பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தை ஒட்டியுள்ள சங்தாங் பீடபூமியில் இந்த ஏரி அமைந்திருக்கிறது. 134 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஏரியின் பாதிக்கு மேற்பட்ட பகுதி திபெத்திற்குள் பரவியுள்ளது. இந்திய தேசத்திற்குள் சீனாவின் ஊடுருவலை தெளிவாக கண்காணிக்க வசதியான பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்து இரு நாடுகளுக்கிடையே, உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் இது அமையப்பெற்றுள்ளது. இதன் நடுவே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு செல்கிறது.
இது உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. இந்த ஏரியின் தண்ணீர் உப்பு மிகுந்துள்ளதால் நுண்ணுயிரிகளும், நுண் தண்ணீர் தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன.
இந்த ஏரியை சுற்றிலுமுள்ள சதுப்பு நிலத்தில், ஒரு சிலவகை பல்லாண்டு தாவரங்களும், புதர்களும் வளர்ந்துள்ளன. இடம்பெயரும் பறவைகள் உள்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள், இனப்பெருக்கத்திற்காக இந்த ஏரியை தேர்ந்தெடுத்து குஞ்சு பொரிக்க இங்கு வருகின்றன.
பார் போன்ற தலையுடைய வாத்து மற்றும் பிராமினி வாத்துக்களும், மார்மோத், கியாங்க் என்னும் வனவிலங்குகளும் இங்கு காணப்படுகின்றன.
நீர்வாழ் உயிரிகளை காப்பாற்றுவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட, ராம்சார் கன்வென்ஷன் (Ramsar Convention) எனப்படும் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்த ஏரி உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டால், இவ்வமைப்பினால் தேர்ந்தெடுக்கப்படும் எல்லைக்கு அப்பாலுள்ள முதல் தெற்கு ஆசிய ஏரி இதுவாகத்தானிருக்கும். கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஏரியில், சேறும் சகதியும், மண்ணும் படிந்து ஏரியின் பரப்பளவும் கொள்ளளவும் சுருங்கிகொண்டே வருவதாக ஆவணங்கள் கூறுகின்றன.
2006 ஆம் ஆண்டில் "த ஃபால்" மற்றும் 2010 ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில், இந்த ஏரியின் அழகுக் காட்சிகள், படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகே இந்த ஏரிப் பகுதி சர்வதேச சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலம் ஆக தொடங்கியது.
இப்பகுதியில் வெம்மையான கோடையும், மிகக் குளிரான குளிர்காலமும் நிலவுகிறது. மே முதல் செப்டம்பர் வரை நீளும் கோடையில் இப்பகுதிக்கு சுற்றுலா வர பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனெனில், இக்காலத்தில் இங்கு வெப்பநிலையானது 5°C முதல் 40°C வரை நிலவும். ஜூலை முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்திலும் இப்பகுதிக்கு சுற்றுலா வரலாம்.
அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை -14°C க்குக் கீழே செல்லலாம். அதிகபட்ச வெப்பநிலை 24°C க்கு மேல் செல்வதில்லை. இக்காலங்களில் இங்கு சுற்றுலா செல்வது உகந்தது ஆகாது.
பாங்காங்கிலிருந்து 218 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லே விமான நிலையத்திலிருந்து பயணிகள் இங்கு வரலாம். ஜம்மு தாவி ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்து வந்து, அங்கிருந்து வாடகை கார்கள் மூலம் இங்கு வந்து சேரலாம். பாங்காங்கிற்கு அருகிலுள்ள பேருந்து நிலையம், 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லேவின் பியாங்க் ட்ரோக்போ பேருந்து நிலையமாகும்.