தென் கிழக்கு பஞ்சாபில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான பட்டியாலா கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சர்தார் லக்னா மற்றும் பாபா ஆலா சிங்கால் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை வலுவான கோட்டையை போல் மாற்றியவர் நரேந்தர சிங் மகராஜா (1845-1862). இந்த நகரத்தை சுற்றி பல அகழி மதில்களும் பத்து கதவுகளும் உள்ளன.
இங்கு அதிகமாக பேசப்படும் பஞ்சாபி மொழி போக, ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் பேசப்படுகின்றன. தீபாவளி, ஹோலி, தசரா, குர்புராப் மற்றும் பைசக்ஹி போன்ற முக்கிய திருவிழாக்கள் இங்கே கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
மேலும் 'பட்டியாலா ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல்' என்ற திருவிழா இங்கே மட்டும் தான் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா பட்டியாலா சுற்றுலாவின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் இந்த திருவிழா, இசை மற்றும் கலைகளின் விரும்பிகளை பெரிதும் ஈர்க்கும் வண்ணம் விளங்கும். இங்கு பத்து நாட்களுக்கு நடைபெறும் கைவினை பொருட்களின் மேளா தான் முதன்மையான ஈர்ப்பாக அமைகிறது. இந்த நகரத்தை ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் இசை வாழுமிடம் என்றும் அழைக்கின்றனர்.
பட்டியாலா மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
வளமையான பண்பாட்டை சார்ந்த சுற்றுலாத் தலங்கள் பல உள்ள இடமாக உள்ளதால் பட்டியாலா சுற்றுலா அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. இங்கே பல கோட்டைகளும் தோட்டங்களும் உள்ளன.
கிலா முபாரக் வளாகம், ஷீஷ் மஹால், பரடாரி தோட்டம், கிலா அன்ட்ரூன், ரங் மஹால், மைஜி டி சராய், மால் சாலை மற்றும் தர்பார் ஹால் போன்றவைகள் அவற்றில் சில. சமனா, பனூர் மற்றும் சனௌர் போன்ற தலங்கள் பாட்டியாலாவுக்கு அருகில் இருக்கும் இதர சுற்றுலாத் தலங்களாகும்.
பட்டியாலா அளிக்கும் முக்கிய பொருட்கள்
தலைப்பாகை (பக்ரி), பரண்டா (ஒரு வகை தலை முடி பின்னல்), பாட்டியாலா சல்வார் (பெண்களின் சுடிதார் வகை), ஜுட்டி (ஒரு வகை காலனி), பட்டியாலாவின் பெக் (மதுவை அளவிடும் கிண்ணம்) போன்ற பொருட்கள் பட்டியாலா சுற்றுலாவை புகழ் பெறச் செய்துள்ளன.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதனை தங்களுக்காகவோ அல்லது தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவோ வாங்கிச் செல்லலாம். சிக்கனமான 3 நட்சத்திர தங்கும் விடுதிகள் இங்கே நிறைய அமையப்பெற்றுள்ளன.
பட்டியாலாவை அடைவது எப்படி?
பட்டியாலாவை பேருந்து, இரயில், டாக்சி அல்லது விமானம் மூலமாக வந்தடையலாம். இந்த நகருத்துடன் பேருந்து மற்றும் இரயில் மூலமாக பல இடங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கே சுலபமாக வர முடியும்.
மும்பை, சண்டிகர் மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இங்கு வருவதற்கு சீரான இரயில் சேவைகள் உள்ளன. இங்கிருந்து 60 கி.மீ. தொலைவில் சண்டிகர் விமான நிலையம் உள்ளது.
சுற்றுலா வருவதற்கான உகந்த காலம்
அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலங்களே பட்டியாலா சுற்றுலா வருவதற்கு சிறந்த காலங்கள். இக்காலத்தில் இங்கே குளிர்ந்த தென்றலும் இனிமையான வானிலையும் நிலவும்.