ஹரியானா மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இந்த ரோஹ்தக் அமைந்துள்ளது. இது டெல்லிக்கு வெகு அருகில் உள்ளதால் தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) ஒரு அங்கமாகவும் திகழ்கிறது. டெல்லியிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ரோஹ்தக் நகரம் ஹரியனா மாநிலத்தின் அரசியல் செயல்பாடுகளுக்கான தலைநகரமாகவும் அறியப்படுகிறது. டைரி தயாரிப்பு, துணிவியாபாரம் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இந்த நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த நகரத்தின் வரலாற்றுப்பின்னணி சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படுகிறது. இங்கு கோக்ராகோட் எனும் இடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சில கோபுர வடிவங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்தவையாக சொல்லப்படுகின்றன. மஹாபாரத காவியத்திலும் இந்த ரோஹ்தக் நகரம் ரோஹிதிகா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யவுதேய ராஜ வம்சம் ஆண்ட பஹுதன்யகா எனும் ராஜ்ஜியத்தின் தலைநகரமாக ஆதியில் இந்த ரோஹ்தக் நகரம் விளங்கியிருக்கிறது. 3 – 4ம் நூற்றாண்டை சேர்ந்த யாத்யயா காலத்து நாணயங்கள் இங்கு ஏராளமாக கிடைத்துள்ளன.
குஷாணர் காலத்தில் இந்த நகரம் இருந்ததற்கான சான்றாக குஷாணர் காலத்தூண் ஒன்றும் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சிறகுகளை கொண்ட சிங்க உருவங்கள் மற்றும் அவற்றின் மீது சவாரி செய்பவர்களை கொண்ட சிற்ப வடிவமைப்பு இதில் காணப்படுகிறது.
ரோஹ்தக் நகரம் 10ம் நூற்றாண்டு வரை செழிப்புடன் திகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தற்போதைய ரோஹ்தக் நகரம் கல்வி நிலையங்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ரேவ்ரி எனும் இந்திய தின்பண்டத்துக்கும் இது பிரசித்தமாக அறியப்படுகிறது.
ரோஹ்தக் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்!
ரோஹ்தக் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இங்கு ஹரப்பா நாகரிகம் விளங்கியிருந்ததை குறிப்பிடுகின்றன. வண்ணம் பூசப்பட்ட களிமண் பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சி ஸ்தலம் கிராவாத் எனும் கிராமத்தில் மதினா-சமர்கோபால்பூர் சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் மஹாபாரத காலத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது.
டெல்லி-ஹரியான எல்லைப்பகுதியிலிருந்து 42 கி.மீ தூரத்திலுள்ள தில்யார் எனும் ஏரிக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். ஏரியை சுற்றிலும் பசுமையான இயற்கைக்காட்சிகள் பரந்து காணப்படுவதால் டெல்லி மற்றும் அருகிலுள்ள இடங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
இங்கு ஒரு மிருகக்காட்சிசாலையும் அமைந்துள்ளது. இதில் புலி, சிறுத்தை, மான், குரங்கு மற்றும் பலவகை பறவைகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். குரு கோரக் நாத் எனும் மதப்பிரிவினரின் முக்கிய ஆன்மீக கேந்திரமான அஸ்தல் போஹார் எனும் வளாகமும் ரோஹ்தக்கில் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.
இங்கு பலவிதமான அரும்பொருட்கள், மறை நூல்கள், பொது நூல்கள் மற்றும் இதர ஆன்மீக சடங்குப்பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
மஹம் எனும் இடத்திலுள்ள ராதா கிருஷ்ணன் கோயில் வருடம் முழுதும் அதிகமான பக்தர்களை ஈர்த்து வருகிறது. கொக்கார் ராஜ வம்சத்தினர் கட்டிய கொக்கார் கோட்டை ஒன்றும் ரோஹ்தக் நகரத்தில் பயணிகள் காண வேண்டிய அம்சமாகும். ஒரு காலத்தில் கம்பீரமாக உறுதியுடன் வீற்றிருந்த இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.
ரோஹ்தக் நகரத்தில் மேஹாம் எனும் இடத்திலுள்ள ஜமா மஸ்ஜித் ஒன்றும் பார்க்க வேண்டிய அம்சமாக விளங்குகிறது. இந்த மசூதியில் காணப்படும் கல்வெட்டுக்குறிப்பில் இது ஹுமாயூன் மன்னரால் 1531ம் ஆண்டு கட்டப்பட்ட தகவல் காணப்படுகிறது.
அதே சமயம் இன்னொரு கல்வெட்டு குறிப்பு இது ஔரங்கசீப் மன்னரால் 1667-68ம் ஆண்டில் கட்டப்பட்டதாக தெரிவிக்கிறது.
ஹரியானாவிலுள்ள எல்லா நகரங்களையும்போன்றே ரோஹ்தக் நகரத்திலும் கோவாக்கரண் அல்லது கௌக்கரன் என்று அழைக்கப்படும் புனித தீர்த்தக்குளம் ஒன்று அமைந்துள்ளது.
நகர மையத்திலேயே அமைந்துள்ள இந்த குளக்கரை வளாகத்தில் பல்வேறு தெய்வங்களின் கோயில்களை பார்க்கலாம். இது தவிர பிண்டவாஸ் ஏரி எனும் பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமும் ரோஹ்தக் நகர்ப்பகுதியில் அமைந்துள்ளது.
வார விடுமுறை சுற்றுலா மேற்கொள்வோர், பறவை ஆர்வலர்கள், புகைப்பட ரசிகர்கள் மற்றும் வீடியோ படம் எடுப்போர் இந்த இயற்கைப்பிரதேசத்தை நாடி வருகின்றனர்.
ரோஹ்தக் பருவநிலை
இந்நகரத்தின் பருவநிலை கலவையான சீதோஷ்ண இயல்பை கொண்டுள்ளது.
எப்படி செல்வது ரோஹ்தக் நகரத்திற்கு?
சாலைவழி, ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து வசதிகள் மூலம் ரோஹ்தக் நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது.