உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் ருத்ராநாத் கிராமம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2286 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் பனியை உடுத்திக் கொண்டுள்ள இமயமலைத் தொடர்களை அற்புதமாக காட்ட வல்ல இடமாகும். 'ருத்ரநாத்' என்ற வார்த்தைக்கு 'கோபத்துடன் இருப்பவர்' என்று பொருளாகும். பஞ்ச கேதார் என்று அறியப்படும் ஐந்து புனித இடங்களுக்கான சுற்றுப் பயணத்தில் ருத்ரநாத் மூன்றாவதாக வரும் பெருமை பெற்ற இடமாகும். கேதர்நாத் கோவில், துங்நாத் கோவில், மத்யமகேஸ்வரர் கோவில் மற்றும் கபாலீஸ்வரர் கோவில் ஆகியவை இந்த கோவில்களில் வரும் பிற நான்கு கோவில்களாகும்.
ருத்ரநாத் கோவிலில் இந்து கடவுளான சிவபெருமான் நீலகண்ட மகாதேவர் என்ற பெயரில் வணங்கப்பட்டு வருகிறார். இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களால் இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மகாபாரதப் போரில் கௌரவர்களைக் கொன்றதற்காக பாவ மன்னிப்பு கோருவதற்காக பாண்டவர்கள் சிவபெருமானை வணங்கச் சென்றதாகவும் ஒரு கதை உள்ளது. எனினும், அவர்களைப் பார்க்க விரும்பாத சிவபெருமான் நந்தி எருதின் வடிவெடுத்துக் கொண்டு கார்வால் பகுதிகளில் மறைந்து கொண்டார்.
குப்தகாஷியில் அந்த நந்தி எருதினை பார்த்த பாண்டவர்கள் அதனை வலுக்கட்டாயமாக தடுத்து பிடிக்க முயன்ற போதும் அவர்களால் அதனை பிடிக்க முடியுவில்லை. அதன் பிறகு சிவபெருமானின் உடலில் ஐந்து பகுதிகள் வேறு வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.
சிவபெருமானில் முகம் கண்டெக்கப்பட்ட இடத்தில் தான் ருத்ரநாத் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தைச் சுற்றிலும் சூரிய குந்த், சந்திர குந்த், தாரா குந்த் மற்றும் மன குந்த் என்ற நீர்நிலைகளும் உள்ளன.
இந்த புனிதத் தலத்திலிருந்தவாறே ஹதி பர்வதம், நந்த தேவி, நந்த குன்டி மற்றும் திரிசூல் ஆகிய அழகிய சிகரங்களைக் காண முடியும்.
சாகர் மற்றும் ஜோசிமாத் கிராமங்களிலிருந்து மலையேற்றம் செல்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலை அடைய முடியும். இந்த வழியில் கண்களைக் கொள்ளை கொள்ளும் பசும்புல்வெளிகளையும் காண முடியும்.
இந்த புல்வெளிகளில் ஒன்றான பனார் புக்யாலில் வண்ணமிகு காட்டுப்பூக்களைக் காண முடியும். இந்த புல்வெளிக்கு அருகில் ஒரு நீர்வீழ்ச்சியும், கோவிலும் அமைந்துள்ளன.
ருத்ரநாத் மலையேற்றப் பாதையிலுள்ள மிகவும் உயரமான இடமாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரத்தில் அமைந்துள்ள பித்ராதார் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பேரமைதி மற்றும் அற்புதமான அழகு இவ்விடத்தை குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலமாக இருக்கச் செய்கிறது.
பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள நந்தி குந்த் என்ற ஏரி கண்கவரும் அழகிய சுற்றுலாத் தலமாகும். சிவபெருமானின் நந்தி எருது இந்த ஏரியில் நீர் அருந்தும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அழகிய சௌகாம்பா சிகரத்தின் பிரதிபலிப்பை சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியில் காண முடியும். ருத்ரநாத்திற்கு அருகில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மற்றும் மத்யமகேஸ்வரர் கோவிலுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வர முடியும்.
ருத்ரநாத்திற்கு சுற்றுலா வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகள் இவ்விடத்தை அடையலாம். டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் ருத்ரநாத்திற்கு மிகவும் அருகில் உள்ள விமான நிலையமாக உள்ளது.
கோபேஸ்வரிலிருந்து செல்லும் மலையேற்றப் பாதையும் ருத்ரநாத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ருத்ரநாத்திற்கு அருகிலிருக்கும் இரயில் நிலையமாக ரிஷிகேஷ் இரயில் நிலையம் உள்ளது. ருத்ரநாத் செல்வதற்கான பேருந்துகள் ரிஷிகேஷ், டேராடூன், கோட்த்வாரா மற்றும் ஹரித்துவாரில் இருந்து இயக்கப் படுகின்றன.
பருவநிலை வசதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களில் இந்த அழகிய சுற்றுலாத் தலத்திற்கு வருகை தரலாம்.