'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். ஸ்ரீ நகர் என்ற பெயர் வளத்தைக் குறிக்கும் 'ஸ்ரீ' மற்றும் இடத்தைக் குறிக்கும் 'நகர்' என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வந்ததாகும். எனவே, இந்நகரத்தின் பெயருக்கு 'வளமான நகரம்' என்று பொருள் கொள்ளலாம்.
அழகிய நகரமாக மட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறப்பு, மத முக்கியத்துவம் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என பல்வகை அம்சங்களை ஸ்ரீ நகர் கொண்டிருக்கிறது.
இங்கிருக்கும் சில வரலாற்று தொடர்புடைய கட்டிடங்கள் மற்றும் மதத் தலங்கள் இந்நகரத்தின் வளமையான மற்றும் பெருமையான பழமையை நிரூபிக்கக் நின்றிருக்கும் இன்றைய ஆதாரங்களாகும்.
கிமு.1500-க்கும் கிமு.3000-க்கும் இடைப்பட்ட புதிய கற்கால மனிதர்களின் குடியிருப்பு பகுதியான பர்ஸாகோம் ஸ்ரீ நகரில் உள்ள ஒரு முக்கியமான வரலாற்றுத் தலமாகும்.
இங்கு தோண்டியெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ பிரதாப் சிங் (SPS) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில் புதிய கற்கால மற்றும் பெரிய கற்காலத்தைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புக் கூடுகள், அம்புகள், கருவிகள் மற்றும் பானைகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ நகரில் காணப்படும் சில மசூதிகளும், கோவில்களும் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாகும். சுங்கராச்சார்யா கோவில் மற்றும் ஜியேஸ்தேஸ்வரா கோவில் ஆகியவை இந்த நகரத்தின் மிகப் பிரபலமான கோவில்களாகும்.
ஜாமா மசூதி, ஹஸ்ரத்பல் மசூதி மற்றும் அகுந்த் முல்லா மசூதி ஆகியவை பரவலாக அறியப்பட்ட மற்றும் முதன்மையான சுற்றலா தலங்களாகும்.
உலகம் முழுவதுமிருந்து பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் முகலாய தோட்டங்களான நிஷாத் பூங்கா, ஷாலிமார் பூங்கா, அச்சாபல் பூங்கா, சஸ்மா சாஹி மற்றும் பாரி மஹால் ஆகியவையும் இந்நகரத்தில் இருக்கின்றன. இந்நகரத்தின் இயற்கை எழிலுக்கு மெருகூட்டுவதாக இந்த முகல் தோட்டங்கள் விளங்குகின்றன.
ஸ்ரீ நகரில் இருக்கும் தால் ஏரி, நகீன் ஏரி, அச்சார் ஏரி மற்றும் மனஸ்பால் ஏரி ஆகியவை இந்நகரத்திலிருக்கும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும். இணையில்லாத இயற்கையழகும், அழகான சுற்றுச்சூழலும் இந்த ஏரிகளை சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இடங்களாக மாற்றுகின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 2-வது பெரிய ஏரியான தால் ஏரி, 'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள ஆபரணம்' என்று அழைக்கப்படுகிறது. அழகிய இமயமலையின் பின்புலத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது.
ஸ்ரீ நகரின் ஏரிகள் அங்கிருக்கும் படகு வீடுகள் மற்றும் 'சிக்காரா' அல்லது மரப் படகு சவாரிகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். சிக்காரா படகுகளில் சவாரி செய்து கொண்டே சுற்றுலாப் பயணிகள் சுற்றுச் சூழலை கவலையின்றி ரசித்திட முடியும்.
ஸ்ரீ நகரிலிருக்கும் டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம் மற்றுமொரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். 141 சகிமீ என பெரும் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த இடம் 1951-ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
ஹக்புல் என்று அழைக்கப்படும் அரிய வகை சிவப்பு மான்களை இந்த சரணாலயத்தில் காணலாம். சிறுத்தைப் புலிகள், கஸ்தூரி மான்கள் மற்றும் பல்வகை இடம் பெயரும் பறவையினங்களை டச்சிகாம் வனவிலங்கு சராணலயத்தில் நீங்கள் காணலாம்.
