பத்து-இருபது வருடங்கள் முன்பு வரை, தீபாவளி, பொங்கல், ஆடித்தள்ளுபடி எப்போது வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நாம், எண்ணற்ற மால்கள், ஆன்லைன் வர்த்தகம் வந்த பின்பு, தினசரி, ஒரு விலைக்குறைப்புச் சலுகை, தள்ளுபடிகள் என்று திக்கு முக்காடிக்கொண்டிருக்கிறோம்.
Photo Courtesy: Julian Herzog
இப்போது ஏர்-இந்தியா நிறுவனமும் அதில் சேர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு, சூப்பர் சேவர் என்ற திட்டத்தை, பயணச்சீட்டு உறுதியாகாமல், பட்டியலில் காத்திருக்கும்(Waiting List) ராஜ்தானி பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜ்தானி விரைவு வண்டி, நாட்டின் மிக வேகமான எக்ஸ்பிரஸ் வண்டிகளில் முக்கியமானது; இந்தியாவின் பெரிய நகரங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு, எப்போதுமே மக்கள் மத்தியில் ஏக விருப்பம் - தினசரி, ஏறத்தாழ 20000 பேர் பயணிக்கிறார்கள் ராஜ்தானி விரைவு வண்டிகளில்.
ஜூன் 26'இல் ஆரம்பித்த இந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். நீங்கள் ராஜ்தானியில் எடுத்த பயணச்சீட்டு உறுதியாகாமல், இன்னும், பட்டியலில் காத்திருப்போர் வரிசையில் இருக்கிறது. உங்கள் பேருக்குமுன் பலர் இருக்கிறார்கள். எப்படியும் டிக்கெட் உறுதியாகாது என்று பதறுகிறீர்கள். இதற்கு ஏர் இந்தியா கை கொடுக்கிறது.
இத்தகைய சூழலில், ராஜ்தானியில் நீங்கள் எடுத்த பயணச்சீட்டின் விலைக்கு ஈடாக ஒரு உள்நாட்டு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், அந்த விமானம் புறப்பட குறைந்தது நான்கு மணி நேரம் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம், குறிப்பாக, குளிர்சாதன பெட்டிகளில் பயணிப்போர் பலன் பெறுவார்கள். ஏனென்றால், அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த தேவையில்லை. ஆனால், இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பில் டிக்கெட் எடுத்தவர்கள், ஏர்-இந்தியா டிக்கெட் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ராஜ்தானியில் எப்போதும் பட்டியலில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் ஏர் இந்தியா இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சூப்பர் சேவர் திட்டம், உங்களை ரயிலின் முதல் வகுப்பு கட்டணத்தில் விமானத்தில் செல்ல அனுமதிக்கிறது.இத்திட்டம், இந்த வருடம் ஜூன் 26'இல் ஆரம்பித்து, செப்டம்பர் மாதத்துடன் முடிகிறது. இனிமேல், ராஜ்தானியில் டிக்கெட் உறுதியாகவில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏர் இந்தியா இருக்கிறது உங்களுக்கு உதவ.
எனினும், நீங்கள் செல்லும் ஊருக்கு, ஏர்-இந்திய விமானம் செல்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்னொன்றும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது ஒரு-வழிப்பயணத்திற்குத்தான். மறுமுறை திரும்பி வர இந்தச் சலுகை கிடையாது.
பயணிகள், www.airindia.com என்ற ஏர்-இந்தியா வலைதளத்தில் அல்லது ஏர்-இந்தியா முன்-பதிவு மையங்களில், தங்களது டிக்கெட்டுகளை முன்-பதிவு செய்து கொள்ளலாம். வலைதளத்தில் முன்-பதிவு செய்யும்போது, SPOT என்ற Promocode'ஐ உபயோகப்படுத்துங்கள்.