வரலாறும் பாரம்பரியமும் நிறைந்த மேற்கு வங்காளம் பலதரப்பட்ட சுற்றுலா பயணிகளின் விருப்பமான தேர்வாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.ராஜாக்கள் ஆண்ட காலம் முதல், பிரிட்டிஷ் வரை பல ஆட்சியாளர்களைக் கண்ட மேற்கு வங்கம் பல வகையான சரித்திரங்களை கண்டுள்ளது.
அத்தகைய கடந்தக் கால வரலாற்றைப் பேணி காப்பதிலும் மேற்கு வங்காளம் சிறந்து விளங்குகிறது. இப்போது இதற்கு மகுடத்தின் மேல் மாணிக்கம் வைப்பது போல் ஒரு அருமையான விஷயம் அரங்கேறியுள்ளது.
கலாச்சாரத்தை கட்டி காப்பதற்கான விருது
ஆம்! மேற்கு வங்காளம் கலாச்சாரத்திற்கான சிறந்த இடத்திற்கான சர்வதேச சுற்றுலா விருதை தட்டி சென்றுள்ளது. திங்களன்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியின் போது மேற்கு வங்காளம், கலாச்சாரத்திற்கான சிறந்த இடத்திற்கான' சர்வதேச சுற்றுலா விருதை வென்றுள்ளது எனவும் 'உலகளாவிய கலாச்சார வரைபடத்தில் வங்காளம் தனது முத்திரையைப் பதித்துள்ளது' எனவும் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
பசிபிக் ஏரியா டிராவல் ரைட்டர்ஸ் அசோசியேஷன்
1998 இல் பிராந்தியத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பசிபிக் ஏரியா டிராவல் ரைட்டர்ஸ் அசோசியேஷன் நிறுவப்பட்டது. பொது மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதும், உலகளாவிய பயணம், சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றின் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிப்பதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
மார்ச் 9, 2023 அன்று பெர்லினில் நடைபெறும் உலக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இவ்விருது வழங்கப்படும், இதை முதல்வர் மம்தா பானர்ஜி பெற்றுக் கொள்வார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் இடம் பெற்றிருக்கும் துர்கா பூஜை
மேற்கு வங்காளத்தின் நூற்றாண்டுக் கால பழமையான துர்கா பூஜையை கௌரவிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அப்பண்டிகையை உலக பாரம்பரிய தளத்தின் பட்டியலில் சேர்த்தது. இந்த வருடாந்திர நிகழ்வின் போது மேற்கு வங்காளம் முழுவதுமே ஜொலிக்கும், வீடுகள், தெருக்கள் எங்கும் தோரணங்கள், வான வேடிக்கைகள், பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என மாநிலத்தின் மூலை முடுக்கு எங்கும் பூஜையின் எதிரொலிப்பை நாம் உணரலாம். இந்த பாரம்பரிய பண்டிகைக்கு கிடைத்த வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில் முதல்வர் மம்தா பேரணியும் நடத்தினார்.
பற்பல சிறப்புகள் நிறைந்த மேற்கு வங்கம்
கலாச்சாரம், பாரம்பரியம், இசை, இலக்கியம் மற்றும் வரலாறு சந்திக்கும் பூமி தான் இந்த மேற்கு வங்கம்! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த மண், செழுமையான படைப்புகளை நிறுவிய நோபல் பரிசு பெற்ற தாகூரின் மண், ஆஸ்கார் வின்னர் சத்யஜித் ரேயின் சொந்த இடமான மேற்கு வங்கத்தை, இமயமலையும், கடல்களும், சுந்தரவன காடுகளும், தேயிலை தோட்டங்களும், பல வகையான கோவில்களும், வரலாற்று கட்டிடங்களும் அலங்கரிக்கின்றன.
இத்தகைய பெருமைகள் அனைத்தும் தாங்கி நிற்கும் மேற்கு வங்கத்திற்கு பெருமைமிகு சுற்றுலா விருது கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தை சுற்றுலாப் புகலிடமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேலும் செயல்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறியுள்ளார்.
இது மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு பெருமையான தருணம் தான்!