என்ன? தலைப்பை படித்த உடனே சற்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆனால் அது உண்மைதான். நம் பாரதக் கண்டத்தில் விசித்திரமான, வினோதமான மற்றும் மாய நிகழ்வுகளை நடைமுறைகளில் பார்ப்பதும் கேட்பதும் சாதாரணமான ஒன்றே! அது போல் தான் இதுவும்!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அனந்தபுரா கோவில் குளத்தில் பபியா என்ற காவல் முதலை உள்ளது! இந்த முதலை இறைச்சி அல்லது பிற அசைவ உணவுகள் எதையும் சாப்பிடுவது இல்லையாம்! பக்கத்தில் இருக்கும் மனிதர்களைக் கூட தீண்டாமல் கோவிலில் வழங்கப்படும் அரிசி, வெல்லம் ஆகியவற்றை மட்டுமே உண்ணுமாம்! அதனைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான விஷயங்கள் கீழே
பபியா என்ற சைவ முதலை
உலகின் மிக மூர்க்கமான, இறைச்சி உண்ணும் உயிரினம் சைவ உணவில் உயிர்வாழ்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஆனால் இங்கு அது அரங்கேறிக் கொண்டு இருக்கிறதே!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அனந்தபுர கோவில் வளாகத்தில் உள்ள புனித குளத்தை ஒட்டிய குகையில் சைவ முதலை ஒன்று தங்கியுள்ளது என்பது நம்பமுடியாத உண்மையாகும். இதனை பபியா என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
பபியா ஒரு சைவ முதலை என்றும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோவில் குளத்தில் வசித்து வருகிறது என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
பிரசாதம், அரிசி, வெல்லம் மட்டுமே இதன் மெனு
கோவில் குளத்தில் போதுமான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் இருந்தாலும், பபியா சைவ உணவுகளை மட்டுமே உண்டு வாழுகிறது. கருவறையில் உள்ள சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதங்களும், அரிசியும், வெல்லமும் மட்டுமே பபியாவின் மெனு ஆகும்.
புனித நீரில் நீராடும் பூசாரிகளுடன் குளத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நட்பாக உள்ளது. பாபியா யாரையும் தாக்கியதில்லை என்பதுதான் உண்மை. கோவிலுக்கு வரும் பக்தர்களும் இதன் அருகில் அமரலாம், உணவு கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. சற்று திகிலாக இருக்கிறது அல்லவா?
சொல் பேச்சு கேக்கும் பபியா
இது கோவில் குளத்தில் வாழும் காவல் முதலை, சில நேரங்களில் கோவில் சன்னிதானத்திற்குள் முதலை மெதுவாக ஊர்ந்து வருகிறது. அங்கு மக்கள் கூட்டம் இருந்தால், அர்ச்சகர் அதை உடனே குளத்திற்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறார். அதுவும் உடனே அமைதியாக திரும்பி சென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
இருப்பினும், இது எப்படி இங்கு வந்தது, யார் பெயரிட்டார்கள் என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய ஒரு புராணம், பிரிட்டிஷ் சிப்பாயுடன் தொடர்புடைய ஒரு புராணம் என பபியாவைச் சுற்றி பல கதைகள் உள்ளன.
அனந்தனுடன் தொடர்புடைய ஸ்ரீ அனந்தபுரா கோவில்
கேரளாவின் வடக்கு முனையில், காசர்கோடு மாவட்டத்தில் கும்பிளா அருகே அனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயில் பகவான் மகாவிஷ்ணுவிற்காக அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். இதுவே, கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மூலஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ அனந்தபுரா கோவில் பெங்களூருவில் இருந்து 10 மணி நேர பயண தூரத்திலும், சென்னையிலிருந்து 14 மணி நேர பயண தூரத்திலும், திருவனந்தபுரத்திலிருந்து 13 மணி நேர பயண தூரத்திலும், கொச்சியிலிருந்து 10 மணி நேர பயண தூரத்திலும் உள்ளது.
இந்த முதலை ஆசீர்வாதங்களின் முன்னோடியாக நம்பப்படுவதால் நீங்கள் இந்தக் கோவிலுக்கு செல்லும் போது நேரமானாலும் சற்று காத்திருந்து இதைக் கண்டு விட்டு வாருங்கள்! உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்!