நம் நாட்டில் ஆன்மீகம் என்பது இன்றியமையாத ஒன்றாத ஒன்றாகவே உள்ளது. மக்கள், எத்தகைய கஷ்டத்தில் இருந்தாலும் முதலில் முறையிடுவது கடவுளிடம் தான். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று உடல் நிலை எவ்வித மோசமாக இருந்தாலும் மருத்துவரை அணுகுவதை விட திருத்தலங்களுக்குச் சென்று வேண்டுவதையே கடையாயக் கடமையாக செயலாற்றுவர். இப்படியிருக்க, ஒரு கோவிலுக்குச் செல்வதே மிகச் சிரமமானால் என்னவாகும் ?. இங்கே ஓர் கோவில் பல ஆபத்துகள் நிறைந்தததாக, சொல்லப்போனால் பக்தர்களின் மனநிலையில் ஒருவித பயத்தை நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது. வாருங்கள், அது என்ன கோவில், அப்படி அங்கே என்னதான் ஆபத்து உள்ளது என பார்க்கலாம்.
திவ்ய தேசம்
இந்தியாவில் திவ்ய தேசம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஏழுமலையான் தலமான திருப்பதி கோவில் தான். இதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் அமைந்துள்ள மற்றுமொரு திவ்ய தேசம் தான் அகோபிலம். சிங்கக் குகை என்ற பொருளுடைய அகோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலைக் கோவில் என்று உள்ளூர் மக்களால் அறியப்படுகிறது. இதற்குக் காரணம், இக்கோவிலின் தன்மையும், வழித்தடமும் தான் எனலாம்.
இரண்டு அகோபிலங்கள்
நரசிம்மர் அவதரித்த இடமாகக் கருதப்படும் அகோபிலம் மொத்தம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று மலை அடிவாரத்தில் உள்ள கீழ் அகோபிலம். இங்கே பிரகலாத வரதர் கோவில் உள்ளது. மற்றொன்று மலைமேல் சுமார் மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ள அகோபிலம். இதில், அகோர நரசிம்மர் வீற்றுள்ளார். இங்குள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் வீற்றுள்ளன.
எப்படிச் செல்வது ?
ஆந்திர மாநிலம் கர்னூலில் அமைந்துள்ளது அகோபிலம். சென்னையில் இருந்து கர்னூலுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்சல் எக்ஸ்பிரஸ், எக்மோரில் இருந்து கச்சிகுடா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு ரயில் சேவைகள் உள்ளன. அகோபிலம் நரசிம்மர் ஆலயம் பிரசிதிபெற்ற திவ்ய தேசம் என்பதால் விசேச காலங்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். கீழ் அகோபிலம் வரை பேருந்தில் சென்று விடலாம்.
நரசிம்மர் குடிகொண்ட மலைத் தொடர்
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான அகோபிலத்தின் பெபரும்பகுதி நரசிம்மர் ஆலயங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். மலையின் அடர்ந்த, ஆபத்து நிறைந்த மையப் பகுதியில் கூட நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதனாலேயே மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் மலையின் மேலே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
செஞ்சுகர்களின் கோவில்
புரான வரலாற்றின் படி, அகோபிலத்தில் உள்ள இந்த இடம் கருடகிரி என்று குறிப்பிடப்படுகிறது. கருடருக்கு காட்சி அளிப்பதற்காகவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக அவதாரம் எடுத்துள்ளார். இங்கே ஹிரணியனைக் கொன்றபின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். உள்ளர் மக்கள் கதைப்படி, இப்பகுதியில் வாழ்ந்த செஞ்சு இன பழங்குடியினர் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக பிறந்தார். அவரை பெருமாள் திருமணம் செய்து இம்மலையிலேயே குடிகொண்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆபத்து நிறைந்த அழகிய மலை
அகோபிலத்தை ஒருநாளில் கண்டு ரசித்திட முடியாது. ஓரிரு நாட்களாவது அங்கேயே தங்கி உள்ளூர் மக்களின் உதவியுடன் தான் மலையின் உள்ள அனைத்து நரசிம்மர் ஆலயங்களையும் தரிசிக்க முடியும். மேலும், இந்த மலைப் பாதைகள் பெரும்பாலும் குறுகிய, மண்சரிவு நிகழும் ஆபத்தான சாலை என்பதால் வாகனங்களினாலும் பயணம் செய்ய முடியாது. நல்லமலா காட்டுக்குள் நரசிம்மருக்கான கோவில்கள் மட்டுமின்றி புராதனமான குகை ஆலயங்களும் உண்டு.
