கமலஹாசன், 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது வருடங்கள் ஒரு நடன கலைஞனாக,உதவி இயக்குனராக, இயக்குனராக, கதை ஆசிரியராக, பாடகராக, நடிகனாக தன் முத்திரையை பதித்த மகா கலைஞன். பரமக்குடியில் பிறந்து ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவிற்கு அவர் செய்த பங்களிப்புகள் பொன் எழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. தனக்கென வகுத்து வைத்திருந்த எல்லையை தாண்டாமல் இருந்த தமிழ் சினிமாவை இன்று உலகம் மரியாதையோடு பார்க்கிறது என்றால் கமலஹாசன் இல்லமால் அது நடந்திருக்காது. இன்று கமல் தன்னுடைய 60ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தருணத்தில் அவர் திரைப்படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான, அந்நகரத்தை பற்றிய பார்வையை மாற்றிய சில இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவர்மகன் - மதுரை :
1992இல் சிவாஜி கணேசன், கமலஹாசன் நடிப்பில் மதுரை பின்னணயில் நடக்கும் திரைப்படமாக தேவர்மகன் வெளியானது. இத்தனை உயிர்ப்புடன், இத்தனை ஆழமாக மதுரையையும் அதன் உண்மையான முகத்தையும் எந்தப்படமும் பதிவு செய்ததில்லை என்று சொல்லவைத்தது. மீனாக்ஷி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோயில், காந்தி அருங்காட்சியகம் என தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக மதுரை திகழ்கிறது. தைப்பொங்கலன்று மொத்த மதுரையும் விழாக்கோலமாக காட்சி தரும்.
குணா - குணா குகை:
குணா படம் வருவதற்கு முன்பே கொடைக்கானல் பிரபலமான சுற்றுலா இடமாக இருந்தாலும் சாத்தானின் சமையறை (Devil's Kitchen) எனப்படும் அதி ஆழமான குகைகளைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
ஆனால் குணா படம் வெளியானதில் இருந்து இன்று வரை கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடமாக மாறிவிட்டது.
இது தவிர வெள்ளி அருவி, பொட்டனிக்கல் கார்டென், பேரிஜம் ஏரி, படகு சவாரி என தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் திகழ்கிறது.
வெயிலின் வதையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொடைகானல் சென்று வரலாம்.
நாயகன் - மும்பை:
கமல்ஹாசனுள் இருந்த நடிப்பு அசுரனை வெளிக்கொண்டுவந்த இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட படம் நாயகன். தமிழ் நாட்டிற்கு அடுத்து இந்தியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமான மும்பையில் நடக்கிறது இந்த படத்தின் கதை. மொத்த மும்பையையும் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் P.C. ஸ்ரீராம். அதே அழகுடன் மும்பை இன்றும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. இந்தியா கேட், எலிபெண்டா குகை சிற்ப்பங்கள், சஞ்சய் காந்தி தேசிய பூங்கா, கனேஹ்ரி குகைகள் என ஏராளமான நல்ல சுற்றுலாதலங்கள் உள்ளன.
தசாவதாரம் - ஸ்ரீரங்கம்:
உலகநாயகனின் திறமைகளுக்கு மகுடம் வைத்தது போல அமைந்த படம் தசாவதாரம். பத்து வேடங்களில் அவர் இப்படத்தில் நடித்திருந்தார். அதில் ஒன்றாக 12 நூற்றாண்டை சேர்ந்த வைணவராக நடித்திருப்பார்.
ஸ்ரீ ரங்கம் கோயிலில் அவர் 2ஆம் குலோத்துங்க சோழ மன்னனுடன் மோதுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். அதில் வரலாற்று காலத்தில் சிதம்பரம் எப்படி இருந்தது, அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, பக்தி ஈடுபாடு என அருமையாக காட்சி படுத்தியிருப்பார். ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் இன்றும் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள விஷ்ணு கோயில் பெரும் சிறப்புடன் விளங்குகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய கோபுரம் இக்கோயிலில் தான் அமைந்திருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் இக்கோயிலுக்கு நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவசியம் சென்று வர வேண்டும்.
புன்னகை மன்னன் - அதிரப்பள்ளி அருவி:
கமலஹாசனின் திரை வாழ்க்கையில் புன்னகை மன்னன் திரைப்படம் ஒரு திருப்புமுனை. இப்படத்தில் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாததால் இறப்பிலாவது ஒன்று சேரலாம் என முடிவெடுத்து கமலஹாசனும், நாயகி ரேகாவும் ஒரு அருவியின் உச்சியில் இருந்து குதிப்பார்கள். அப்படி பிரபலமான அருவிதான் கேரளாவில் திருச்சூரில் இருக்கும் அதிரப்பள்ளி அருவி. 'இந்தியாவின் நயாகரா' என செல்லமாக அழைக்கப்படும் இவ்வருவி அருமையான இயற்க்கை சூழலில் அமைந்திருக்கிறது. கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்கள் அவசியம் இங்கு வர வேண்டும்.
புஷ்பக விமானா - பெங்களுரு:
ஊமைப்படமாக எடுக்கப்பட்ட புஷ்பக விமானா என்னும் திரைப்படம் கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதில் 1980களின் வேலை இல்ல திண்டாட்டத்தை அற்புதமாக வெளிக்காட்டியிருப்பார் கமல். பெங்களுருவில் எடுக்கப்பட்ட இப்படம் அக்கால பெங்களுருவை தத்ரூபமாக படம்பிடித்தது. தொழில் நுட்ப நகரமாக வளர்ந்து விட்ட பெங்களுரு நல்லதொரு சுற்றுலாதலமும் கூட. பனேர்கட்டா தேசிய பூங்கா, லால் பாக் பூங்கா, வொண்டெர் லா என குளுமையான சூழலில் சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் இங்கே உண்டு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இன்று உலக நாயகன் கமல் ஹாசனின் 60 பிறந்த நாள். அவருக்கு நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை இங்கே பகிருங்கள்