பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக விளங்குகிறது. இமயமலைக்கு செல்லும் முன் பல சுற்றுலாப் பயணிகள் இந்நகருக்கு வருவதுண்டு. 1849-ஆம் ஆண்டு வரை, பதானியா குலத்தை சேர்ந்தவர்கள் ஆண்ட நூர்பூர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கியது பதான்கோட்.
பதான்கோட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
பதான்கோட்டிலும் அதனை சுற்றியும் பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று தான் 900 ஆண்டுகளுக்கு முன் பதானியா ராஜ்புட்களால் கட்டப்பட்ட நூர்பூர் கோட்டையாகும்.
இது போக ஷாஹ்பூர்கண்டி கோட்டை, கத்கர் சிவன் கோவில் மற்றும் ஜுகியல் நகரியம் போன்றவைகள் புகழ் பெற்ற தலங்களாக உள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் பதான்கோட்டின் உள்ளூர் விடுமுறை தினங்களை களிக்க புகழ் பெற்ற தலங்களான ஜ்வாலாஜி மற்றும் சிண்ட்பூர்ணிக்கு செல்லலாம்.
பதான்கோட்டில் என்னென்ன செய்யலாம்?
வருடம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் என்பதால் பதான்கோட்டில் சொகுசாக தங்கவும் சுவையான உணவை ருசிக்கவும் பல ஹோட்டல்கள் உள்ளன. நகரத்திற்குள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வட இந்திய உணவுகள் மற்றும் பஞ்சாபி உணவுகளை வழங்குகிறது அங்குள்ள பல தாபாக்கள்.
சுற்றுலாத் தலங்களை தவிர பதான்கோட் சுற்றுலா ஷாப்பிங் செய்யவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மிஷன் சாலை, சுஜன்பூர் மார்கெட் மற்றும் காந்தி சௌக் ஆகியவை தான் இங்குள்ள புகழ் பெற்ற ஷாப்பிங் மையங்கள். சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகமாக விரும்பி வாங்கும் புகழ் பெற்ற பொருளாக விளங்குகிறது பஷிமானா சால்வை.
பதான்கோட்டை அடைவது எப்படி?
சீரான முறையில் இயங்கும் பேருந்துகள் மற்றும் இரயில்கள் மூலமாக நாட்டிலுள்ள பல இடங்களுடன் பதான்கோட் இணைக்கப்பட்டுள்ளது. பதான்கோட் மற்றும் சக்கி பேங்க் என இகு இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன.
இதில் சக்கி பேங்க் பதான்கோட்டிலிருந்து வெறும் 4 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. இரயில் நிலையத்திற்கு அருகில் தான் பேருந்து நிலையமும் இருக்கிறது.
இங்கிருந்து சிம்லா, புது டெல்லி மற்றும் சண்டிகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு அவர்கள் வசதிக்கேற்ப அரசு பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகளை பயன்படுத்தலாம்.
பதான்கோட்டிற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த காலம்
வட இந்தியாவில் அமைந்துள்ளதால் பதான்கோட்டில் கடுமையான வெப்பம் நிறைந்த கோடைக்காலம், ஈரப்பதம் நிறைந்த பருவக்காலம் மற்றும் உறைய வைக்கும் குளிர் காலம் நிலவும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வானிலை இனிமையாக இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்தது.