கோவா என்று சொன்னாலே பலருக்கும் அதன் தலைநகர் பனாஜிதான் நினைவுக்கு வரும். இந்த பனாஜி, மிகப்பெரிய நகரமல்ல, அதேபோல் அதிக மக்கள் தொகையையும் கொண்டிருக்கவில்லை. எனினும் கேளிக்கைக்கும், கொண்டாட்டத்துக்கும் மையமாக விளங்கும் பனாஜி உங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கப் போவது நிச்சயம்.
பனாஜி நகரம் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு மகிழ்ச்சி வெள்ளம் மட்டுமே கரைபுரண்டு ஓடுமே தவிர, வேறு வெள்ளத்தை நீங்கள் ஒரு போதும் காண முடியாது. அதன் காரணமாகவே 'வெள்ளத்தை கண்டிராத பூமி' என்ற அர்த்தத்தில் பனாஜி என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது.
பனாஜி நகருக்கு முதன் முதலாக வருபவர்கள் அது கோவாவின் மற்ற பகுதிகளை காட்டிலும் பரபரப்பு மிகுந்ததாக காட்சியளிப்பது இயல்பே. எனினும் இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து வருபவர்களுக்கு பனாஜி நகரம் என்றுமே அமைதியின் சுகந்தத்தைத் தரும் அருமருந்தாகவே இருந்து வருகிறது.
அதுவும் குறிப்பாக தங்களுடைய தினசரி இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு 2 மாதம், 3 மாதம் என்று ஓய்வு எடுப்பதற்காக பனாஜி நகரில் வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்தை தாண்டும்.
மேலும் இங்கு உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மையங்கள் போன்றவை உங்களுடைய விடுமுறை நாட்களை இன்பமயமாக கழிக்க ஏற்றவையாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் கேளிக்கை பகுதிகளான வடக்கு கோவாவுக்கும், புராதனப் பெருமை வாய்ந்த வாஸ்கோ, மர்ம கோவா போன்ற தெற்கு கோவா பகுதிகளுக்கும் பனாஜி நகரிலிருந்து வெகு சுலபமாக சென்று விட முடியும்.
பனாஜியில் உள்ள கோவாவின் மூதாதையர் அருங்காட்சியகம் சரித்திர ஆர்வலர்களுக்காக பல செய்திகளை கொண்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கோவாவின் ரப்பர் தோட்டம் பற்றிய செய்திகள், லெஜன்ட் ஆஃப் பிக் ஃபீட் போன்றவை பயணிகளிடையே மிகப் பிரபலம். இதில் பிக் ஃபீட் தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மரத்தினாலான பண்டைய காலப் பொருட்கள், கலைப்பொருட்கள், ஏராளமான இந்திய ஓவியங்கள் என்று எண்ணற்ற பழங்கால பொருட்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பயணிகளும், மாணவர்களும், கலை ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
நீங்கள் பனாஜியில் இருக்கும் போது மெட்டா பாலம் என்று அழைக்கப்படும் பன்ஸ்டரிம் பாலத்துக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இந்தப் பாலம் பனாஜி பாலமென்றும், மாண்டோவி நதியின் மேல் கட்டப்பட்டிருப்பதால் மாண்டோவி பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மீது நின்றுகொண்டு அந்தி வேளையில் மாண்டோவி நதியின் அழகை ரசிக்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.
பன்ஸ்டரிம் பாலம் 1980-களில் பலமுறை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இதில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான மக்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கடந்த முப்பது வருடங்களாக ஃபெர்ரி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். எனினும் தொடர்ந்து இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ரெய்ஸ் மகோஸ் கோட்டைக்காக புகழ்பெற்ற ரெய்ஸ் மகோஸ் கிராமம் பனாஜி நகருக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த ரெய்ஸ் மகோஸ் கோட்டை, கோவாவின் மற்றொரு பிரசித்தி பெற்ற கோட்டையான அகுவாடா கோட்டைக்கு 50 வருடத்துக்கு முன்பு கட்டப்பட்டிருகிறது. மேலும் இது சமீபத்தில்தான் புதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் உச்சியிலிருந்து பனாஜி நகரின் பேரழகை நீங்கள் பரிபூரணமாக கண்டு மகிழலாம்.
பனாஜி அதன் ஆன்மீக தலங்களுக்காகவும் பயணிகளிடையே பிரசித்தம். இங்கு உள்ள செயின்ட் கேத்தரின் மற்றும் பனாஜி தேவாலயங்களுக்காகவும், மகாலட்சுமி மற்றும் மாருதி ஆகிய ஹிந்து கோயில்களுக்காகவும் இந்த நகரம் ஆன்மீக மையம் என்ற பெயரையும் தாங்கி நிற்கிறது.
பனாஜி நகரில் 2012-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுவையான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பனாஜி நகரில் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து காளைச் சண்டைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அந்த ஏற்பாட்டை பனாஜி நகர அதிகாரிகள் ஆரம்பத்திலேயே தடுத்தி நிறுத்தி விட்டார்கள்.
பனாஜி நகரை கோவாவின் மற்ற பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாக சுலபமாக அடைந்து விடலாம். மாறாக நீங்கள் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பனாஜி நகருக்கு செல்வீர்களானால், ஆங்காங்கு காணப்படும் அறிவுப்பு பலகைகள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
அதோடு மும்பை அல்லது புனேவிலிருந்து, கோவா நகருக்கு பயணிக்கும் போது, நீங்கள் முதலில் அடைவது பனாஜியாகத்தான் இருக்கும். மேலும், கோவா விமான நிலையத்திலிருந்து வாடகை கார்கள் மூலம் பனாஜி நகரை நீங்கள் 30 நிமிடத்தில் அடைந்து விட முடியும்.