தனிமையில் பயணிப்பதால், உங்கள் எண்ணங்கள் உங்களைச் சுற்றியும் உங்கள் நலனைச் சுற்றியும் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதான பார்வை உருவாகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும்போது கவனிக்காத சில விசயங்களையும், உலகின் நியதிகளையும் தனிமை சுற்றுலா உங்களுக்கு போதிக்கும். அழகியல் சார்ந்த விசயங்களைத் தாண்டி, ஒரு விசயம் இருப்பதை தனிமையில் பயணம் செய்யும் உங்களுக்கு இயற்கை ஊட்டித் தரும்.
யார் யாரிடம் எப்படி எப்படி பழகுவது என்பதும் தெரியாமல், தனியே சுற்றித் திரிவதைக் காட்டிலும் தனிமையில் பயணம் செல்வது உங்களுக்கு சொந்தங்கள், உறவுகள், நட்புகளின் அருமையை உணர்த்தும். மனம் விட்டு பேச யாரும் இல்லா தருணங்களில் தனிமைப் பயணங்கள் தன்னம்பிக்கை ஊட்டும். இதுமட்டுமல்ல இன்னும் முக்கியமான சில விசயங்கள் இருக்கின்றன. வாருங்கள் பார்க்கலாம்.
தெரிந்து கொள்ளுங்கள்
ஒருமுறை தனிமையில் பயணிக்கத் தொடங்கிவிட்டீர்கள் ஆயின் உங்களுக்கு இந்த உலகமே சொந்தமாகிவிடும். யாரும் உங்களுக்கு எஜமான் இல்லை என்ற எண்ணம் வந்தாலே உங்களைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு எளிதில் உணரமுடியும்.
நீங்கள் ஒரு சாலையில் செல்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கான சாலை. அதை சுத்தமாக வைத்திருக்க இயல்பாகவே தோன்றும். அதே நேரத்தில் தனிமை பயணம் உங்களை அந்த இடத்துக்கு மிகவும் நெருக்கமாக்கிவிடுகிறது.
தனிமையில் பயணிக்கும் நிகழ்வு உங்களுக்குள் இருக்கும் ஒரு அசுரனை அமைதியாக்குகிறது. ஆழ் மனதுக்குள் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு செயலை உங்களுக்கு நினைவூட்டி தைரியத்தை வரவழைத்து உங்களை அந்த காரியத்தை செய்யச் சொல்கிறது.
நீங்கள் உங்களுக்கே சொந்தமாகும்போது உங்களை நீங்களே மதிக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். உங்கள் இதயம் நீங்கள் சொல்லியபடி துடிக்கும். இப்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் பொருள் புரியும். எத்தனை கடினங்கள் நிறைந்த வாழ்க்கையானாலும் ஒரு தைரியத்தை வரவழைக்கும்.
அத்துடன் உங்களை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள முடியும்.
தனிமையில் சிறகடியுங்கள்
உங்களது தனிமைக்கு வசதியாக இருக்கும். உங்களுக்கு பிடித்த உடை, நீங்கள் விரும்பிய உணவு, உங்களுக்கான பட்ஜெட், உங்கள் சுதந்திரம் எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திரப் பறவையாக யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிய உங்களுக்குள்ளே ஒரு சிறகு முளைக்கத் தோன்றும்.
முக்கியமாக பெண்களுக்கு தனிமைப் பயணம் மிகவும் உதவுகிறது. அன்றாட அலுவலகப் பணிச் சுமை, வீட்டில் செய்ய வேண்டிய கடமைகள், தலைமுறை கடந்த கட்டுப்பாடு என எதுவும் இல்லாமல், உடைகளும் உள்ளங்களும் புத்துணர்ச்சியுடன் முகமும் மலரச் செய்து பறக்க ஒரு சிறகை உங்களுக்குத் தரும்.
செலவு குறைவு
நிச்சயம் யாரையோ எதிர்பார்த்து, யாருக்காகவோ காத்திருந்து, உங்கள் பயணத் திட்டங்களில் நேர மேலாண்மையும் தகர்ந்து, இதனால் செலவும் அதிகரிக்கக்கூடும். ஆனால் தனிமைப் பயணம் அப்படி இல்லை.
உங்கள் பணத்துக்கு நீங்களே நிதியமைச்சர். நீங்கள் முதல்வரிடம் கூட கேட்கத் தேவையில்லை. பட்ஜெட்டை முழு மூச்சாக நீங்களே முடிவு செய்து கொள்ளமுடியும். கூடுதல் சேமிக்க முடியும்.
உங்கள் மன ஓட்டங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்க முடியும். எது முக்கியம் எது அவசியமற்றது என பிரித்து பார்க்கமுடியும்.
தேவையற்ற செலவுகளை குறைத்து முக்கியமானவற்றுக்கு மட்டும் செலவழிக்கும் தன்மை உருவாகும். இதனால் செலவு குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதிகம் பேர் இல்லாததால் சில விசயங்கள் எளிதில் தீர்மானிக்கமுடிகிறது.
நண்பர்களை சேமியுங்கள்
நண்பர்கள் நம் எண்ணங்களுக்கு வித்திடும் ஒரு கண்ணாடி போன்றவர்கள். சிலர் நேர்மறையாக, சிலர் எதிர் மறையாக ஆனாலும் ஒவ்வொரு நண்பர்களும் நமக்கு வாழ்வில் முக்கியமானவர்கள். உயிருக்கு உயிரானவர்கள் என்றெல்லாம் இல்லை. பொதுக்கருத்துடன் பயணிப்பவர்கள். இல்லை பயணம் செய்த இடத்தில் இருந்தவர்கள். சந்தித்தவர்கள். உங்களுக்கு உதவியவர்கள். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் என நிச்சயம் ஒரு தனிமைப் பயணம் உங்களுக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தும்.
