பனஸ்கன்தா மாவட்டத்தின் தலைநகரான பாலன்பூர், பண்டைய காலத்தில் ப்ரஹலாதன் என்கிற அரசரால் தோற்றுவிக்கப்பட்டு, பரமரா ராஜ்புத்ர பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது.
பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது இதை லோஹனி ஆப்கானியர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட சுதேச ராஜ்ஜியமாக ஆண்டு வந்தார்கள். அவர்களுடைய ஆட்சியின் கீழ் பாலன்பூர் புகழ்பெற்று விளங்கியது.
அன்றைய பாலன்பூர் ராஜ்ஜியம் என்பது இன்றைய குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும் மற்றொரு பகுதியில் சபர்மதி ஆறும் அமைந்துள்ளன.
இந்த நகரத்தில் ஏழு நுழைவாயில்களை உடைய கோட்டை ஒன்று உள்ளது. அது தற்பொழுது கிட்டத்தட்ட சிதிலமடைந்து பாழடைந்து விட்டது. சிம்லா கேட், தில்லி கேட், மீரா கேட் மற்றும் காத்ஹம்மன் கேட் போன்றவை அந்த ஏழு வாயில்களில் மிக முக்கியமானவை.
கீர்த்திகும்ப், ஜோர்வார் அரண்மனை, பல்ராம் அரண்மனை போன்ற வரலாற்று நினைவு சின்னங்கள் பாலன்பூரின் கடந்த கால பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த இடத்தை சுற்றிலும் இந்து மற்றும் சமண மதத்தைச் சேர்ந்த பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக ப்ரஹலாத அரசரால் கட்டப்பட்ட பல்லவிய பரஸ்வன்த் அல்லது மோட்டு டிரேஸர் மற்றும் நானு டிரேஸர் போன்றவை பாலன்பூரின் புகழ்பெற்ற சமண மதக் கோவில்களாகும்.
கீர்த்திகும்ப் அருகே அமைந்துள்ள படாலேஷ்வர் மகாதேவ் கோவில் மற்றும் மோடா ராம்ஜி மந்திர் போன்றவை புகழ்பெற்ற இந்துக் கோவில்கள் ஆகும்.
பாலன்பூருக்கு அருகில் உள்ள அம்பாஜி கோவில், கேதார்நாத் மகாதேவ் கோவில் மற்றும் பல்ராம் மகாதேவ் கோவில் போன்ற பல இந்து மதக் கோவில்களுக்கு பயணிகள் சென்று வரலாம்.