தால் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்திரா காந்தி துலிப் தோட்டம் உள்ளது. 90 ஏக்கர் பரப்பளவிலான இந்த தோட்டம், 70 வகைகளில் துலிப் மணி மலர்களை கொண்ட இடமாகும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5 முதல் 15-ம் நாள் வரை நடக்கும் 'துலிப் திருவிழா' இங்குள்ள மக்களிடையே சற்று பிரபலமான பண்டிகையாகும். நாடு முழுவதுமுள்ள சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் வர வைக்கும் திருவிழாவாக இது உள்ளது.
அந்நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் உணவு வகைகளை ருசித்தும் மற்றும் நாட்டுப்புற கலைகளை ரசித்தும் செல்ல முடியும்.
மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூரில் செய்யப்பட்ட காஷ்மீர் கார்பெட், பஷ்மினா சால்வைகள், பட்டினாலான கழுத்துப் பட்டைகள் மற்றும் மரப் பொருட்கள் ஆகிய கைவினைப் பொருட்களையும் மற்றும் ஜவுளிகளையும் வாங்க முடியும். காலை 9 மணிக்கு துவங்ககும் இந்த பண்டிகை இரவு 7 மணி வரையிலும் பொதுமக்களுக்காக நடக்கும்.
இந்நகரம் ட்ரெக்கிங் மற்றும் ஹைக்கிங் போன்ற சாகச விளையாட்டுக்களையும் அளிக்கவல்ல சுற்றுலாதலமாகும். ஸ்ரீ நகரில் தொடங்கி, அமர்நாத் குகைகளை நோக்கி செல்லும் மலையேற்றப் பாதை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்ற பாதையாகும். டச்சிகாம் தேசிய பூங்கா மற்றும் பாஹல்காம் ஆகிய சுற்றுலா தலங்கள் இன்ப சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களாகும்.
அரிசியை மையமாக வைத்தே பெரும்பாலான உணவுகள் பரிமாறப்படும் ஸ்ரீ நகரின் உணவு வகைகள் சற்று காரமாகவே இருக்கும். இந்நகரத்தில் தயாரிக்கப்படும் குங்குமப்பூ மிகவும் உயர்தரம் மற்றும் விலையைக் கொண்டது.
மிகவும் உயர்ந்த வாசனைப் பொருளாக கருதப்படும் குங்குமப்பூ-வினை சுற்றுலா பயணிகள், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்க முடியும். ஒரு கிராம் குங்குமப்பூவின் விலை இந்திய மதிப்பில் சுமார் 200 ரூபாயாகும்.
ஸ்ரீ நகர் பிற இந்திய நகரங்களுடன் விமான வழியாக மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ள நகரமாகும். ஸ்ரீ நகரில் உள்ள ஷேக்-உல்-ஆலம் விமான நிலையம் மும்பை டெல்லி, சிம்லா மற்றும் சண்டிகர் ஆகிய முக்கிய இந்திய நகரங்களுடன் தொடர்ச்சியான விமான சேவைகளை கொண்டுள்ள இடமாகும்.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஸ்ரீ நகருக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு தொடர்பு விமான நிலையமாகும்.
ஸ்ரீ நகருக்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையமாக 290 கிமீ தொலைவில் உள்ள ஜம்மு இரயில் நிலையம் உள்ளது. இந்நகரம் ஜம்மு, சண்டிகர், டெல்லி மற்றும் லே போன்ற அருகிலுள்ள முக்கிய நகரங்களுடனும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலமும், குளிர்காலமும் பிரதான பருவநிலைகளாக உள்ள ஸ்ரீ நகரின் பருவநிலை வருடம் முழுவதும் சுற்றுலாவிற்கு ஏற்றதாகவே உள்ளது. மேலும் மிகவும் குறைவான மழைப்பொழிவையே ஸ்ரீ நகர் பெற்றுள்ளது.
கோடைக்காலத்தில் வெளியில் சுற்றிப் பார்க்க உதவியாக இருக்கும் ஸ்ரீ நகரின் பருவநிலை, குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும், அதீதமான பனிப்பொழிவையும் கொண்டதாக இருக்கும்.