட்டன.
இந்த மாபெரும் வரலாற்று சரித்திரத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்து இருக்கிறது. தமிழ்நாடே செப்டம்பர் 30 ஆம் தேதிக்காக காத்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
TTDC இன் "பொன்னியின் செல்வன் பாதை" டூர் பேக்கேஜ்
மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வெளியாவதையொட்டி TTDC உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த கதையுடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்ல அசத்தலான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த பயணம் மூன்று பகல், இரண்டு இரவு கொண்ட ஒரு பயணத் திட்டமாகும்.
ஃப்ளை ஹாலிடேஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேக்கேஜில் ட்ரிபிள் ஷேரிங்கில் ஒருவருக்கான கட்டணம் ரூ. 11,050 ஆகவும் டபுள் ஷேரிங்கில்
ஒருவருக்கான கட்டணம் ரூ. 11,950
ஆகவும் சோலோ டிராவலர்க்கு ரூ. 15,350 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
வந்தியத்தேவன் கடந்து வந்த பாதை
கதையில் வருவது போல் மாமல்லபுரத்தில் பயணம் தொடங்குகிறது; நாம் முதல் நாளில்
மகாபலிபுரம், வீரநாராயணபுரம் ஏரி, கொள்ளிடம் ஆறு, பழுவூர், கும்பகோணம் மற்றும் மேல்கடம்பூர் ஆகியவற்றை பார்வையிடலாம்.
இரண்டாம் நாளில் சோழ வம்சத்தின் தலைநகரங்களில் ஒன்றான பழையாரைக்கு செல்கிறோம். பின்னர் உடையாளூர், நந்தினியும் வந்தியத்தேவனும் சந்தித்த திருவையாறு, தாராசுரம் மற்றும் தலைநகரான தஞ்சாவூர் ஆகியவற்றை பார்வையிடலாம்.
மூன்றாம் நாளில் நாம் கோடியக்கரைக்கு செல்லலாம். பூங்குழலியின் பிரமையில் சற்று திளைதுவிட்டு, பின்னர் நாகப்பட்டினம் புத்தர் விகாரம், புதுச்சேரி வழியாக சென்னைக்கு வந்துவிடலாம்.
கதையின் நாயகனான வந்திய தேவனுடன் நாமும் சேர்ந்து பயணிக்க இது ஒரு அரிய வாய்ப்பு. இதை நிச்சயம் நழுவவிடாதீர்கள், மேலும் விவரங்களுக்கு TTDC இன் இணையத்தளத்தைப் பார்வையிடவும்!