இந்தியாவின் வட கிழக்கு திசையில் அமர்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் தலை நகரான அகர்தலா நகரம், கவஹாத்திக்கு அடுத்தபடியாக மிகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரத்திலிருந்து வங்கதேசம் வெறும் இரண்டு கிமீ தொலைவு ஆகும்.
திரிபுரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் வீற்றிருக்கும் இந்நகரத்தின் வழியாக ஹரோவா ஆறு ஓடுகிறது. பொழுதுபோக்கு, சாகச அம்சங்கள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்ற யாவும் நிறைந்த ஒரு சுற்றுலா நகரமாக அகர்தலா பெயர் பெற்றிருக்கிறது. காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழுமை ஆகியவற்றை கொண்டிருப்பதால் சுவாரசியமான இயற்கை எழில் அம்சங்களுக்கும் குறைவில்லை. புவியியல் ரீதியாகவும் இப்பகுதியிலுள்ள இதர மாநில தலைநகரங்களிடமிருந்து அகர்தலா வேறுபட்டு காட்சியளிக்கிறது. பங்களாதேஷை நோக்கி நீண்டு செல்லும் கங்கை-பிரம்மபுத்திரா சமவெளிப்பிரதேசத்தின் மேற்கு முனையில் இந்த நகரம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். அடர்த்தியான கானகப்பகுதியை கொண்டிருப்பது இதன் முக்கியமான சுற்றுலாச்சிறப்பம்சங்களில் ஒன்று. சரி இந்த நகரத்தில் காணவேண்டிய ஐந்து சிறந்த இடங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஐந்து இடங்களும் அதன் அற்புதங்களும்
நாம் காணவிருக்கும் ஐந்து இடங்களில் முதல் இடம் உஜ்ஜயந்தா அரண்மனை. உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலா நகரத்தின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அடையாளமாகும். இந்தோ கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை மஹாராஜா ராதாகிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு உஜ்ஜயந்தா அரண்மனை எனும் பெயர் நோபல் விருது பெற்ற இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூரால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையில் அரியணை அறை, தர்பார் கூடம், வரவேற்பறை மற்றும் ஒரு நூலகம் ஆகியவற்றோடு சுற்றிலும் பல தோட்டப்பூங்காக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 800 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த பூங்காவில் ஜகந்நாத் கோயில் மற்றும் உமாமஹேஷ்வர் கோயில் எனப்படும் இரண்டு கோயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. உஜ்ஜயந்தா அரண்மனை மூன்று குமிழ் மாட அமைப்புகளை உள்ளடக்கியதாய் காணப்படுகிறது.
இவற்றில் பெரியதான மாடம் 26மீ உயரத்துடன் காட்சியளிக்கிறது. மாளிகையின் உட்புறத்தை நுணுக்கமான மரக்குடைவு அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான கதவுகள் அழகுபடுத்துகின்றன. அக்காலத்தில் இந்த அரண்மனையை கட்டுவதற்கு 10 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அடுத்ததாக நாம் காணவிருக்கும் இடம் நீர் மஹால். இது அகர்தலா நகரத்திலிருந்து வெகு அருகில் 50 கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளது. 1.30 மணி நேரத்திலியே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.
நீர் மஹால்
திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே கட்டப்பட்டிருக்கிறது. அழகிய தோற்றம் மட்டுமல்லாமல் கட்டிடக்கலை நுணுக்கத்திற்காகவும் இது மிக உயர்வாக கருதப்படுகிறது.
பெயரிலேயே பொருள் விளங்கும்படியாக நீரின் நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனை.இதில் பல கோபுரங்கள், பலகணிகள், பாலங்கள், மாடங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. நீரின் நடுவே கட்டப்பட்டிருந்தாலும் அரண்மனையை சுற்றி அழகிய தோட்டப்பூங்காக்கள் எப்போதும் பூத்துகுலுங்கும் வண்ணமலர்ச்செடி கொடிகளுடன் காணப்படுகின்றன.
