அளவில் சிறியதான இந்த பேரன் தீவு(மலட்டு தீவு) போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 84 மைல் வடகிழக்கே அமைந்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரே உயிருள்ள (தற்போதும் புகைந்துகொண்டிருக்கும்) எரிமலை இந்த தீவில் உள்ளது.
எல்லாவித இயற்கைப்பிரதேசங்களையும் பார்த்துவிட வேண்டும் என்ற மனித இனத்தின் தகிக்கமுடியாத ஆவல்தான் இந்த தீவுப்பகுதியையும் ஒரு சுற்றுலாத்தலமாக அறிய வைத்துள்ளது.
பெயருக்கேற்றபடி இந்த பேரன் தீவு மலட்டு தீவாகவே காட்சியளிக்கிறது. இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை என்பதோடு வேறு உயிரினங்களும் அதிகம் காணப்படுவதில்லை.
இருப்பினும் இங்கு வசிக்கும் ஒன்றிரண்டு உயிரினங்களும் அரிய வகையை சார்ந்ததாக உள்ளன. இங்கு ‘ஃபெரல் கோட்ஸ்’ எனப்படும் ‘காட்டு ஆடுகள்’ வசிக்கின்றன. நீண்ட காலத்துக்கு முன்னர் கடற்பயணிகளால் இந்த தீவுப்பகுதியில் விடப்பட்ட ஆடுகளிலிருந்து இவை பெருகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உப்புக்கடல் நீரை மட்டுமே சார்ந்து வாழ்ந்து இந்த தீவின் கடுமையான சூழலில் இவை பிழைத்து பெருகியிருக்கின்றன. பறக்கும் நரி எனப்படும் ராட்சத வௌவால்களும் சில எலி வகைகளும் இந்த தீவில் காணப்படும் இதர உயிரினங்களாகும்.
கடைசியாக 1994 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் இந்த எரிமலைகளில் நெருப்புச் சீற்றம் (எரிமலை வெடிப்பு) ஏற்பட்டது. இதில் இரண்டாவது சீற்றம் 2004ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி ஆழிப்பேரலையின் எதிரொலி என்பதாகவும் புவியியல் நிபுணர்களால் கருதப்படுகிறது.