ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் இருக்கும் நகரமான அதிலாபாத் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. பல்வேறு கலாச்சார அம்சங்களின் கதம்ப நகரமாக காட்சியளிக்கும் அதிலாபாத் நகரம் செழுமையான வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. பல வட இந்தியா சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட தனித்தன்மையையும் இந்த நகரம் பெற்றுள்ளது.
மௌரிய அரச வம்சத்தினர், நாக்பூர் போன்ஸ்லே ராஜ வம்சத்தினர் மற்றும் முகலாய மன்னர்கள் போன்றோரின் ஆளுகைக்குள் இப்பகுதி இருந்து வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தென்னிந்திய அரசவம்சங்களான சாதவாஹனர்கள், வாகடகர்கள், ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள், சாளுக்கியர்கள் மற்றும் பேரார் இமாத் ஷாஹி வம்சத்தினர் போன்றோரின் ஆட்சியிலும் இந்த அதிலாபாத் நகரப்பகுதி இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நகரத்தின் சுற்றுலா அம்சங்களைத் தெரிந்து கொள்ளவேண்டாமா? வாருங்கள்.
வரலாறு
ஔரங்கசீப் மன்னரின் ஆட்சியில் இந்தப்பகுதி ஒரு முக்கிய தொழில் வணிக கேந்திரமாக பிரசித்தமாக திகழ்ந்திருக்கிறது. வாசனைப்பொருட்கள், துணி வகைகள் மற்றும் இதர பொருட்களை தலைநகர் டெல்லி வரை பரிமாறிக்கொள்ளும் பரபரப்பான வணிகச்சந்தையாக இது வரலாற்று காலத்தில் இயங்கியிருக்கிறது.
முகலாயப்பேரரசின் ஆதிக்கம்
தக்காணத்தின் இந்த அதிலாபாத் பகுதிக்கு விசேஷ முக்கியத்துவம் கிடைப்பதில் ஔரங்கசீப் தனிக்கவனம் செலுத்தியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் முகலாயப்பேரரசின் ஆதிக்கம் நீடிக்கவேண்டுமெனில் இந்த ஆதிலாபாத் பகுதி ஒரு முக்கிய கேந்திரமாக விளங்குவது அவசியம் எனும் ராஜதந்திரத்தை அவர் பின்பற்றியதாக தெரிகிறது.
கிழக்கிந்திய கம்பெனி
பொருளாதார வளத்துடன் திகழ்ந்திருந்த இந்த அதிலாபாத் நகரத்தின் சூழ்நிலை தக்காணத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் கால் வைத்தபின் அடியோடு மாறியது. பணத்துக்காக நிஜாம் மன்னர் இந்த அதிலாபாத் நகரம் மற்றும் சூழ்ந்துள்ள பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் தாரை வார்த்தார். 1860ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த பரிவர்த்தனையை எதிர்த்து ராம்ஜி கோண்ட் என்பவர் தலைமையில் ஒரு மக்கள்புரட்சியும் நிகழ்த்தப்பட்டது. 1940 ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சுதந்திர போராட்டங்களிலும் இந்த ஆதிலாபாத் நகரம் முக்கிய பங்கை வகித்தது.
சுற்றுலா நகரம்
தற்போதைய அதிலாபாத் நகரம் சரித்திர அடையாளங்களை கொண்டுள்ள ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது. குண்டலா நீர்வீழ்ச்சி, செயிண்ட் ஜோசப் கதீட்ரல், கடம் அணை, சதார்மட் அணைக்கட்டு, மஹாத்மா காந்தி பார்க் மற்றும் பசரா சரஸ்வதி கோயில் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த அதிலாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன.
எப்படி செல்வது
சுற்றுலா வசதிகளும் சூழலும் சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் எளிதில் பயணிக்கும் வகையில் அதிலாபாத் நகரம் போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 7 இந்நகரம் வழியாக செல்வதை ஒரு கூடுதல் விசேஷம் என்றும் சொல்லலாம். அருகிலுள்ள ஆந்திர மற்றும் அண்டை மாநில நகரங்களிலிருந்து அதிலாபாத் நகரத்துக்கு பேருந்து சேவைகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
நாக்பூர், திருப்பதி, ஹைதராபாத், நாசிக், மும்பை, நாக்பூர் மற்றும் ஷோலாபூர் போன்ற நகரங்களுடன் ஆதிலாபாத் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளது.
நாக்பூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களாக அமைந்துள்ளன. நாக்பூர் விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையம் என்றாலும் முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வெளிநாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகளை கொண்டுள்ளது
எப்போது செல்வது
கோடையில் ஆதிலாபாத் நகரத்திற்கு சுற்றுலா மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். மழைக்காலத்தில் இப்பகுதி அதிக மழையை பெறுவதில்லை. இதன் காரணமாகவே இப்பகுதியில் அதிகமாக நீர்த்தேக்கங்களும், அணைகளும் கட்டப்பட்டிருக்கின்றன.
குளிர்காலத்தில் இனிமையான சூழல் நிலவுவதால் சுற்றுலாவுக்கு அப்பருவமே ஏற்றதாக உள்ளது. மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால் குளிர் அங்கிகள் மற்றும் சால்வைகள் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.
சுற்றுலாத் தளங்கள்
ஆதிலாபாத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை கதம் அணைக் கட்டு, காந்தி பார்க், பஸரா சரஸ்வதி கோவில், புனித ஜோசப் கதீட்ரல், சதார்மட் அணை கட்டு ஆகியனவாகும்.