அல்மோரா மாவட்டத்தில் உள்ள இந்த ராணிக்கேத் எனும் ரம்மியமான மலைவாசஸ்தலம் ‘ராணியின் புல்வெளிப்பிரதேசம்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கதைகளின்படி குமாவூங் ராஜ்ஜியத்தின் அழகிய ராணியான பத்மினி இந்த ஸ்தலத்தின் இயற்கை எழிலால் மிகவும் கவரப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவரது கணவரான சுகர்தேவ் ராஜா இப்பகுதியில் ஒரு அரணமனையை அமைத்ததோடு மட்டுமல்லாமல் ராணிக்கேத் என்றும் இந்த இடத்துக்கு பெயரிட்டுள்ளார். இந்த கதைக்கான வரலாற்றுப்பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும் இந்த ஸ்தலத்தில் காலங்காலமாக இந்த கதை சொல்லப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் 1869ம் ஆண்டில் இந்த மலை எழில் பிரதேசத்தை அடையாளங்கண்டு வழக்கம்போல இந்த இடத்தையும் தங்களது கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக மாற்றினர்.
பிரிட்டிஷ் குமாவூங் ரெஜிமெண்டில் தலைமையகமாக இந்த ராணிக்கேத் ஸ்தலத்தை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இப்படியாக காலனிய ஆட்சியின் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த நகரம் இன்றும் இந்திய ராணுவத்தின் குமாவூங் பிரிவின் கேந்திரமாக திகழ்கிறது.
செழிப்பான புல்வெளிகள் மற்றும் இயற்கை எழில் ததும்பி வழியும் வனப்பகுதி ஆகியவற்றைக்கொண்டுள்ளதால் இது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. சுற்றிலும் பனிமூடிய இமயமலைச்சிகரங்கள் வீற்றிருக்க கடல் மட்டத்திலிருந்து 1869மீ உயரத்தில் குமாவூங் மலைகளில் இந்த எழில் நகரம் அமைந்துள்ளது.
நைனித்தால் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் அல்மோரா நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள இந்த ராணிக்கேத் சுற்றுலாத்தலம் இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதைக் கழிப்பதற்கேற்றவாறு பைன், ஓக் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த பசுமையான இயற்கை எழிற்சூழலை கொண்டுள்ளது.
இங்கு பயணிகள் சிறுத்தை, குரைக்கும் மான், சம்பார் மான், சிறுத்தைப்பூனை, மலை ஆடு, இந்திய முயல், சிவப்பு குரங்கு, பைன் மார்ட்டென், ஓநாய், லாங்குர் மற்றும் முள்ளம்பன்றி போன்ற விலங்குகளைப்பார்க்கலாம்.
தவிர, கோயில்கள், மலையேற்றம் மற்றும் மலைக்காட்சி தளங்கள் என்று ஏராளமான சுற்றுலாப்பொழுதுபோக்கு அம்சங்களை இது கொண்டுள்ளது.
ஜுலா தேவி கோயில் மற்றும் பின்சார் மஹாதேவ் கோயில் ஆகிய இரண்டும் இந்த நகரத்தின் முக்கியமான கோயில்களாக புகழ் பெற்று அறியப்படுகின்றன. இவற்றில் ஜூலா தேவி கோயில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. துர்க்கா தேவிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயிலுக்கு ஏரளமான யாத்ரீக பக்தர்கள் வருகை தருகின்றனர். பின்சார் மஹாதேவ் கோயில் ராணிக்கேத் ஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த சிவன்கோயிலைச்சுற்றிலும் செடார் மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி அமைந்திருப்பது மட்டுமல்லாமல் ஒரு இயற்கை நீரூற்றும் கோயிலை ஒட்டி காணப்படுகிறது.
ராணிக்கேத் கேத் பகுதியில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக குமாவூங் ரெஜிமெண்டல் சென்டர் மியூசியம் அன்ட் மெமோரியல் அமைந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் போர்வீரர்கள் வீரம் மற்றும் தியாகத்தை பறை சாற்றும் காட்சிப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறன. 1978ம் ஆண்டில் குமாவூங் பகுதியின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் துவங்கப்பட்டிருக்கிறது. நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இங்கு ஞாபகார்த்த அணிவகுப்பு மரியாதையும் நிகழ்த்தப்படுகிறது.
