மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும்.
சிவாஜி மஹாராஜாவின் ஆட்சிக்கு பிறகு ரத்னகிரி பகுதி சத்தார் அரசர்களின் ஆட்சியில் 1731ம் வருடத்துக்கு முன்னும் பின்னும் இருந்து இறுதியாக ஆங்கிலேயர் வசம் 1818ம் ஆண்டு வந்துள்ளது.
புராணக்கதைகளின்படி பாண்டவர்கள் 12 வருட வனவாசத்துக்கு பிறகு இங்கு ரத்னகிரியில் சிறிது காலம் வசித்ததாக சொல்லப்படுகிறது. ரத்னகிரி மன்னர் கௌரவர்களுக்கு எதிரான போரில் பாண்டவர்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் மஹாபாரதப்போரிலும் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
முக்கிய சுற்றுலா அம்சங்கள்
இங்கு வருகை தரும் பயணிகளை ஜய்காட் கோட்டை தன் பிரம்மாண்டத்தால் அசர வைக்கிறது. ரத்னகிரியின் வளைகுடாப்பகுதியில் உள்ள இந்த கடற்கரைக் கோட்டை பார்ப்பதற்கு பரவசமூட்டும் ஒரு வரலாற்றுச்சின்னம் ஆகும்.
இந்த ஸ்தலத்திலேயே பிரசித்தமான ஜய்காட் கலங்கரை விளக்கமும் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையை உடைய மற்றொரு முக்கிய கோட்டையான ரத்னாதுர்க் கோட்டையும் இங்கு அருகில் அமைந்துள்ளது.
நீங்கள் ஒரு கடற்கரை ரசிகராக இருக்கும் பட்சத்தில் இங்குள்ள விதவிதமான கடற்கரைகளை பார்த்து மகிழலாம். கறுப்பு நிற மணலுடன் காட்சியளிக்கும் மாண்டவி பீச், கணபதிபுலே பீச் மற்றும் கணேஷ்குலே பீச் போன்றவை இங்குள்ள அற்புதமான கடற்கரைகளாகும்.
புராதன கோயிலான சுயம்பு கணபதி கோயில் இங்குள்ள கணபதிபுலே கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் தெய்வத்தின் பெயரிலேயே கணபதிபுலே பீச் என்று இப்பகுதியின் கடற்கரை அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 400 வருடங்கள் பழமையை உடைய இந்த ஆன்மிக திருத்தலம் உங்கள் இறை நம்பிக்கையை தூண்டும் அளவுக்கு அற்புதமான சூழலைக்கொண்டுள்ளது.
ரத்னகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் இங்கு பிரசித்தமான உள்ளூர் உணவு வகைகளையும் ருசிப்பது சிறந்தது. மீன் உணவு வகைகள், கொங்கண் மசாலா போன்றவை இங்கு பிரசித்தம்.
நீங்கள் ஒரு ஷாப்பிங் பிரியராய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ரத்னகிரியில் சுவாரசிய அம்சங்கள் ஏராளம் உள்ளன. புராதன அம்சங்களைக்கொண்ட கலைப்படைப்புகள் முதல் பல வகையான ஞாபகார்த்த பொருட்கள் வரை இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கின்றன.
கோடைக்காலத்தில் இங்கு வருகை தரும் பட்சத்தில் சுவையான அல்போன்ஸா மாம்பழங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். இங்குள்ள அம்பாபோலி எனும் மார்க்கெட் பகுதியில் பலவகை மாம்பழங்களை வாங்கி பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்து செல்லலாம்.
எப்படி எப்போது விஜயம் செய்யலாம் ரத்னகிரிக்கு
கோடைக்காலத்தில் ரத்னகிரியின் வெப்பநிலை கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்பதால் பயணிகள் கோடைக்காலத்தை முடிந்த வரையில் தவிர்க்கலாம். ஆனால் மாம்பழம் வேண்டும் என்றால் கோடை வெப்பத்தையும் சகித்துக்கொண்டு வருகை தந்துதான் ஆகவேண்டும்.
மழைக்காலம் இந்த பகுதியை அழகாக காட்சியளிக்க வைக்கிறது என்றாலும் குளிர்காலமே எல்லா விதத்திலும் ஊர் சுற்றிப்பார்க்கவும் இயற்கையை ரசிக்கவும் சிறந்ததாக உள்ளது.
முக்கிய நகரமாக இருப்பதால், ரத்னகிரி எல்லா போக்குவரத்து மார்க்கங்களாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு உள்நாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளதால் பயணிகள் மும்பை போன்ற பெருநகரங்களிலிருந்து நேராகவே விமானத்தின் மூலம் இங்கு வரலாம்.
இது தவிர கொங்கண் ரயில் பாதையில் ரத்னகிரி ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களுடனும் வெளி மாநில நகரங்களுடனும் நல்ல முறையில் இது ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. நன்றாக அமைக்கப்பட்டுள்ள ரத்னகிரி-நாக்பூர் தேசிய நெடுஞ்சாலை மூலமாக எளிதில் சாலைப்பயணத்தை மேற்கொள்ளும்படியாகவும் ரத்னகிரி அமைந்துள்ளது.
வரலாறு, ஆன்மீகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அம்சங்களும் கலந்து காட்சியளிக்கும் இந்த ரத்னகிரியில் மராத்திய பாரம்பரிய அம்சங்களை நன்றாக அனுபவித்து ரசிக்க முடியும்.
கட்டிடக்கலை அற்புதங்களான கோட்டைகள், அமைதியான கடற்கரைகள் மற்றும் சுவையான அல்போன்ஸா மாம்பழங்கள் என்று ரத்னகிரியின் சுவாரசியங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன.