ஒவ்வொரு ஊரின் வரலாற்றைத் தேடிப் பிடித்து படிப்பதென்பது சிலருக்கு வாடிக்கை. சிலர் அந்த ஊருக்கே நேரடியாகச் சென்று கண்முன்னே காண்பர். அங்குள்ள இடங்கள் கோயில்கள், சுற்றுலா அழகுகள் என அவர்களின் தாகம் குறைவதற்கு நிறைய தேடுவார்கள். அப்படி நமது தளத்தில் சுற்றுலா பிரியர்களான உங்களுக்கு சில உண்மைகளைக் கூற கடமைப் பட்டுள்ளோம். அப்படி ஒவ்வொரு இடத்தின் வரலாற்றை தேடி பார்க்கும்போது ஏற்படும் சுவாரசியமும், அதன் உண்மை நிலைகளும், சுற்றுலா அம்சங்களும் நமக்கு பொழுது போக்காக மட்டுமல்லாது, நம் எண்ணங்களை செம்மைப் படுத்துவதாகவும், உள்ளத்தை புத்துணர்வு பெறச் செய்வதாகவும் ஆக்கும். இன்று நாம் காணஇருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி பற்றித்தான். வாருங்கள்.. இது தமிழ் நேட்டிவ் பிளானட்டின் "தி ஹிஸ்டரி"
முதலில் சுற்றுலா பின் வரலாறு
சீர்காழி பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் நம் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த பகுதியில் நாம் சுற்றுலா செல்வதற்கும், வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் செல்ல இருக்கிறோம்.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி.
தோணிபுரம்
கிரிக்கெட் வீரர் தோணிக்கு பிடித்த ஊர் ஆதலால் இது தோணி புரம் என்று அழைக்கப்படுகிறது என்று கூட சிலர் உங்கள் காதில் பூ சுற்ற முற்படலாம். ஆனால் நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று தெரியும். சீர்காழி "தோணிபுரம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது. அதற்கு சிலபல காரணங்களும் இருக்கின்றன. அவற்றை சீர்காழியின் வரலாற்றை படிக்கும்போது தெரிந்துகொள்ளமுடியும்.
புனித தலமாக விளங்கும் சீர்காழி
தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாக திகழ்கிறது. ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.
Vishwajith33
திருவிழாக்கள்
எண்ணற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வருகைபுரிகிறார்கள். அக்டோபர்/நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் ஒளிமயமான தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை இந்நகரம் பெற்றுள்ளது. கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது.
Vishwajith33
சீர்காழியில் என்ன சிறப்பு?
சீர்காழியைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் , சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில், புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் ,வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு, திருமணஞ்சேரி மற்றும் திருவாழி திருநகரி விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன. இந்த எல்லா கோயில்களுக்கும் அதிகபட்சம் 2 மணி நேரங்களுக்குள்ளாக சென்று வரமுடியும் என்பது சிறப்பு.
Vishwajith33
சீர்காழி தங்கும் விடுதிகள்
சீர்காழிக்கு சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் இங்கே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அருகிலேயே தஞ்சாவூர், திருச்சி போன்ற நகரங்கள் இருப்பதால் சீர்காழியில் தங்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பமாட்டார்கள். எனினும் நீங்கள் விருப்பப்பட்டால், இங்கு தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. வசதிகளுக்கேற்ப கட்டணம் மாறுபடுகிறது.
Ssriram mt
சட்டநாதசுவாமி கோவில்
பிரம்மபுரீஸ்வரர் ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள சட்டநாதசுவாமி கோவில் சீர்காழியிலுள்ள ஒரு ஆன்மீக யாத்திரை தலமாகும். சிவபெருமானின் பைரவ கோலத்தில் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார்.
இங்கிருந்து பார்த்தால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் அனைத்து காட்சி எழிலையும் கண்டு இன்புறலாம். இக்கோவிலிலுள்ள அனைத்து கோபுரங்களும், மண்டபங்களும் பாரம்பரிய தென்னிந்திய இந்து கோவில் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளன.
Shriramsrinivas wki
தியானம் செய்ய பெரிய மைதானம்
பிரகாரத்திற்கு வெளியில் அமைந்துள்ள மைதானம் மிகப் பெரியதாகும். இங்கு வரும் மக்கள் இளைப்பாறவும், மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்யவும் இவ்விடத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மகாசிவராத்திரி காலத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து வருகை புரியும் மக்களால் இக்கோவில் நிரம்பி வழியும். சீர்காழி நகரத்தில் மேலும் பல ஆலயங்கள் அமைந்து மக்களையும், மதத்தையும், இறைவனையும், இறை நம்பிக்கையால் இணைக்கின்றன. இக்கோவில்கள் சீர்காழிக்கு கோவில்நகரம் என்ற பெயரையும் ஈட்டிக்கொடுக்கின்றன.
Shriramsrinivas wki
மற்ற சுற்றுலாத் தளங்கள்
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். பிற இரண்டு வடிவங்கள், சட்டைநாதர் மற்றும் தோணியப்பர் ஆகும். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்மதீர்த்தம் ஆகும்.
திருக்காழி ராம விண்ணகரம்
திருக்காழி ராம விண்ணகரம் என்னும் பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியில் உள்ள பெருமாள் கோவிலாகும். 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களில் இக்கோவிலும் ஒன்று.
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இக்கோவில். மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் இக்கோவிலில் உருவகிக்கப்பட்டுள்ளது.
திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம்
திருக்கோலக்கா என்னு ஊரில் அமைந்துள்ளது திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம். இங்குறையும் இறைவனான சிவபெருமான் சப்தபுரீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறார். இது சப்தபுரீஸ்வரர் என்னும் பெயருடன் இறைவன் விளங்கும் 15 ஆவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள அம்பிகை ஓசை கொடுத்த நாயகி என்னும் பெயருடன் சிறப்பான சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.
Ssriram mt
வரலாறு
வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி. தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது. புராணங்களின் படி பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினாராம். அப்படி பிரம்மன் வேண்டிய இடம் சீர்காழியாகும். பிரம்மன் வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தோணியிலேற்றி உயிர்களை காப்பாற்றியதால், சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன. சிவபெருமான் ஒரு தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் "தோணியப்பர்" என அழைக்கப்படுகின்றார்.
Ssriram mt