இதனால் தனிமைப் பயணத்தில் நிறைய புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
நம்பிக்கையை மேம்படுத்துங்கள்
உங்கள் மேல் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். நம்பிக்கை அதான் வாழ்க்கை. அடுத்தவர் உங்களை நம்புவது உங்கள் திறமையை மட்டும் பொறுத்தது அல்ல. அதே நேரத்தில் உங்கள் செயல்பாடுகள், நேர்மை, நேர்த்தியான துல்லியமான விசயங்கள் என எல்லாம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படுத்தும்.
தன்னம்பிக்கை
உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களை நீங்களே சில சமயங்களில் நம்பமாட்டீர்கள். உங்கள் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாலே துணிந்து செயல்படுவது உங்களுக்கு இரண்டாம்பட்சமாக இருக்கும். எந்த செயலையும் தொடங்குவதற்கு அடுத்தவர்கள் உதவியை எதிர்பார்ப்பீர்கள். நீங்களே தனிமையில் பயணித்தால் உங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு குணம் பிறக்கும். அடுத்தவர் உதவியை எதிர்பாராமல், எந்த வித எதிர்பார்ப்புமில்லா நண்பர்களை தேடும் முயற்சியில் இறங்குவீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து தனிமையில் எதையும் எதிர்கொள்ளும் துணிவை அடைவீர்கள்.
சொந்த காலில் சொர்க்கலோகம்
உங்களது சொந்த காலில் ஒரு சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். யாருமே இல்லாத இடத்தில் உங்களால் பல அழகிய காட்சிகளை கற்பனை செய்யமுடியும். உங்கள் சொந்த அனுபவத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வரலாற்றில் பதிக்கமுடியும். கற்பனை விரிவடைந்து கதைகள்,கவிதைகள், ஓவியங்கள், கலை என பல்வேறு வடிவில் வெளிப்படுத்த உங்களுக்குள் இருக்கும் ஒருவன் தன் காலிலேயே இந்த உலகத்தை அளப்பான் என்பதை கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு அருமை.
உனக்குள் ஒருவன்
உங்களை நீங்களே நட்பாக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும். உங்களுக்குள் இருக்கும் அந்த ஒருவனைப் பற்றி எல்லாரும் வேறு வேறு விதமாக சிந்தித்திருப்பர். அவர்களுக்கு உங்களைத் தெரியாது. அதே நேரத்தில் உங்களுக்குள் இருக்கும் அவனைப் பற்றி உங்களுக்கே தெரியாது. அது தனிமையில் நீண்ட தூரம் பயணித்தால் மட்டும் கிடைக்கும் அனுபவம். ஆம். நீங்களும் தனிமையில் பயணிக்க தொடங்கிவிடுங்கள்.
குணநலன் பேண
உங்கள் கதாபாத்திரத்தை நீங்களே இன்னும் திறமையாக செதுக்கிக்கொள்ள முடியும். நீங்கள் யார் என்பதை உங்களால் உணர முடிந்தால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். உங்கள் வாழ் நாள் முழுவதும் ஏதோ ஒரு வட்டத்தில் சுழலும் காற்றாலையாக்கிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?
சுயநலம் நல்லது
எவ்வளவு சுயநலமாகவும் இருந்துகொள்ளலாம். இது தவறில்லை. உங்களுக்கு நீங்கள் சுயநலமாக இருப்பதென்பது நிச்சயம் தவறில்லை. என்ன சொல்ல வருகிறோம் புரிகிறதா. உங்களுக்குரிய பொருள்களை நீங்களே முழுவதும் அனுபவிப்பதைத்தான். வேறு யாருக்கும் பங்கிட்டு தர அவசியமில்லை. நீங்கள்தான் மொத்த பங்குதாரர்.
இவன் சிறந்த நண்பன்
புத்தகம் படிக்கும் வாய்ப்பு உருவாகும் அல்லது அதிகரிக்கும். நீங்கள் புத்தகம் வாசிப்பை விரும்புகிறவரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் நிச்சயம் நல்ல பண்புகளை வளர்க்கும். அந்த பழக்கம் அவ்வளவு எளிதாக எவர் வசமும் வந்துவிடாது. ஆரம்பத்தில் புத்தகம் படிப்பதை வைத்திருந்தாலும் அது தொடர்ந்துகொண்டே இருக்க நிச்சயம் ஒரு தனிமை பயணம் சிறந்தது. பயணத்தின்போது புத்தகம் படிப்பது சிறந்தது என்றாலும் நல்ல புத்தகங்களைத் தேடி படிப்பதே இன்னும் சிறந்தது.
யாருக்கும் அடிமையில்லை
யாருக்கும் அடங்கத் தேவையில்லை எதை செய்யவேண்டுமென இன்னொருவரிடம் விவாதிக்க வேண்டியதில்லை. நீ நான் என்ற சண்டை போட அவசியமே இல்லை. உனக்காக எனக்காக என்ற பொறுத்துக்கொண்டு காரியம் சாதிக்கவேண்டிய தருணம் வரவே வராது. இப்படி பல நல்ல நன்மைகளை தனிமைப் பயணம் உங்களுக்கு தருகிறது. முக்கியமாக பெண்களுக்கு தற்காப்பு பழக்கத்தை தனிமைப் பயணம் உருவாக்கிவிடுகிறது