அகர்தலா நகரத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள நீர்மஹால் அரண்மனை திரிபுரா மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
மலாஞ்சியா நிவாஸ்
மூன்றாவதாக நாம் காணவேண்டிய இடம் மலாஞ்சியா நிவாஸ். இது நோபல் விருது பெற்ற பிரபல இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூர் தங்கியிருந்த இடம். 1919ம் ஆண்டில் அவர் அகர்தலா வந்தபோது இந்த மலாஞ்சியா நிவாஸ் இருந்த இடத்தில் ஒரு பழைய மண்வீடு இருந்தது. மன்னருக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் தாகூர் தங்கியிருந்தார்.
மஹாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யாவின் தனி வசிப்பிடமாக இந்த வீடு இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த மண்வீடு காபிகுரு விருந்தினர் இல்லமாக பயன்பட்டு வந்தது. இன்று அந்த மண்வீடு இடிக்கப்பட்டு இரண்டு அடுக்கு கொண்ட கான்க்ரீட் கட்டிடம் கட்டப்பட்டு மலாஞ்சியா நிவாஸ் என்ற பெயரில் ஒரு ஞாபகார்த்த இல்லமாக அழைக்கப்படுகிறது. குஞ்சாபன் அரண்மனையை நோக்கியவாறு ஒரு மலையின்மீது இந்த மலாஞ்சியா நிவாஸ் அமைந்திருக்கிறது.
கமால்சாகர் எனும் ரம்மியமான ஏரி
அகர்தலா நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இந்த கமால்சாகர் எனும் ரம்மியமான ஏரி அமைந்திருக்கிறது. இது இந்திய-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் உள்ளது. வழங்கி வரும் கதைகளின்படி இந்த ஏரி 15ம் நூற்றாண்டில் மஹாராஜா தன்யா மாணிக்யா என்பவரால் வெட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அகர்தலா நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த ஏரி வீற்றிருக்கிறது.
16ம் நூற்றாண்டிலிருந்து இந்த கோயில் ஆகியவை ஒரு பிரசித்தமான வழிபாட்டுஸ்தலமாக விளங்கி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மிக பழமையான துர்க்கை சிலை 12ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏரியை சுற்றிலும் இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழிவதால் இந்த ஸ்தலம் ஒரு பிக்னிக் சிற்றுலாத்தலமாகவும் புகழ் பெற்றுள்ளது.
வருடம் முழுதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரிக்கு விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். அக்டோபர் மாதத்தில் நவராத்திரி திருநாளில் இங்குள்ள காளி கோயிலில் திருவிழா நிகழ்ச்சி விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
ரோஸ் வேலி அமியூஸ்மெண்ட் பார்க்
ரோஸ் வேலி அமியூஸ்மெண்ட் பார்க் வடகிழக்கிந்தியாவில் உள்ள சிறந்த பொழுதுபோக்கு பூங்காவாகும். இது ரோஸ் வேலி எனும் நிறுவனத்தால் துவங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அகர்தலா பகுதியில் அம்தலி எனும் இடத்தில் இந்த உல்லாசப்பூங்கா அமைந்துள்ளது. வடகிழக்கிந்தியாவில் இது போன்று வேறில்லை எனும்படியாக பிரசித்தி பெற்றுள்ள இந்த ரோஸ் வேலி உல்லாசப்பொழுது பூங்காவில் ஒரு நாள் பொழுதை கேளிக்கை மற்றும் உல்லாச விளையாட்டுகளில் ஈடுபட்டு கழிக்கலாம்.
பரந்த இடத்தில் இயற்கைச்சூழல் மற்றும் செயற்கை விளையாட்டு அமைப்புகள் போன்றவற்றின் கலவையாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள நீர்விளையாட்டுப்பிரிவு மிக விசேஷமானதாக பிரசித்தி பெற்றுள்ளது. ரோஸ் வேலி அமியூஸ்மெண்ட் பார்க் அகர்தலா நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாக இந்த பூங்காவுக்கு வரலாம். அம்தலி நோக்கி செல்லும் சாலையில் இது அமைந்திருக்கிறது.