கடற்கரைகள் அழகின் உதாரணங்கள். சங்கீதத்தின் தேடல்கள். அழகிய காட்சிகளின் விருந்தோம்பல். அத்தனை அழகையும் கொட்டித் தர தயாராக இருக்கும் அட்சயப்பாத்திரம். நாம் கவலையாக இருக்கும்போதும், சோர்வாக இருக்கும்போது கடற்கரைகளுக்கு பயணித்தால் நம்மை ஆசுவாசப் படுத்தி மன அமைதியுறச் செய்யும் அற்புதஆற்றல் கடற்கரைக்கு இருக்கிறது. நம் சுற்றுலாவின் ஒவ்வொரு நாளையும் நாம் சூரியனுக்கு முன்னே தொடங்கவேண்டும் என்பார்கள். புத்திசாலிகள் அதிகாலையில் சூரியனை எழுப்பி விடுவார்கள் என்று கூட சொல்வார்கள். அதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த கடற்கரை சூரிய உதயத்தைப் பற்றி இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.
மெரினா பீச், சென்னை
சென்னை மக்களின் செல்லக் கடற்கரையாகவும், இந்தியாவின் நீளமான கடற்கரையாகவும் அறியப்படும் மெரினா பீச் சூர்யோதய காட்சிக்கும் பிரபலமானது. ஒவ்வொரு நாள் காலையும் சூரியனை கைகுலுக்கி வரவேற்றுவிட்டு எக்கச்சக்கமான மக்கள் மெரினாவில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இருப்பதை பார்த்து சூரியனும் புன்னகையுடன் உதயமாகிறது!
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து அடையாறு கழிமுகம்
வட முனையில் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள இந்த கடற்கரைப்பகுதி உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரையாக புகழ்பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இந்த மெரினா கடற்கரை தூய்மையாக இடமாக புகழ் பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த கடற்கரை நீரானது தூய்மை கெட்டும் கடற்கரை பகுதி மாசுபட்டும் காட்சியளிக்கிறது.
முழுப்பிளாங்காட் பீச்
இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தலசேரியிலிருந்து
முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்வதற்கும் ஏற்ற இந்த கடற்கரைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்கின்றனர்.
கௌப் கடற்கரை, உடுப்பி
கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்பப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரை. இந்தக் கடற்கரையை சுற்றி காணப்படும் கரும்பாறைகள், 100 வருட பழமையான கலங்கரை விளக்கு, கடலின் ஒங்கார இசை என்ற பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிப்பது மறக்கமுடியாத அனுபவம்.
உடுப்பியிலிருந்து
மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்த கடற்கரையை ஒட்டி மேற்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சிற்றுலா செல்வதற்கு வசதியாக இது உடுப்பியிலிருந்து 12 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது ஒரு விசேஷமாகும். கடலில் நீச்சல் அடிக்கவும் வெயில் காயவும் கூட இது ஏற்ற கடற்கரையாகும்.இந்த கடற்கரை ஸ்தலத்துக்கு உடுப்பியிலிருந்து எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் செல்லலாம்.
தென்னெட்டி பார்க் பீச், விசாகப்பட்டணம்
ஒருபக்கம் கைலாசகிரி, மறுபக்கம் வங்காள விரிகுடா என்று காண்போரை கவர்ந்திழுக்கிறது தென்னெட்டி பார்க் பீச். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூர்யோதய காட்சிக்கு அடிமையாகி திரும்ப திரும்ப இங்கே வந்து குட்டிபோட்ட பூனை போல சுற்றிக்கொண்டு உள்ளனர். இதன் காரணமாக ஏராளமான திரைப்படங்களில் இந்த கடற்கரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரம்மியமான சூரிய உதயம்
வங்காளவிரிகுடாவை ஒட்டியுள்ள கடற்கரையான இது ரம்மியமான சூரிய உதயம் மற்றும் சிவந்த அடிவானத்துடன் காட்சியளிக்கும் அஸ்தமனம் ஆகியவற்றுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இதன் சகோதர கடற்கரையான ‘லாசன் பே' எனும் கடற்கரையும் அற்புதமான எழிற்சூழல் மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் வீற்றுள்ளது.
பூரி பீச்
இந்தியாவில் சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனம் இரண்டையும் பார்த்து ரசிக்கக்கூடிய இடங்களில் பூரி பீச் முக்கியமானது. நீளமான கடற்கரையும், ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் அலையோசையும், வண்ணங்களை வாரியிறைத்து சூரியன் செய்யும் மாயவித்தைகளும் பயணிகள் மனதை விட்டு என்றும் அகலாது.
அடர் பொன்னிறத்தில் தகதகக்கும்
கடற்கரையோரத்தில் அடர் பொன்னிறத்தில் தகதகக்கும் நீளமான மணல்வெளி, உடலை வருடும் மெல்லிய தென்றல், சூரிய ஒளியில் மின்னும் தெளிவான தண்ணீர், சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அற்புதக்காட்சிகள் ஆகியவை இந்த கடற்கரையை நிரந்தர ஈர்ப்பாகத் திகழச்செய்கின்றன.