கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் உப்பங்கழிகள், சரணாலயங்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், அழகிய மலைவாசஸ்தலங்கள், தேயிலை தோட்டங்கள் என எண்ணற்ற சுற்றுலத்தலங்கள் உள்ளன. ஆனால் உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளாவில் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஜடாயு எர்த் சென்டர் என்பது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் நகருக்கு அருகில் உள்ள ஜடாயுபராவில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும்.
ஜடாயுபுரா வரலாறு
அசுர மன்னன் ராவணன் சீதா தேவியைக் கடத்திச் சென்றபோது, ஜடாயு பாய்ந்து வந்து அவளைக் காப்பாற்ற முயன்றான் என்று பண்டைய இந்திய காவியமான ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபத்தில் ராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டியதாகவும், வெட்டப்பட்ட இறக்கைகள் சடையமங்கலம் பாறைகளில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் தான் இது ஜடாயுமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே நிறுவப்பட்டுள்ள ஜடாயுவின் பிரமாண்டமான சிற்பம், வீரம் மிக்க ஜடாயுவிற்கும் அரக்க அரசன் ராவணனுக்கும் இடையே நடந்த சண்டையின் சம்பவத்தை உயிர்ப்பிக்கிறது.
ஜடாயு சிற்பம்
புராணக்கதையில் இடம் பெற்றுள்ள ஜடாயு இந்திய மக்களின் மனதில் ஒரு நீங்காத இடம்பெற்றுள்ளது. அதன்படி இங்கு 75 அடி உயரமும், 200 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட ஜடாயு சிலை நிறுவப்பட்டுள்ளது. 1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை கட்டிமுடிக்க 10 ஆண்டுகள் ஆனது.
ஜடாயு எர்த் சென்டர் பல சாகச நடவடிக்கைகள் கொண்ட ஒரு குடும்ப சுற்றுலாத் தலமாகவும், சுற்று சூழல் நட்பு சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. ஜடாயு சிற்பம் அமைந்துள்ள உச்சிக்கு செல்ல கார்களில் அமர்ந்து செல்லலாம். அல்லது படிகளில் ஏறி நடந்து செல்லலாம். இரண்டுமே பொழுதுபோக்காக இருக்கும். அற்புதமான ஜடாயு சிற்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் வான்வழி காட்சியை உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பினால், நீங்கள் ஹெலிகாப்டர் பயணத்தையும் தேர்வு செய்யலாம்.ஜடாயு புவி மையத்தின் உச்சியில் இருந்து 360 டிகிரி இயற்கைக் காட்சியையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.
ஜடாயு எர்த் சென்டர் - நேரம், நுழைவு கட்டணம்
ஜடாயு எர்த் சென்டர் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் 2௦௦ ரூபாய் ஆகும். மேலும் கேபிள் கார் மூலம் மேலே சென்று வருவதற்கு கூடுதல் கூடுதலாக 25௦ ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஜடாயு எர்த் சென்டர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் மற்றும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். எனவே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு செல்லலாம்.
ஜடாயு எர்த் சென்டரில் இருக்கும் கூடுதல் அம்சங்கள்
இது ஒரு புனித யாத்திரை சுற்றுலாத் தலமாகவும், சாகச சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். ஜடாயு எர்த் சென்டர் நான்கு மலைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு மலைக்கும் தனித்தனி செயல்பாடுகள் உள்ளன.
ஜடாயு எர்த் சென்டரின் முக்கியமான அம்சமான ஜடாயு சிற்பம் முதல் மலையில் தான் அமைந்துள்ளது. சிற்பத்தின் உள்ளே ஒரு ஆடியோ காட்சி அருங்காட்சியகமும் ஒரு தியேட்டரும் செயல்பாட்டில் உள்ளது.
இரண்டாவது மலை பெயிண்ட்பால், மலையேற்றம், போல்டரிங், ராப்பெல்லிங், ஜம்மரிங், சிம்னி க்ளைம்பிங், செங்குத்து ஏணி, ஜிப்லைனிங், வில்வித்தை மற்றும் ரைபிள் ஷூட்டிங் உள்ளிட்ட பல சாகச நடவடிக்கைகளை வழங்குகிறது.
மூன்றாவது மலையில் 250 மீட்டர் ஜிப் லைன் மற்றும் ஸ்கை சைக்கிளிங் ஆகியவை உள்ளன. நேரடி இசையுடன் கூடிய கேம்ப்ஃபயர்ஸ் மற்றும் மூன்லைட் டின்னரிலும் நாம் இங்கு ஈடுபடலாம்.
நான்காவது மலை ஒரு ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சி மையமாக செயல்படுகிறது. இயற்கை குகைகளுக்குள் பாரம்பரிய சித்த ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சைகள் இங்கே கொடுக்கப்படுவதை நாம் காணலாம்.
எப்படி ஜடாயு எர்த் சென்டரை அடைவது?
ஜடாயு எர்த் சென்டர் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும் கொல்லத்தில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. வான் வழியாக ஜடாயு சென்டரை அடைய திருவனந்தபுரம் விமான நிலையத்தை பயன்படுத்தலாம். மேலும் இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் கொல்லம் சந்திப்பு ஆகும். அல்லது கடவுளின் சொந்த தேசத்தின் மயக்கும் கிராமப்புறங்களில் சாலையில் பயணம் செய்வது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதால் நீங்கள் சாலை மார்க்கமாகவும் பயணிக்கலாம்.