மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று சோலாப்பூர். இதன் மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்துக்கு வடக்கில் ஓஸ்மானாபாத், அஹ்மத்நகர் மாவட்டங்களும் மேற்கில் சதாரா புனே மாவட்டங்களும் தெற்கில் பீஜாபுர் சாங்க்லி மாவட்டங்களும் கிழக்கில் குல்பர்கா மாவட்டமும் அமைந்துள்ளது.
வரலாற்று காலத்தில் சோலாப்பூர் சாளுக்கிய வம்சம், யாதவ வம்சம், ஆந்திரபிரத்யா வம்சம், ராஷ்டிரகூட வம்சம் மற்று பாமனி வம்சம் போன்ற பல்வேறு ராஜவம்சங்களின் ஆளுகையில் இருந்திருக்கிறது.
முதலில் பாமனி அரசாட்சியின் கீழ் இருந்த சோலாப்பூர் மாவட்டம் பிறகு பிஜாபூர் மன்னர்களால் கைப்பற்றப் பட்டது. அது பின்னர் மராத்திய மன்னர்களின் கைக்கு மாறியது.
பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்கு பிறகு 1818 ல் ஆங்கிலேயர்கள் அஹ்மத் நகரின் ஒரு துணை மண்டலமாக மாற்றினர். 1960 ஆண்டில் சோலாப்பூர் தனி மாவட்டம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
ஸீனா நதிக்கரையில் அமைந்துள்ள சோலாப்பூர் ஜைனர்களுக்கான பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நகரத்துக்கு சோலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் பலவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.
சோலா என்றால் ஹிந்தியில் பதினாறு என்பது பொருள், எனவே சோலா+ஊர் (அதாவது 16 ஊர்களை கொண்டது) என்ற அடிப்படையில் இந்த சோலாப்பூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து.
மற்றொன்று இந்நகரம் முஸ்லிம் ஆட்சியின்போது சந்தல்பூர் (சந்தல் = சந்தனம்) என்று அழைக்கப்பட்டு அது பின்னாளில் சோலாப்பூர் என்று திரிந்திருக்கலாம் என்பது. பிரிட்டிஷ் காலத்தில் இது ஷோலாப்பூர் என்று அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
சோலாப்பூர் மும்பை பெருநகரத்திலிருந்து 400 கி.மீ தொலைவிலும் புனேயிலிருந்து 245 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சோலாப்பூர் – சுற்றுலா அம்சங்களின் கலவை
தக்ஷிண் காசி என்று அழைக்கப்படும் பந்தர்பூர் ஸ்தலத்துக்காக சோலாப்பூர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்குள்ள விட்டோபா கடவுளின் கோயிலுக்காக இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமக இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளது. கார்த்திகை மற்றும் ஆஷாதி ஏகாதசி போன்ற திருவிழாக்களின் போது இங்கு நான்கிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வரை இங்கு கூடுகின்றனர்.
சோலாப்பூரை ஒட்டிய அக்கல்கோட் எனும் இடமும் ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாகும். தத்தாத்ரேய கடவுளின் அவதாரம் என்று கருதப்படும் ஷீ ஸ்வாமி சமர்த்த மஹராஜிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள வடவிருக்ஷா கோயிலும் சுவாமி மடமும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். இங்குள்ள ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாக துல்ஜா பவானி தெய்வத்துக்கு உருவாக்கப்பட்டுள்ள துல்ஜாபூர் விளங்குகிறது.
ஒரு ஏரியில் நடுவில் அமைந்துள்ள அழகிய கோயிலான சித்தேஸ்வரர் கோயில் சோலாப்பூரில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இவை தவிர வரலாற்று பிரியர்களுக்கான சுற்றுலா அம்சமாக புயிகோட் கோட்டை அமைந்துள்ளது.
இங்குள்ள மோதிபாக் நீர்த்தேக்கம் பலவித பறவைகள் வாழும் சரணாலயமாக திகழ்கிறது. குளிர்காலத்தில் பல பிரதேசங்களிலிருந்தும் பறவைகள் இங்கு வருகை தருகின்றன.
இந்த நீர்த்தேக்கத்தை ஒட்டி ரேவணசித்தேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியின் அருகில் உள்ள நன்னஜ் எனும் இடத்தில் அமைந்துள்ள காட்டு மயில்(கான மயில்) சரணாலயம் காட்டுயுர் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.
கிரவுண்ட் ஃபோர்ட், மல்லிகார்ஜுன கோயில், ஆதிநாத் கோயில் மற்றும் எண்ணற்ற மஸ்ஜித்கள் , சர்ச்சுகள் போன்றவையும் சோலாப்பூரின் சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.
