திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3500 அடி உயரத்தில் இந்த அழகிய சிறு கிராமம் அமைந்துள்ளது! தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் சென்று வாருங்களேன்! இதன் அழகில் நீங்கள் உங்களை தொலைப்பது உறுதி! இந்த இடத்திற்கு எப்படி செல்வது? எப்போது செல்வது? எங்கே அனுமதி வாங்குவது? எங்கே தங்குவது? போன்ற முக்கிய தகவல்கள் கீழே!
அழகிய மாஞ்சோலை
மாஞ்சோலை என்ற பெயரை பலமுறை நாம் கேள்விப்பட்டு இருப்போம், இங்கே நிலவும் அழகிய வானிலைக்காகவே இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது பொது மக்களிடையே அவ்வளவு பிரபலமா என்று யோசித்தால் அது தான் இல்லை! அதற்காகவே தான் இந்த பதிவு. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளே அமைந்து இருக்கும் இந்த சிறு அழகிய கிராமத்தைச் சுற்றி ஏராளமான இடங்கள் உள்ளன. கிராமத்தில் நிலவும் மிதமான காலநிலை, உங்களைத் தொட்டுச் செல்லும் மேகங்கள், எங்கு பார்த்தாலும் உலவும் மயில்கள், லேசான சாரல் துளிகள் என உங்களது மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறுவதை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.
நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்
டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், நாலுமூக்கு, சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை, வானபெட்சி அம்மன் கோயில், மணிமுத்தாறு அருவி, மேல் கோதையார் அணை ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்கள் ஆகும். நீங்கள் சாகச விரும்பியாக இருந்தால் அல்லது நண்பர்களுடன் வந்து இருந்தால் ட்ரெக்கிங்கில் ஈடுபடுங்களேன், குதூகலமாக இருக்கும்!
கட்டாயம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்
நீங்கள் மணிமுத்தாறு அணை மற்று அருவி வரை தான் செல்கிறீர்கள் என்றால் எந்த அனுமதியும் வாங்க தேவையில்லை. வெறும் நுழைவுக்கட்டணம் செலுத்தி சீட்டு வாங்கிச் சென்றால் போதும். ஆனால் மாஞ்சோலையைச் சுற்றி பார்க்கப் போகிறீர்கள் என்றால் கட்டாயம் அம்பை ரேஞ்சு துணை இயக்குனரிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். முதலில் நீங்கள் மணிமுத்தாறு அணையும் அருவியும் தான் காணுவீர்கள். பார்ப்பதற்கே மிக ரம்மியமாக இருக்கும் அந்த இடத்தில் ஒரு குளியலை போட்டு விட்டு நீங்கள் ஊத்து நோக்கி பயணிக்கலாம்.
ருசியான மதிய உணவு
ஊத்தில் சில கடைகளும் ஹோட்டல்களும் இருக்கின்றன. ஆனால் நீங்கள் மதிய உணவுக்கு வருகிறீர்கள் என்றால் கட்டாயம் இவர்களிடம் முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். இந்த ஹோட்டல்களின் போன் நம்பர்கள் கீழே உள்ள செக் போஸ்ட்களிலேயே ஒட்டப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் உணவும் மிகவும் கிராம பாங்கான முறையில், தூய்மையாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அங்கேயே சிறிது இளைப்பாறிவிட்டு நீங்கள் குதிரை வெட்டி நோக்கி புறப்பட வேண்டும்.
குதிரை வெட்டியில் நைட் ஸ்டே
ருசியான மதிய உணவு அருந்திவிட்டு அங்கே இருக்கும் இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நீங்கள் குடிரைவெட்டி நோக்கி பயணிக்கலாம். செல்லும் வழியெல்லாம் பசுமையைத் தவிர வேறு எதுவும் நம் கண்ணில் படாது. மேலே செல்ல செல்ல பனி அதிகமாகும், சாரல் லேசாக இருக்கும், மேகங்கள் கண்ணை மறைக்கும். நீங்கள் மிகவும் கவனமாக வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும். வழியில் எங்கேயாவது நீங்கள் இறங்க விரும்பினால், இறங்கி நின்று அழகை ரசிக்கலாம். ஆனால் ஜாக்கிரதை, இங்கே அட்டை பூச்சிகள் அதிகம். மிகவும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். குதிரைவெட்டியில் இரவு தங்க நீங்கள் முன்கூட்டியே ரூம் புக் பண்ணியிருப்பது அவசியம். அதை மறந்து விடாதீர்கள் மக்களே!
எப்படி செல்வது?
இந்த அழகிய சிறு மலைவாழ் கிராமம் திருநெல்வேலி டவுனில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் தென்காசி அல்லது திருநெல்வேலி வரை பேருந்து அல்லது ரயிலில் வந்திருந்தாலும் மாஞ்சோலைக்கு செல்ல கார் அல்லது டாக்சி புக் செய்து கொள்ளுவதே நல்லது. ஏனென்றால் வழியெல்லாம் மழை பொழியும், மேலே பெரிய வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை. முக்கியமாக பைக்கில் சென்றால் நீங்கள் நிச்சயம் சிரமப்படுவீர்கள். மேலே செல்ல செல்ல மழை பொழிவும், குளிரும் தாங்க முடியாது. மாஞ்சோலை மலையை பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமாகும்.
ஆம், நாம் சரியான நேரத்தில் தான் இருக்கிறோம். நீங்கள் இப்பொழுதே திட்டமிட்டாலும் நன்றாக இருக்கும், அல்லது மார்ச் ஏப்ரலில் கோடை விடுமுறையில் திட்டமிட்டாலும் சரி, நிச்சயம் சென்று வாருங்கள். கட்டாயம் உற்சாகமடைவீர்கள்!a