கர்நாடக மாநிலம் காடுகளும், இயற்கை வனப்பும் கொண்ட அழகிய தளங்களை கொண்ட மாநிலம் ஆகும். இங்கு காடுகளில் சுற்றுலா செல்வது என்பது இங்குள்ளவர்கள் மட்டு மல்லாமல், இந்தியா வெங்கு மிருக்கும் பல சுற்றுலா பயணிகளுக்கு பிரியமானதாகும். கர்நாடக மாநிலத்தில் பரந்து விரிந்து கிடக்கும் எண்ணற்ற கடற்கரை யோர சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்ட பெருமை மங்களூருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணா கோயில், ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில், ஸ்ருங்கேரி சாரதா கோயில், குக்கே சுப்பிரமணிய கோயில், தர்மஸ்தாலா உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களும் மங்களூரை சுற்றி உள்ளன.கர்நாடகாவின் சொக்க வைக்கும் கடற்கரை தேசமாக மரவந்தே கடற்கரை திகழ்ந்து வருகிறது.அத்துடன் இந்த இடத்துக்கு உலகம் எங்கிலும் இருந்தும் பல பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் 5 முக்கிய குகைகள் குறிப்பிடத் தக்க சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. வாருங்கள் அவற்றுக்கு சுற்றுலா செல்வோம்
பிலாத்வாரா குகை
குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு சுற்றுலா அம்சம் இந்த பிலாத்வாரா குகை ஆகும். புராணக் கதைகளின்படி கருடனிடமிருந்து தப்பித்து வாசுகிப்பாம்பு இங்கு பதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குமாரதாரா ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ளது. இந்த குகையில் இயற்கையாகவே அமைந்த நுழை வாசலும் மற்றும் வெளி வாசலும் காணப்படுகின்றன. இந்த குகை 10 மீட்டர் நீளமும் 30 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. சுற்றிலும் அழகான பூங்காத்தோட்டத்தைக் கொண்டுள்ள இந்த குகைக்கு வாசுகிப்பாம்பின் அருளைப்பெற வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பாதாமி குகை
பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த குகைக்கோயில்களையும் பார்ப்பது முக்கியமாகும். மணற்பாறைகளால் ஆன மலையில் குடையப்பட்டுள்ள இந்த குகைக்கோயில்களில் புராண ஐதீக சம்பவங்களையும் நீதிகளையும் விளக்கும் புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் 4 குகைக்கோயில்களில் முதல் முக்கியமான கோயில் 5 நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் சிவனின் அர்த்தநாரீஸ்வர அவதாரம் மற்றும் ஹரிஹர அவதாரங்கள் நடராஜ தாண்டவக்கோலங்களுடன் காணப்படுகின்றன.
ஹரிஹர அவதாரத்தில் வலப்புறம் சிவனும் இடப்புறம் விஷ்ணுவுமாக சிவபெருமான் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பக்தர்கள் மகிஷாசுரமர்த்தினி, கணபதி, சிவலிங்கம், ஷண்முகா போன்ற சிற்பங்களையும் பார்க்கலாம். இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணுக்கடவுளின் வராஹ அவதாரமும் திரிவிக்கிரம அவதாரமும் இடம்பெற்றுள்ளன.
குகைக்கோயிலின் கூரையில் புராணக்காட்சிகளும், கருட அவதாரமும் இடம்பெற்றுள்ளன. 100 அடி நீளத்துக்கு காணப்படும் மூன்றாவது குகைக்கோயிலில் விஷ்ணுவின் திரிவிக்கிரம மற்றும் நரசிம்மா அவதாரங்கள் காணப்படுகின்றன. இதுதவிர சிவன் மற்றும் பார்வதியின் திருமணக் காட்சி ஓவியங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. நான்காவது குகைக்கோயில் ஜைன மரபுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் மஹாவீரரின் பத்மாசன கோல சிற்பம் மற்றும் பர்ஷவநாத தீர்த்தங்கரரின் சிறு சிற்பம் போன்றவை வடிக்கப்பட்டுள்ளன.
ராவண பாடி
ஏஹோல் வரும் பயணிகள் ராவண பாடியையும் பார்ப்பது அவசியம். இது ஏஹோல் பகுதியில் உள்ள பழையான குகைக்கோயிலாகும். செவ்வக வடிவத்தில் அமைந்துள்ள இந்த சிவனுக்கான கோயில் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்தக் கோயிலில் இரண்டு மண்டபங்கள், சிவலிங்கம் மற்றும் கருவறை போன்றவை அமைந்துள்ளன. செதுக்கப்பட்ட தூண்களைக்கொண்ட இந்தக் கோயில் கருவறை சைவமரபுப்பாணியில் ஒரு அறை மற்றும் மூன்று வாசல்களைக்கொண்டுள்ளது.தென்மேற்கை நோக்கியுள்ள இந்த கோயிலின் வாயிலின் மேல் இணையாக ஒரு உடைந்த உத்திரம் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் உள்ள பள்ள அமைப்பில் தனியாக இரு சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இந்த உள் மற்றும் வெளிச்சுவற்றில் சிவனின் பலவிதமான நடன நிலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சப்தமாத்ரிகா (ஏழு தாய்க்கடவுள்கள்) சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தாண்டவ சிற்பங்கள் அமைந்திருப்பது இந்த குகைக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
பிரமாஷ்ரம்
பயணிகளுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டாயம் பிரமாஷ்ரம் என்ற புனித ஸ்தலத்துக்கு செல்ல வேண்டும். இந்த ஆஷ்ரமம் இயற்கையாக உருவான பாறாங்கற்களால் ஆன குகை. பிரமாஷ்ரம் ஒரு காலத்தில் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் தவம் புரிந்த இடம். இதன் ஆன்மீக முக்கியத்துவத்துக்காகவும், தனித்துவமான அமைப்புக்காகவும் பிரபலமான புனித ஸ்தலமாக விளங்கி வருகிறது.
யானா குகைகள்
யானா வரும் சுற்றுலா பயணிகள் அதன் குகைகளை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த 3 மீட்டர் ஆழமுள்ள குகைகள், ஆண்டின் எல்லா பருவங்களிலும் பசுமையாகவே காட்சியளிக்கும் கர்நாடகாவின் சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைத்திருக்கிறது. இதன் தனித்துவமான கருஞ்சுண்ணாம்பு பாறைகளில் ஏறிச் செல்லும் அனுபவத்தை சாகசப் பிரியர்கள் வெகுவாக விரும்புவார்கள். இக்குகைகளின் வாயிலில் இருக்கும் சிவலிங்கம் கங்கோத்பவா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள தொன்மையான கொயிலுக்காகவும், பாறை வடிவங்களுக்காகவும், நீர்வீழ்ச்சிகளுக்காகவுமே யானாவின் குகைகள் பயணிகளிடையே பிரத்தியேகமாக அறியப்படுகிறது. மேலும், துர்காவின் அவதாரமாக கருதப்படும் சந்திகா தேவியின் வெங்கல சிலை ஒன்றையும் பயணிகள் இங்கு காணலாம். யானாவின் பாறைகளை கடந்து செல்லும் தண்ணீரிலிருந்து சந்திஹோல் என்ற சிறிய நதி உருவாகி, அது பின்பு உப்பினப்பட்டனத்தில் ஓடும் ஆஹனாசினி ஆற்றுடன் கலக்கிறது.