சோலாப்பூர் – கலாச்சாரம் மற்றும் மக்கள்
சோலாப்பூர் நகரம் சுற்றுலா செல்வதற்கு மட்டுமல்ல அங்கேயே தங்கி வாழவோ பணி புரியவோ ஏற்ற நகரமும் ஆகும். மராத்தி, கன்னடா மற்றும் தெலுங்கு கலாச்சாரங்கள் இங்கு ஒன்றாக கலந்து விளங்குகின்றன.
தொன்மையான சிவயோகி ஆன்மீக கலாச்சாரத்தின் இருப்பிடமாக சோலாப்பூர் உள்ளது. கடந்த ஆண்டுகளில் பல யாத்ரீக மையங்கள் இங்கு தோன்றியுள்ளன.
சோலாப்பூர் மக்கள் அன்பானவர்களாகவும், சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும், கடின உழைப்பு மனோபாவம் வாய்ந்தவர்களாகவும் உள்ளனர். ஒன்றுமேயில்லாத, அறியப்படாத சிறு நகரமாயிருந்த சோலாப்பூர் இன்று ஒரு பெரிய வணிக மையமாகவும் சுற்றுலா ஸ்தலமாகவும் மாறியுள்ளதற்கு இந்த மக்களே காரணம். பல மொழிகள், பல தொழில்கள் என்று பன்முகத்தன்மையுடன் இந்த நகரம் காணப்படுகிறது.
இங்கு கொண்டாடப்படும் எண்ணற்ற கோயில் திருவிழாக்களும் பண்டிகைகளும் இந்த கோயில் நகரத்தின் மக்கள் தங்கள் மதப்பாரம்பரியத்தில் பெருமை கொன்டுள்ளனர் என்பதற்கு சான்றாக உள்ளது. ஒவ்வொரு திருவிழாவும் இரண்டு நாட்களுக்கு கோலாகலாமாக கொண்டாடப்படுகின்றன.
சோலாப்பூர் மக்கள் எந்த அளவுக்கு பொழுது போக்கு அம்சங்களை விரும்புவர்களாக உள்ளனர் என்பதற்கு இங்கு காணப்படும் அதிகமான சினிமா திரையரங்குகள் மற்றும் நாட்டுப்புற கலை மையங்கள் சாட்சியாக உள்ளன. சோலாப்பூருக்கு ஒரு முறை பயணம் செய்து அவர்களின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துப் பாருங்கள் – உங்களை சோலாப்பூர் மக்கள் அன்போடு வரவேற்று உபசரிக்க எப்போதும் தயாராக உள்ளனர்!
இன்னும் சில தகவல்கள்
மிதமான இனிமையான சீதோஷ்ண நிலையை சோலாப்பூர் நகரம் பெற்றுள்ளது. அதிகபட்ச உஷ்ணத்தை இது கோடைக்காலத்தில் அனுபவிக்கிறது. அப்போது வெப்பநிலை 400C யில் இருந்து 420C ஆக இருக்கும்.
மே மாதத்தின் போது சோலாப்பூர் பகுதியை சூரியன் சிறிதும் இரக்கமின்றி சுட்டுப்பொசுக்குவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
மழைக்காலத்தில் வெப்பம் தணிந்து நகரமும் கழுவி விட்டாற்போன்று காட்சியளிப்பதால் அக்காலத்தில் சோலாப்பூருக்கு வரலாம். குளிர்காலமான ஜனவரி மாதத்தில் இங்கு சீதோஷ்ண நிலை 90C ஆக காணப்படுகிறது. அம்மாதத்தில் இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை சுற்றுப்பார்க்கவும் புனித யாத்ரீக ஸ்தலங்களை தரிசிக்கவும் மிகவும் வசதியாக இருக்கும்.
போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக சோலாப்பூர் நகரம் ஹைதராபாதிலிருந்து மும்பை செல்லும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையின் வழியில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மற்றும் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து பல ரயில்கள் உள்ளன.
சோலாப்பூர் விமான நிலையம் ஆகாய மார்க்கமாக பயணிக்க விரும்புவோர்க்கு உகந்ததாக இருக்கிறது. சாலை வழியாக சோலாப்பூரை அடைவதற்கு பல அரசுப் போக்குவரத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் பலவிதமான கட்டணங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன.
சோலாப்பூர் மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் மெத்தைகளுக்கும், கைத்தறி மற்றும் மில் துணி வகைகளுக்கும், பீடித்தயாரிப்புக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆன்மீக நகரம் ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்வது குறிப்பிடத் தக்கது.
ஆன்மீகம், மதம், வரலாறு, இயற்கை, வாணிகம் போன்ற யாவுமே கலந்த சோலாப்பூர் நகரம் நிச்சயமாக ஒரு கவனிக்க வேண்டிய ஆற்றல் மையம். நீங்கள் சோலாப்பூருக்கு வருகை தந்திராத பயணியாக இருக்கும் பட்சத்தில் இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் இத்தனை நாள் வரவில்லையே என்று யோசிப்பீர்கள். அது தான் சோலாப்பூர்.