உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் மிக அழகிய பகுதி பவுரி ஆகும். பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. கண்டோலியா மலைகளின் வடக்குச் சரிவில் அமைந்திருக்கும் இந்த பவுரி, காடுகளால் நிறைந்த ஒரு அழகிய பகுதியாகும். இந்த பகுதியில் இறைவன் அளித்திருக்கும் இயற்கை அழகை அள்ளிப் பருக நம் ஒவ்வொருவரின் உள்ளமும் துடிக்கும்.
பனியால் போர்த்தப்பட்டிருக்கும் பந்தர்புன்ச் மலை, ஜனலி மலை, கங்கோதரி குரூப், நந்ததேவி மலை, திரிசூல் மலை, சவுக்கம்பா மலை, கோரி பர்வத் மலை, ஹதி பர்வத் மலை, சுவர்க்கரோகினி மலை, ஜோகின் குரூப், தலாய சாகர் மலை, கேதர்நாத் மலை, சுமேரு மலை மற்றும் நீல்காந்த் மலை போன்றவற்றின் அழகுக் காட்சிகளை பவுரியிலிருந்து பார்த்து ரசிக்கலாம். மேலும் அலகந்தா மற்றும் நயர் ஆகிய ஆறுகள் பவரி மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளாகும்.
ஆலயங்களுக்கும் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு சொர்க்கபுரியாக பவுரி விளங்குகிறது. சக்கும்பா என்ற சுற்றுலாத் தலத்திலிருந்து இமயமலையின் இயற்கை எழில் கொஞ்சும் மலைச் சிகரங்கள் மற்றும் பனியாறுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.
இந்த பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீ உயரத்தில் அமைந்திருக்கும் கிர்சு என்ற சுற்றுலாத் தலம் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இந்த பகுதிக்கு வந்தால் அது சுற்றுலா பயணிகளை நகரத்தின் நரக வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் விடுதலை கொடுக்கும். இங்கு ஒலிக்கும் பறவைகளின் அமுத கானம் நம் மனங்களை கிறங்கடிக்கும்.
பவுரியிலிருந்து 16 கிமீ தொலைவில் தரி தேவி என்ற ஒரு பகுதியும் உள்ளது. இது ஒரு ஆன்மீகத் தலமாகும். இங்குள்ள ஆலயத்தில் தரி என்ற பெண் தெய்வம் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்மழை பொழிகிறார்.
மேலும் இந்த பகுதியில் கியுன்களேஷ்வர் மகாதேவ் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் சிவபெருமானுக்கு நேரந்தளிக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தை ஆதி சங்கராச்சாரியா அவர்கள் கட்டியுள்ளார்.
பவுரியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் டூத்தடோலி ஆகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமான இந்து சமய கோயில்கள் உள்ளன.
குறிப்பாக கண்டோலியா ஆலயம், சித்திபலி ஆலயம், சங்கர் மாத், கெஷோரி மாத், மற்றும் ஜிவல்ப தேவி ஆலயம் போன்றவை மிகவும் பிரபலமான ஆலயங்கள் ஆகும்.
மேலும் இந்த பகுதியில் இருக்கும் லல்ட்ஹாங்க், அத்வானி, தாரா குண்ட், கோட்வாரா, பாரத் நகர் மற்றும் சிரிநகர் போன்ற சுற்றுலாத் தளங்களையும் கண்டு களிக்கலாம். தேவல் மற்றும் கண்டல் ஆகிய பகுகிகள் பழங்கால இந்து ஆலயங்களை தரிசிக்க வழிசெய்கிறது.
பவுரி பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும் மற்றும் சைக்கிள் ஓட்டுவதும் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாகும். பவுரி பகுதிகளுக்கு மிக எளிதாக சென்று வரமுடியும்.
பவுரியிலிருந்து 185 கிமீ தொலைவில் உள்ள டேராடூன் நகரில் ஒரு விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுபோல் பவுரிக்கு அருகில் கோத்வாரா தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது.
இந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி வாடகை டாக்ஸிகள் மூலம் பவுரிக்கு மிக எளிதாகச் சென்று வரலாம். மேலும் ரிஷிகேஷ், ஹரித்வார், டேராடூன் மற்றும் முசூரி போன்ற நகர்களிலிருந்து பவருரிக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் மூலமும் பவுரிக்கு மிக எளிதாக சென்றுவரலாம். மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை பவுரி பகுதி மிக மிதமான தட்பவெப்பநிலையைக் கொண்டிருப்பதால் இந்த மாதங்களில் பவுரி பகுதிகளுக்கு சென்று வரலாம்.