சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் ராய்பூர் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநகரமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுற்றுலாக்கேந்திரமாகவும் திகழ்கிறது. இந்தியாவின் அரிசிக்கிண்ணம் என்றும் குறிப்பிடப்படும் இந்த ராய்பூர் பகுதி தற்போது தொழிற்நுட்பத்துறை மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றில் வெகுவாக முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
ராய்பூர் மற்றும் சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்கள்
உற்சாகமூட்டும் விடுமுறை பொழுதுபோக்கு அனுபவங்களை அளிப்பதில் சத்தீஸ்கர் மாநிலத்திலேயே இந்த ராய்பூர் நகரம் முன்னணியில் உள்ளது. முன்னர் இப்பகுதியின் சுற்றுலா கவர்ச்சிகள் அவ்வளவாக வெளி உலகிற்கு தெரியவில்லை என்றாலும் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இந்த நகரம் பிரபல்யமடைந்துவருகிறது.
ராய்பூர் நகரில் கலவையான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. தூததாரி மடாலயம், மஹந்த் கஸிதாஸ் மியூசியம், விவேகானந்தா சரோவர், விவேகானந்தா ஆஷ்ரம், ஷாதனி தர்பார் மற்றும் ஃபிங்கேஷ்வர் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள வரலாற்றுச்சின்னங்களும், புராதன சிதிலங்களும் வெளிநாட்டுப்பயணிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன.
நாகர் காடி எனும் இசைக்கடிகாரம் இந்த நகரத்தின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான சுவாரசிய அம்சமாக அமைந்திருக்கிறது. இது ஒவ்வொரு மணி நேரத்தையும் குறிக்கும் மணி ஓசைக்கு முன்னர் உள்ளூர் பாரம்பரிய இசையையும் ஒலிக்கிறது. இது தவிர இந்நகரத்தில் உள்ள ராஜிவ் காந்தி வன் & உர்ஜா பவன் எனும் வளாகம் முழு சூரிய மின்சக்தி பயன்பாட்டினை கொண்டுள்ளது.
இவை தவிர பலாரி, ஷாஹித் ஸ்மாரக் பவன், மஹாவீர் பார்க், புகௌடி முக்தாங்கன் மியூசியம், மஹாகோஷல் கலா பரிஷத், சந்திரகுரி மற்றும் கிரோத்புரி போன்றவை இந்நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்திருக்கின்றன.
ராய்பூர் நகரத்தின் சுருக்கமான வரலாறு
ராய்பூர் நகரம் ஆதியில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் அங்கமாக இருந்து வந்தது. அம்மாநிலத்தில் இந்தோருக்கு அடுத்தபடியான தொழில் வணிகக்கேந்திரமாக இது புகழ் பெற்றிருந்தது.
பொருளாதார ரீதியாக விவசாயத்தொழில், இரும்பு, சிமெண்ட், உலோகம், அவல் மற்றும் அரிசி போன்ற அம்சங்களை இந்த நகரம் சார்ந்திருந்தது. தற்போது இது இன்னும் வளர்ச்சியடைந்து நிலக்கரி, மின்சாரம், பிளைவுட், இரும்பு மற்றும் அலுமினியம் உற்பத்தி என்று பரந்த அளவில் ஒரு தொழிற்கேந்திரமாக மாறியுள்ளது.
ராய்பூர் மக்கள் மற்றும் கலாச்சாரம்
ராய்பூர் நகரவாசிகள் பெரும்பாலும் பாரம்பரிய சட்டிஸ்காரிகளாக உள்ளனர். இவர்களை தவிர்த்து வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதியிலிருந்து வந்திருக்கும் சிறுபகுதியினர் என்று இந்த ராய்பூரில் வசிக்கின்றனர்.
ஒடிசா மாநிலத்துக்கு அருகில் அமைந்திருப்பதால் இப்பகுதியில் ஒரியா மொழி பரவலாக பேசப்படுகிறது. ஹரேலி திருவிழா, போலா திருவிழா மற்றும் தீஜா திருவிழா போன்றவை இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
எப்படி செல்வது ராய்பூருக்கு?
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் அண்டை மாநில நகரங்களுடன் போக்குவரத்து வசதிகளால் நல்ல முறையில் ராய்பூர் நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது.
எப்போது சுற்றுலா மேற்கொள்ளலாம்
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலப் பருவம் ராய்பூருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.