கர்நாடக கடலோரப் பகுதி அரபிக் கடலோரம் மொத்தம் 320 கி.மீ நீளத்துக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. இப்படி பரந்து விரிந்து கிடக்கும் எண்ணற்ற கடற்கரையோர சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்ட பெருமை மங்களூருக்கு உண்டு.
அதுபோலவே மால்பே, பைந்தூர், கார்வார் போன்ற கடற்கரை நகரங்களும் கர்நாடகாவின் வசீகரமிக்க கடற்கரைகளாகும். இந்தக் கடற்கரைகள் அரபிக் கடலின் ஓரத்தில் மாசற்ற பொன் நிறத்தில் காற்றில் அசையும் பனை மரங்களோடு காட்சியளிக்கின்றன.
ஓம் பீச், கோகர்ணா
ஓம் என்ற எழுத்து வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பயணிகள் நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு. அதுமட்டுமல்லாமல் அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் : Rrevanuri
செயிண்ட் மேரி தீவு கடற்கரை
கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.
படம் : Man On Mission
கௌப் கடற்கரை, உடுப்பி
கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்பப்படும் கடற்கரைகளுள் ஒன்று உடுப்பியிலுள்ள கௌப் கடற்கரை. இந்தக் கடற்கரையை சுற்றி காணப்படும் கரும்பாறைகள், 100 வருட பழமையான கலங்கரை விளக்கு, கடலின் ஒங்கார இசை என்ற பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிப்பது மறக்கமுடியாத அனுபவம்.
சூரத்கல் கடற்கரை
மங்களூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியான கர்நாடகா ரீஜனல் இஞ்சினியரிங் கல்லூரிக்கு (KREC ) வெகு அருகிலேயே சூரத்கல் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதற்கு இங்கு அமைந்திருக்கும் அழகிய கலங்கரை விளக்கமே காரணம். இக்கலங்கரை விளக்கத்தின் உள்ளே சென்று பார்வையிடுவதற்கு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
படம் : Pranavjee
மரவந்தே கடற்கரை, மரவந்தே
கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.
முருதேஸ்வர் கடற்கரை, முருதேஸ்வர்
உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையாக கருதப்படும் சிவன் சிலை முருதேஸ்வர் கடற்கரையின் கவர்ச்சி அம்சமாகும். அதோடு முருதேஸ்வர் கடற்கரைக்கு வரும் பயணிகள் கடலில் மீன்பிடிப்பது, படகுச் சவாரி செய்வது, கடற்கரையில் சூரியக் குளியல் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
தன்னீர்பாவி கடற்கரை, மங்களூர்
மங்களூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் பனம்பூர் எனும் இடத்தில் தன்னீர்பாவி கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையில் குர்புரா நதி கடலில் கலக்கின்ற அற்புதமான காட்சியுடன், சூரிய அஸ்த்தமனக் காட்சியும் சேர்ந்து அற்புதமான ஒரு மாலை நேரத்தை உங்களுக்கு பரிசாக கொடுக்கப்போகின்றன.
கார்வார் கடற்கரை, கார்வார்
கார்வார் கடற்கரை மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சூழ்ந்திருக்க மத்தியில் எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. அதோடு அமைதியான அற்புதமான கடற்கரையை தேடும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு இது மிக பொருத்தமான இடமாகும். இங்கு பயணிகள் சூரியக்குளியல், மீன் பிடித்தல் மற்றும் இதர நீர் விளையாட்டு பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் தேங்காய் சேர்த்து செய்யப்படும் காரசாரமான கடல் உணவு வகைகளை சுவைக்க மறந்து விடாதீர்கள்.
படம் : Noronha3
மால்பே கடற்கரை, மால்பே
உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
படம் : Neinsun
பைந்தூர் கடற்கரை, பைந்தூர்
பைந்தூர் கடற்கரையின் அமைதிக்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இந்தக் கடற்கரை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் கவின்மிகு காட்சி பயணிகளை வெகுவாக கவரக்கூடியது. மேலும் பைந்தூர் கடற்கரைக்கு அருகில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட கொல்லூர் மூகாம்பிகை கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும்.