`ட்ரிஹரி' என்கிற வார்த்தை திரிந்து டெஹ்ரி என வழங்கப்படுகிறது. இந்த வார்தைக்கு மூன்று பாவங்களை நீக்கும் இடம் எனப் பொருள். அந்த மூன்று பாவங்களாவன: சிந்தனை பாவம், வார்த்தை பாவம் மற்றும் செயல் பாவம்.
பாகீரதி நதியின் மீது டெஹ்ரி அணை கட்டப்பட்டதால் பழைய டெஹ்ரி நீரில் மூழ்கிவிட்டது. அதன் காரணமாக புதிய டெஹ்ரி உருவானது. டெஹ்ரி அணைக்கு அதிக இடத்தை வழங்குவதற்காக பழைய டெஹ்ரி மக்கள் புதிய டெஹ்ரிக்கு இடம் பெயர்ந்தார்கள்.
டெஹ்ரி அணையின் கட்டுமானத்திற்கு எதிராக, புகழ் பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. சுந்தர்லால் பகுகுனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களின் மையப் புள்ளியாக விளங்கிய டெஹ்ரி, அப்போதைய செய்தித் தாள்களில் முக்கிய இடம் பெற்றது.
பதிவேடுகளின் படி, பிரிட்டிஷ் ஆட்சியின் போது, சுதேச மாநிலமான டெஹ்ரி கர்வாலின் தலைநகராக டெஹ்ரி இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் டெஹ்ரி, கிழக்கு இந்திய கம்பெனியின் முக்கிய துறைமுக விளங்கியது. இங்கு கிழக்கு இந்திய கம்பெனியின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இங்குள்ள டெஹ்ரி அணை மிகவும் பிரபலமான சுற்றுலா மையம் ஆகும். இதனை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஆண்டு முழுவதும் வருகின்றனர். மேலும், டெஹ்ரி அணை உலகின் மிக பெரிய அணைகளில் ஒன்றாகும்.
இந்த அணையில் பாகீரதி மற்றும் பிலங்கான ஆகிய இரு நதிகளின் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, கணிசமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
டெஹ்ரிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள், அதன் அருகிலுள்ள, புடா கேதாருக்கும் சென்று வரலாம். புடா கேதாரில் புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் சிவ லிங்கம் வட இந்தியாவிலேயே மிகப் பெரியதாகும்.
செம் முக்ஹெம் கோவில் டெஹ்ரியில் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் ஆகும். இது பாம்புகளின் அரசன் நாகராஜாவிற்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலை உள்ளூர் மக்கள் மிகப் புனிதமாக கருதி வழிபடுகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், குஞ்ஜாபுரி மலை மீதுள்ள குஞ்ஜாபுரி தேவியின் கோவிலையும் தரிசிக்கலாம். இந்த கோவிலிருந்து பரந்து விரிந்த வலிமைமிக்க இமயமலை மற்றும் பாகீரதி பள்ளத்தாக்கு ஆகியவற்றின் அழகிய காட்சிகளை கண்டு மகிழலாம்.
டெஹ்ரியில் உள்ள பிற இடங்களான காட்லிங்க் பனியாறு, நரேந்திர நகர், சந்திரபதனி கோவில், காட்டு மற்றும் நாக் திப்பா போன்றவை பயணிகளை பெரிதும் ஈர்கின்றன.
சுற்றுலா பயணிகள் விமானம், ரயில் மற்றும் சாலை மார்கமாக டெஹ்ரியை அடைய முடியும். புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அங்கிருந்து டாக்சிகள் மூலம் டெஹ்ரியை எளிதில் அடையலாம். டெஹ்ரிக்கு அருகில் ரிஷிகேஷ் ரயில் நிலையம் உள்ளது. டெஹ்ரிக்கு அருகில் உள்ள முசெளரி, ரிஷிகேஷ், ஹரித்வார், தேவிபிராயாக், ஸ்ரீநகர், மற்றும் உத்தர்காசி போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
தில்லியில் உள்ள காஷ்மீரி கேட்டில் உள்ள தில்லி ISBT யில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் ஆண்டு முழுவதும் ஒரு இனிமையான காலநிலையே நிலவுகிறது, ஏப்ரல் மற்றும் செப்டம்பருக்கு இடையே உள்ள காலமே டெஹ்ரிக்கு பயணம் புரிய சிறந்த நேரமாக கருதப்படுகிறது.