புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது "கண்ணாடிகளின் கூடம்", ஒரு அற்புதமான மாளிகையாகும். 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான ராம் சிங் மாலம் என்பவரால், இந்திய-ஐரோப்பிய பாணிகளைத் தழுவி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மஹால், மிக அழகான சில கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டுள்ளது. இந்த மாளிகை, 2001 ஆம் வருடம் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது பெரும்பாலும் சிதைக்கப்பட்டு விட்டது; என்றாலும் பாதிப்புக்குள்ளாகாமல் தப்பித்த சில பகுதிகளைக் கொண்டு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியகம் வருடத்தின் 365 நாட்களும் பொதுமக்கள் வந்து பார்க்கும் வண்ணம் திறந்து வைக்கப்படுகிறது.
ராயல் சதார்திஸ், நகரத்தினுள்ளே அமைந்திருந்தாலும், புஜ் நகரின் அமைதியான மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சாலைகளிலிருந்து தொலைவாகவும், சுற்றுப்புறத்தில் கட்டிடங்கள் ஏதும் இல்லாமலும் காணப்படும் இதில், ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வெகு அழகாக இருப்பது போல் தோற்றமளிக்கும் அரச குடும்பத்தினரின் நினைவுச்சின்னங்கள் உள்ளன. இவற்றுள் சில 2001 ஆம் வருடத்தில் புஜ் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தினால் சிதைக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம் ராய்தன்ஜி, லக்பத்ஜி மற்றும் தேசர்ஜி ஆகியோரின் நினைவகங்கள் இப்போதும் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த இடம் கட்டாயம் வருகை தர வேண்டிய ஒரு இடமாகும்.
19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய இத்தாலிய-கோத்திக் பாணி கட்டிடம், இங்கு வருவோர் பலருக்கு, முக்கியமாக பாலிவுட் பிரமுகர்களுக்கு, மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும். ஏனெனில், இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில், பிரபல இந்தித் திரைப்படங்களான ஹம் தில் தே சுகே சனம், லகான் மற்றும் இவற்றிற்கு முன் வெளிவந்த சில குஜராத்தி திரைப்படங்கள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன. எனினும், 2001 இல் நிகழ்ந்த நிலநடுக்கங்களாலும், 2006 இல் நிகழ்ந்த கொள்ளையின் போது, கொள்ளையர்கள் பெருமதிப்புடைய ஏராளமான கலைப்பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாலும் இந்த மாளிகை மிகுந்த சிதைவுக்குள்ளாகியுள்ளது. ஆனாலும், இது பொதுமக்கள் வந்து பார்வையிடும் வண்ணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; அதனால் இங்கு வரும் பார்வையாளர்கள் பிரதான அரண்மனைக் கூடத்தை சென்று பார்க்கலாம்; மேலும், இந்த நகரின் கொள்ளை கொள்ளும் அழகை முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடியதான மணி கோபுரத்துக்கும் சென்று பார்க்கலாம். இரண்டாம் ராவ் பிரக்மால்ஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட பிரக் மஹால், 1865 ஆம் ஆண்டில், அப்போதே சுமார் 3.1 மில்லியன் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.