உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும் மறுபுறம் அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. காளி ஆறு ஆறு இம்மாவட்டத்தையும் நேபாள் பகுதியையும் பிரிக்கிறது. இங்குள்ள பெரும்பாலான புராதனக்கோயில்கள் மற்றும் கோட்டைகள் போன்றவை பால் மற்றும் சந்த் வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கின்றன.
15ம் நூற்றாண்டில் இப்பகுதி பிராஹ்ம் மன்னர்களால் சிறிது காலத்திற்கு ஆளப்பட்டிருக்கிறது. பின்னர் சந்த் வம்சத்தினர் இப்பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றும் வரையில் ஆண்டு வந்துள்ளனர்.
பித்தோராகர் பகுதியில் குமோனி மொழியானது இங்கு வசிக்கும் பூர்வ குடிகளால் பேசப்படுகிறது. சுண்ணாம்புக்கற்கள், செம்பு, மக்னீஷயம் மற்றும் சிலேட் போன்ற இயற்கைத்தாதுபொருட்கள் இப்பகுதியில் ஏராளமாக கிடைக்கின்றன.
சல், சிர் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த பசுமை மாறாக்காடுகளால் இப்பகுதி சூழப்பட்டிருக்கிறது. ஹிமாலயன் சமோயிஸ், சம்பார் மான் மற்றும் புலி போன்றவற்றோடு வேறு பல ஊர்வன ஜந்துக்களும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.
பல கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவ ஸ்தாபன பள்ளிக்கூடங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலேயே இம்மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ளன.
பித்தோராகர் மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள கபிலேஷ்வர் மஹாதேவ் கோயில் எனும் பிரசித்தமான கோயிலை தரிசிக்கலாம். இது ஒரு சிவன் கோயிலாகும்.
உள்ளூர் கதைகளின்படி கபில முனிவர் இந்த ஸ்தலத்தில் தவம் புரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சிவராத்திரி திருநாளின்போது ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். தல் கேதார் எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமும் பித்தோராகர் நகருக்கு தெற்கே 8 கி.மீ தூரத்தில் உள்ளது.
பித்தோராகர் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள அஷுர் சுலா எனும் ரம்மியமான சரணாலயத்திற்கும் பயணிகள் விஜயம் செய்து மகிழலாம். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 5412 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
தவிர, முன்ஷ்யாரி எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் ஜோஹர் பகுதிக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இந்த நுழைவாயில் பகுதி மில்லம், நாமிக் மற்றும் ரலாம் பனிமலைகளுக்கான பாதைகளை இணைக்கிறது.
பித்தோராகர் கோட்டை இப்பகுதியின் புகழ் பெற்ற சுற்றுலா அம்சமாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. இது 1789ம் ஆண்டில் பித்தோராகர் பகுதியை ஆக்கிரமித்த கூர்க்கா வம்சத்தாரால் கட்டப்பட்டிருக்கிறது.
கஸ்தூரி மான்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அஸ்கோட் மஸ்க் டீர் சரணாலயத்திற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். இந்த சரணாலயத்தில் கஸ்தூரி மான்கள் தவிர சிறுத்தை, காட்டுப்பூனை, புனுகுப்பூனை, குரைக்கும் மான், கோரல், பழுப்புக்கரடி, பனிச்சிறுத்தை, ஹிமாலய கருப்பு கரடி மற்றும் பரல் போன்ற விலங்குகளையும் இங்கு பார்க்கலாம். மேலும் பனிக்கோழி, மோனல், காக்கை மற்றும் சுக்கோர் போன்ற பறவைகளும் இங்கு வசிக்கின்றன.
பித்தோராகர் நகரிலிருந்து 68 கி.மீ தூரத்தில் ஜௌல்ஜிபி எனும் மற்றொரு பிரசித்தமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது. இது கோரி மற்றும் காளி ஆறுகள் சந்திக்கும் ஸ்தலமாகும்.
மகர சங்கராந்தி திருநாளின்போது இங்கு ஒரு பிரசித்தமான திருவிழாச்சந்தை நடத்தப்படுகிறது. 1914ம் வருடம் நவம்பர் மாதத்திலிருந்து இத்திருவிழா நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகுலேஷ்வரர் கோயில் எனும் ஒரு முக்கியமான கோயில் ஒன்றும் பித்தோராகர் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் கஜூராஹோ கோயில்களின் கட்டிடக்கலை அம்சங்களை ஒத்திருக்கிறது.
அர்ஜுனேஷ்வர் கோயில், சந்தக், மொஸ்தமனு கோயில், த்வஜ் கோயில், கோட் காரி தேவி கோயில், திதிஹாத், நாராயண் ஆஷ்ரம் மற்றும் ஜுலாகட் போன்றவை இங்குள்ள இதர புகழ் பெற்ற சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.
பனிச்சறுக்கு, கிளைடைங் மற்றும் பாராசூட் பறப்பு போன்ற சாகச பொழுது போக்கு அம்சங்களுக்கும் இந்த பகுதி பெயர் பெற்று அறியப்படுகிறது.
விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக பித்தோராகர் நகருக்கு பயணம் மேற்கொள்ள போக்குவரத்து வசதிகள் உள்ளன. பந்த்நகர் விமானநிலையம் மற்றும் தனக்பூர் ரயில்நிலையம் ஆகியவை பித்தோராகர் நகருக்கு அருகில் அமைந்துள்ளன. கோடைக்காலம் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கேற்ற இனிமையான சூழலைக்கொண்டிருக்கிறது.