மஜ்காளி எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலம் ராணிக்கேத்-அல்மோரா சாலையில் அமைந்திருக்கிறது. பயணிகள் இங்கிருந்து சோன்யா சிகரத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
மலைப்பாங்கான பகுதிகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் இனிமையான பருவநிலையை கொண்டிருக்கும் இது வித்தியாசமான ஸ்தலத்தில் விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இங்குள்ள உபட் எனும் இடம் கோல்ஃப் விளையாட்டுப்பிரியர்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இங்குள்ள 9 குழி கோல்ஃப் மைதானம் நாட்டிலுள்ள மிகச்சிறந்த கோல்ஃப் மைதானங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.மேலும் இங்கிருந்து இமயமலைத்தொடரின் சிகரங்களையும் நன்றாக பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சௌபாத்தியா எனும் இடம் பசுமையான ஆப்பிள், பீச், பிளம் மற்றும் ஏப்ரிகாட் பழத்தோட்டங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. பழத்தோட்டங்கள் மட்டுமல்லாமல் இந்த ரம்மியமான பிக்னிக் ஸ்தலத்திலிருந்து நந்ததேவி, நீலகண்டம், நந்தகுந்தி மற்றும் திரிஷுல் போன்ற சிகரங்களையும் மிக நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
ராணிக்கேத் பகுதியை சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகள் ராணி ஜீல் எனும் செயற்கை ஏரிக்கும் மறக்காமல் விஜயம் செய்வது அவசியம். இந்த ஏரியானது கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தினால் மழை நீர் சேகரிப்பிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. கேந்திரா வித்யாலயா பகுதி மற்றும் கனோஸா கான்வெண்ட் பள்ளி ஆகியவற்றுக்கருகில் இயற்கையான எழும்பியிருக்கும் இரண்டு மலைப்பீடப்பகுதிகளுக்கு நடுவே இந்த ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏரியில் பயணிகள் படகுச்சவாரி செய்து மகிழலாம்.
ராணிக்கேத் பகுதியின் ஷாப்பிங் கேந்திரமாக விளங்கும் சதர் பஜாரில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான ஞாபகார்த்த பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த மார்க்கெட் பகுதியில் பல உணவகங்கள் மற்றும் விடுதிகளும் அமைந்துள்ளன.
பயணிகள் இங்கு குறிப்பாக பாரம்பரிய பூத்தையல் வேலைப்பாடு கொண்ட உடைகள் மற்றும் கைவினைப்பொருட்களை வாங்கலாம். இது தவிர மால் எனப்படும் மற்றொரு மார்க்கெட் பகுதியில் சால்வைகள், உல்லன் சட்டைகள், அங்கிகள் மற்றும் குர்த்தாக்கள் போன்றவை பிரசித்தமாக விற்கப்படுகின்றன. கையால் பின்னப்பட்ட உல்லன் தயாரிப்புகள் இங்கு குறைந்த விலைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
சௌகுடியா எனும் முக்கியமான சுற்றுலாத்தலம் ராணிகேத் பகுதியிலிருந்து 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ராம்கங்கா எனும் அமைதியான ஆற்றங்கரையில் இந்த இடம் ‘சௌ-குத்’ எனும் குமோனி வார்த்தையால் அழைக்கப்படுகிறது.
இதற்கு ‘நான்கடி’ என்பது பொருளாகும். அதாவது நான்கு பாதைகளை இந்த சொல் குறிப்பிடுகிறது. இவற்றில் முதல் பாதை ராம் நகரை நோக்கியும், இரண்டாவது பாதை கரண் பிரயாக்’கை நோக்கியும், மூன்றாவது பாதை ராணிக்கேத் நகரை நோக்கியும், நான்காவது பாதை தடக்தால் எனும் இடத்தை நோக்கியும் செல்கின்றன.
நான்காவது பாதையின் வழியாக கீரா எனும் இடத்துக்கும் செல்லலாம். இப்படி நான்கு பாதைகளின் மூலம் இப்பிரதேசத்திலுள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் விதமாக இந்த ஸ்தலம் அமைந்திருக்கிறது.
மலைப்பாதை சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் ஆகியன இந்த ராணிக்கேத் சுற்றுலாத்தலத்தின் முக்கியமான சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்கின்றன.
துவாரஹாத், பாலு டேம், தரிகேத், குமோவூங் ரெஜிமெண்ட் கோல்ஃப் கோர்ஸ், கண்டோன்மெண்ட் ஆஷியானா பார்க், சன்செட் பாயிண்ட்ஸ் மற்றும் கூண்ட் ஆகிய இதர முக்கிய சுற்றுலா அம்சங்களும் இங்கு உள்ளன. சிதல்கேத், ஜௌராசி மற்றும் கைமா போன்ற இடங்களும் தவறாமல் பார்க்க வேண்டியவையாகும்.
ராணிக்கேத் மலைவாசத்தலம் நாட்டின் எல்லாப்பகுதிகளுடனும் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகியவற்றில் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.
வருடமுழுக்கவே இதமான இனிமையான பருவநிலை இப்பகுதியில் நிலவுகிறது. குறிப்பாக கோடைக்காலம் இப்பகுதியை சுற்றிப்பார்க்க மிகவும் ஏற்றது. மழைக்காலத்திலும் இங்கு விஜயம் செய்யலாம்.