என்னென்ன கோவில்கள் ?
அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர் என ஏற்கனவே கூறியது போல ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இவை அனைத்தையும் சுற்றிப் பார்க்க குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும்.
பாறையை பிளந்து கொட்டும் அருவி
அடிவாரத்தில் இருந்து நரசிம்மர் கோவில் பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. புதிதாக பயணிக்கும் எவருக்கும் பாறை தலைமீத சரிந்துவிடுமோ என்ற அச்சத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அந்த மலைக்கு மேலிருந்து கிட்டத்தட்ட மேகக்கூட்டங்களில் இருந்தே வழுவதைப் போல பாறையை பிளந்து கொட்டுகிறது அருவி. இந்த பாறைக்கு மேல் தான் நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
குகைக் கோவில்
இங்குள்ள நரசிம்மர் கோவில் உண்மையில் ஒரு குகைக் கோவிலாகும். குகைதான் கோவிலின் கருவறையாக அமைந்துள்ளது. உள்ளே பொன்னாலான மூலவரும், தேவி அம்மையாரும் வீற்றுள்ளனர். கோவிலின் வெளித் தலத்தில் செஞ்சுலட்சுமியின் சன்னதி அமைந்துள்ளது.
குரோத நரசிம்மர்
அடுத்த அவதாரமான குரோத நரசிம்மருக்கான குகைக் கோவிலும், லட்சுமி நரசிம்மருக்கான கோவிலும் மலையின் மேலே பாபநாசினி நதிக்கரையின் கிழக்கே அமைந்துள்ளது. இத்தலங்களை அவ்வளவு எளிதில் அடைய முடியாது. வனவிலங்குகளின் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் எப்போதும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் தான் பயணிக்க வேண்டும். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கு தெரியும்.
சார்ங்க நரசிம்மர்
மேல் அகோபிலத்திலிருந்து குறுகலான மலைப் பாதையில் சில கிலோ மீட்டர் நடைபயணமாகச் சென்றால் சார்ங்க நரசிம்மரும், அதனைக் கடந்து சில கிலோ மீட்டரில் ஏழாவது அவதாரமான மாலோல நரசிம்மரையும் தரிசிக்கலாம். இக்கோவிலில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கடந்து சென்றால் பவனி நதிக்கரையில் பாவன நரசிம்மரும், விலங்குகள் நடமாட்டம் நிறைந்த பாதை வழியாக சென்றால் ஜ்வாலா நரசிம்மரையும் தரிசிக்கலாம். ஆனால், இப்பாமைதகள் அனைத்துமே பல்வேறு ஆபத்துகளைக் கொண்டுள்ளன. மேலும், கரடு முரடான பாதையும், செங்குத்தான பாறைகளைக் கடந்து செல்வதும் பயணிகளை சோர்வடையச் செய்திடும்.
நவ கிரகங்களை வழிபட்ட பயன்
அகோபிலம் மலையில் உள்ள பார்கவ நரசிம்மர் நவகிரகங்களில் முதன்மையான சூரியனைக் குறிக்கிறது. அடுத்தடுத்து வரும் யோகானந்த நரசிம்மர் சனி பகவானாகவும், சக்ரவட நரசிம்மர் கேது பகவானாகவும், அஹோபில நரசிம்மர் குரு பகவானாகவும், வராக நரசிம்மர் ராகு பகவான், மாலோலா நரசிம்மர் வெள்ளி, ஜுவாலா நரசிம்மர் செவ்வாய், பாவன நரசிம்மர் புதன், காரஞ்ச நரசிம்மர் திங்கள் என ஒன்பது நரசிம்மர் தலமும் நவக்கிரகங்களை குறிக்கும் வகையில் உள்ளதால் இங்கே வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.