உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட் கடவுள் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணனுடன் தொடர்பு கொண்ட ஒரு புண்ணிய பூமியாகும். விந்திய மலை சாரலில் அமைந்திருக்கும் இதன் அழகையும், கடவுளோடு தொடர்புக் கொண்ட வரலாற்றை ஆராயவும் சித்ரகூடுக்கு யாத்ரீகர்கள் எப்பொழுதுமே வருகை தந்துக் கொண்டு இருப்பார்கள்.
பிரபலமான சுற்றுலாத் தலமான சித்ரகூட் பல உள்கட்டமைப்பு திட்டங்களைக் கண்டு வருகிறது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையால், சித்ரகூடில் முதன்முதலாக டேபிள்டாப் விமான நிலையம் ஒன்று கட்டப்பட்டு இப்பொழுது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
டேபிள்டாப் விமான நிலையம் என்றால் என்ன?
பெயருக்கு ஏற்றார்போல், இது மலை அல்லது குன்றின் உச்சியில் மேல் அமைக்கப்படும் ஒரு விமான நிலையமாகும்.
பொதுவாக இது மலைப்பிரதேசங்களில் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை என்பது ஒரு பீடபூமி அல்லது மலையின் உச்சியில் அமைந்துள்ள ஓடுபாதையாகும். இதன் ஒரு முனை அல்லது இரண்டு முனைகளும் செங்குத்தான பள்ளத்தாக்கிற்கு அருகில் ஆழமாக விழுகிறது.
சித்ரகூடில் டேபிள்டாப் விமான நிலையம்
சித்ரகூடில் பல யாத்ரீக தலங்கள் இருப்பதால், இந்த நகரம் அதிகப்படியான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. பயணிகளின் வருகையை சிறப்பிக்க நிர்வகிக்க உதவும் வகையில், டேபிள்டாப் விமான நிலையமொன்று அமைக்க ஏற்கனவே விமான அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த விமான நிலையம், ரூ. 146 கோடி செலவில் கட்டப்பட்டு இப்போது திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது.
விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சித்ரகூட் விமான நிலையம் புந்தேல்கண்ட் பகுதியில் முழுமையாக செயல்படும் முதல் விமான நிலையமாக மாறப் போகிறது எனவும், இப்பகுதியானது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமான மண்டலமாக உள்ளது.
மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்ததும், உடான் திட்டத்தின் கீழ் 20 இருக்கைகள் கொண்ட விமானமும் இங்கிருந்து பறக்கத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரகூட்டின் சிறப்பம்சங்கள்
ஸ்ரீ ராமர் தனது வனவாசத்தின் பெரும்பகுதியை அதாவது சுமார் 11 ஆண்டுகள் காலம் இங்கு தான் கழித்தார் என சான்றுகள் கூறுகின்றன.
இந்த புண்ணிய பூமியான சித்ரகூட், விந்திய மலைகளின் சாரலில் அமைந்துள்ளது. இதன் வரலாறு மற்றும் அழகுக்காக உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ராமர், லட்சுமணர் மற்றும் சீதா தேவியை நினைவூட்டும் வகையில் இங்கு, குப்த் கோதாவரி, காமத்கிரி பர்வத், பாரத்குப், கணேஷ்பாக், சதி அனுசுயா ஆசிரமம், ராஜாபூர், தர்குடி, ஜான்கிகுண்ட், ராம்காட் மற்றும் பாரத் மிலாப் கோயில் மற்றும் சித்ரகூட் நீர்வீழ்ச்சி, அனுமன் ஓடை மற்றும் ஸ்படிக் ஷிலா போன்ற பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
ராமாயணத்தின் டிஜிட்டல் கேலரி & ராணிப்பூரில் உள்ள புதிய புலிகள் காப்பகம்
சித்ரகூடத்தில் புதிதாக டேபிள்டாப் விமான நிலையம் அமைத்ததோடு இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களும் அரங்கேற உள்ளன.
சித்ரகூடத்தின் பராமரிப்பை கவனித்து வரும் ஸ்ரீ சித்ரகூட் தாம் தீர்த்த மேம்பாட்டு கவுன்சில்,புனித யாத்திரை தலத்தின் வளமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், இயற்கை சூழலை மேலும் வளப்படுத்துவது உட்பட முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் பொறுப்பையும் நிர்வகித்து வருகின்றனர்.
5.29 கோடி செலவில் நீர்திரை மற்றும் டிஜிட்டல் ராமாயண கேலரியில் லேசர் ஷோ அமைக்கும் பணியை கவுன்சில் முடித்துள்ளது.
சித்ரகூடில் ராமாயண மாநாட்டின் கீழ் ராம்லீலா திரையரங்குகள், ஓவியப் போட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 29 அன்று நடைபெற்ற சர்வதேச புலிகள் தினம்-2022 அன்று, மாநிலத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக ராணிப்பூர் விரைவில் உருவாக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். சுற்றுலாத் துறையில் இந்த பாரிய முன்னேற்றங்களுடன், உத்தரப்பிரதேசம் இன்னும் பிரபலமாக போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.