ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு மிகவும் சௌகரியமாக செல்ல, விரைவாக செல்ல குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்ல நமக்கு விமான போக்குவரத்தை காட்டிலும் வேறு வழி கிடையாது. இவ்வளவு வசதி இருக்கும் போது விமான டிக்கெட் என்பது குறைந்த விலையில் வந்து விடாது தானே! அப்படி நாம் கஷ்டப்பட்டு விலை கொடுத்து வாங்கும் விமான டிக்கெட் நம் கண் முன்னால் தரம் குறைக்கப்பட்டால் (Downgrade) என்ன செய்வது? ஆனால் அதற்கும் ஒரு வழி பிறந்துவிட்டது! விமானப் போக்குவரத்தின் புதிய விதிகளின்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்டுகள் டவுன்கிரேடு செய்யப்பட்டால், 75 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற்றுவிடலாம் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கூறியுள்ளது. எப்படி கட்டணத்தை திரும்ப பெறுவது என கீழே பாருங்கள்!
பயணிகள் அடையும் ஏமாற்றமும் பண நஷ்டமும்
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமானங்கள் ரத்து, போர்டிங் மறுப்பு மற்றும் விமானங்கள் தாமதம் காரணமாக பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் வழங்க வேண்டிய வசதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. விருப்பமின்றி தரம் குறைக்கப்படும் டிக்கெட்டுகளால் அவர்கள் வாங்கிய டிக்கெட்டை விட குறைவான வகுப்பில் கொண்டு செல்லப்படும் பயணிகள் அதிருப்திக்கு உள்ளாகினர்.
ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிடித்த இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்யலாம் என ஆசையாக முன்பதிவு செய்தால் சில காரணங்களால் அதில் பயணம் செய்யாமல் போகும் போது நாம் ஏமாற்றம் அடைவதோடு, குறைந்த வசதி கொண்ட விமானத்தில் செல்லும் போது நாம் ஏற்கனவே புக் செய்த டிக்கெட் பணமும் வீணாகிறது. இது குறித்து விமான பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்ததால் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர DGCA முடிவு செய்தது.
திருத்தப்பட்ட விமான விதிகள்
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதன் சிவில் விமானப் போக்குவரத்துத் தேவை (CAR) விதிகளில் திருத்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், DGCAவிமான நிறுவனங்கள் வரிகள் உட்பட அத்தகைய டிக்கெட்டுகளின் முழு மதிப்பையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அடுத்த வகுப்பில் இலவசமாக விமானம் அனுப்பப்படும் என்றும் முன்மொழிந்தது.
அந்த முன்மொழிவுகள் இப்போது சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
30 முதல் 75% திருப்பி செலுத்தப்படும் கட்டணம்
உள்நாட்டு விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகும் போது, சம்பந்தப்பட்ட பயணிகள் விமான நிறுவனத்திடமிருந்து வரிகள் உட்பட டிக்கெட் விலையில் 75 சதவீதத்தைப் பெறுவார்கள்.
சர்வதேச டிக்கெட்டின் தரம் குறைக்கப்பட்டால், 1,500 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் பறக்கும் விமானங்களுக்கு வரி உட்பட டிக்கெட் விலையில் 30 சதவீதத்தை பயணிகள் பெறுவார்கள். 1,500 முதல் 3,500 கிலோமீட்டர் தூரத்தை விமானம் கடக்கும் பட்சத்தில் வரிகள் உட்பட 50 சதவீத தொகை பயணிகள் பெறுவார்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் விமானங்களுக்கு வரி உட்பட டிக்கெட் விலையில் 75 சதவீதம் திருப்பிச் செலுத்தப்படும்.
பயணச்சீட்டுகள் தரமிறக்கப்படுவதால் பாதிக்கப்படும் விமானப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும், அவர்களின் உரிமைகளை வலுப்படுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று DGCA மேலும் கூறியுள்ளது. இந்த செய்தியை விமான பயணிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.