தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும். திருநாகேஸ்வரம் வளமான வயல்களை கொண்ட ஊராகும். இங்கு, நெல்லும், கரும்பும் சோளமும் முக்கிய விளைபொருள்களாகும். மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர் இது.
திருநாகேஸ்வரத்தை சுற்றி அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள்
இவ்வூரில் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. ஒன்று, சிவன் கோவிலான நாகநாத சுவாமி ஆலயம், மற்றொன்று பெருமாள் கோவிலான ஒப்பிலியப்பன் ஆலயம். நாகநாதசுவாமி ஆலயத்தில் சிவபெருமான் நாகநாதசுவாமி என்ற பெயரில் தனது தேவியான பார்வதியுடன் வீற்றிருக்கிறார்.
ராகுவின் சிலை இங்கு மனித உருவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகு கிரகத்தின் இயக்கத்தினால் ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் உண்டாகலாம் என்று நம்பப்படுகிறது.
அதாவது ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைகளுக்கும் காரணம் ராகு தான் என்று நம்பப்படுகிறது. அதனால் ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து ராகுவுக்கு பரிகார பூஜைகள் செய்து நலம் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. தினமும் ராகுகாலத்தில் செய்யப்படும் பாலாபிஷேகம் இங்கு மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும்.
சுற்றுலாப்பயணிகளும் ஆன்மீக யாத்திரீகர்களும் ஆண்டுதோறும் வருகைபுரியும் ஆலயம் ஒப்பிலியப்பன் ஆலயம் ஆகும். இக்கோவிலில் ராமநவமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ராமநவமி திருவிழாவின் கடைசி நாளில் கனகாபிஷேகமும் திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெறுகிறார்கள்.
திருநாகேஸ்வரத்தை சுற்றியுள்ள நவக்கிரக ஆலயங்கள்
ஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன. திருநள்ளாறு( சனிபகவான்), கஞ்சனூர்( சுக்கிரன்), சூரியனார் கோவில்( சூரியன்), திருவெண்காடு(புதன்), திங்களூர்( சந்திரன்), கீழப்பெரும்பள்ளம்( கேது), ஆலங்குடி( குருபகவான்), வைத்தீஸ்வரன்கோவில்(செவ்வாய்) ஆகிய ஊர்கள் திருநாகேஸ்வரத்திலிருந்து வெகு அருகாமையிலேயே அமையப்பெற்றிருக்கின்றன.
திருநாகேஸ்வரத்திற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம் கும்பகோணம் இரயில் நிலையமாகும். திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் செல்வதற்கு சிறப்பான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.