கங்கை நதியின் தென் கரையோரத்தில் செழித்து வளர்ந்து, புகழ்பெற்ற வரலாறு நிறைந்த கடந்த காலத்தின் பின்னணியை பிரதிபலிக்கும் பாட்னா, உலகின் பழமையான நகரங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ள ஒரு நகரமாகும்.
பாட்னாவில் கொட்டி கிடக்கின்ற எண்ணற்ற பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நகரத்தின் பல்வேறு ஈர்க்கக்கூடிய அம்சங்களையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றன.
ஒருபுறம் புராதன கோவில்கள் மற்றும் மசூதிகள் போன்ற வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் மறுபுறம் பசுமையான பூங்காக்கள் மற்றும் சொகுசான ஷாப்பிங் இடங்கள் என நிரம்பியிருக்கும் தலைநகர் பாட்னா, வளர்ந்து வரும் நவீனத்துவத்துடன் பழைய உலக அழகை கச்சிதமாக ஒருங்கிணைக்கிறது.
இந்த அற்புதமான கலவையைக் காண, பாட்னாவில் பார்க்க வேண்டிய சில சிறந்த இடங்களின் பட்டியல் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது!
கோல்கர்
ஒரு தேனீக் கூடு வடிவத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடம் சந்தேகத்திற்கு இடமின்றி நகரத்தின் மிக முக்கியமான அடையாளமாக திகழ்கிறது. சுழல் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு தனித்துவமான, வெள்ளையடிக்கப்பட்ட குவிமாடமாக, 1786 இல்கேப்டன் ஜான் கார்ஸ்டின் என்பவரால் நகரத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் இராணுவத்திற்கான தானிய களஞ்சியமாக கட்டப்பட்டது.
29 மீ உயரமும் 125 மீ விட்டமும் கொண்ட பிரமாண்டமான குவிமாடம் எந்த தூண்களாலும் தாங்கப்படவில்லை என்பதுதான் இந்த அமைப்பில் கவனிக்க வேண்டிய மிக ஆச்சரியமான விஷயம்! கங்கை நதியுடன் முழு நகரத்தின் பரந்த காட்சியையும் இது வழங்குவதால் மக்கள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
கும்ரார்
பல அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உட்பட்ட பண்டைய நகரமான பாடலிபுத்ராவின் வரலாற்றை ஆராய நீங்கள் இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும்.
அஜாதசத்ரு, சந்திரகுப்தர், அசோகர் ஆகிய 3 மாபெரும் மன்னர்களால் ஆண்ட நகரம் இன்று இடிபாடுகள், மணற்கல் தூண்கள், படிக்கட்டுகளை தாங்கிய மர மேடைகள், புத்த மடாலயத்தின் அடித்தள செங்கற்கள் மற்றும் செதுக்கப்பட்ட கல் துண்டுகள் ஆகியவற்றின் குவியலாக உள்ளது.
இந்த பழமையான குவியலில் ஆரோக்கிய விஹார், அசெம்பிளி ஹால், துராக்கி தேவி கோவில் மற்றும் ஆனந்த் பீகார் ஆகியவற்றை நீங்கள் காணலாம்.
பாட்னா மற்றும் பீகார் மியூசியம்
வரலாற்று ஆர்வலர்களுக்கு, பீகார் அருங்காட்சியகமும் பாட்னா அருங்காட்சியகமும் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். இந்த இடங்கள் மாநிலத்தின் வரலாறு மற்றும் பண்டைய கலாச்சாரம் பற்றிய நுண்ணறிவை வழங்குவதோடு முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலையையும் காட்சிப்படுத்துகிறது.
வரலாற்று ஆர்வலர்களுக்கும் கடந்த காலத்தின் உண்மைகளை வெளிப்படுத்த விரும்புபவர்களுக்கும் இந்த இடங்கள் உண்மையிலேயே ஒரு சொர்க்கமாகும்.
காந்தி காட்
பாட்னா நகரில் கங்கை நதிக்கரையில் உள்ள காந்தி காட் மிகவும் பிரபலமான காட் ஆகும். மகாத்மா காந்தியின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டதால் இது பிரபலமானது. இருப்பினும், இந்த இடத்தின் சிறப்பம்சமாக, மகத்தான கங்கா ஆரத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்கின்றனர்.
காவி அங்கி அணிந்த பூசாரிகள் குழுவால் 51 விளக்குகளுடன் அந்தி சாயும் நேரத்தில் ஆரத்தி செய்யப்படுகிறது. 2011 இல் தொடங்கப்பட்ட இந்த செயல்பாடு, வாரணாசி மற்றும் ஹரித்வாரில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டது. இருப்பினும் மாலை நேரத்தில் இதைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சோட்டி தர்கா
பாட்னாவிலிருந்து மேற்கே 32 கிமீ தொலைவில், இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் குறைவாக அறியப்பட்ட முகலாய கட்டிடங்களில் ஒன்றான சோட்டி தர்கா அமைந்துள்ளது.
நான்கு பன்னிரெண்டு பக்க மினாராக்களால் சூழப்பட்ட அதன் அழகிய குவிமாடம், அழகிய உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட பழமையான சுவர்கள் மற்றும் குர்ஆனின் பகுதிகள் பொறிக்கப்பட்ட கூரைகள் ஆகியவை ஒரு மறக்க முடியாத அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க தவறுவது இல்லை.
சஞ்சய் காந்தி தாவரவியல் பூங்கா
சஞ்சய் காந்தி ஜெய்விக் உத்யன் என்று அழைக்கப்படும் இந்த தாவரவியல் பூங்கா 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பூங்காவாகும். பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்ட இந்த பூங்கா பாட்னாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் நாம் சேர்க்காமல் இருக்க இயலாது.
மேலும் மக்கள் யானை சவாரி மற்றும் பொம்மை ரயில் போன்ற சில அற்புதமான விஷயங்களை அனுபவிக்க குழந்தைகளுடன் இங்கு வரலாம்.
அஜந்தா
பிரேசர் சாலையில் அமைந்துள்ள அஜந்தா அழகிய மதுபானி ஓவியங்களின் தாயகமாகும். மதுபானி ஓவியங்கள் மீது உங்களுக்கு விருப்பம் இருந்தால் மற்றும் சில உண்மையான மாஸ்டர் பீஸ்களை வாங்க விரும்பினால், நீங்கள் சேகரிப்புகளைப் பார்க்க ஃப்ரேசர் சாலையில் அமைந்துள்ள அஜந்தாவிற்கு நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டும்.
இது ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது, எனவே உங்கள் வருகையை அதற்கேற்ப திட்டமிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மஹாவீர் மந்திர்
மனோகம்னா கோயில் என்றும் அழைக்கப்படும் மஹாவீர் மந்திர் வட இந்தியாவின் இரண்டாவது பெரிய மத வழிபாட்டுத்தலமாகும். ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை வரவேற்கிறது.
சங்கட மோச்சன் ஹனுமான் தனது பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்ப்பதாக நம்பப்படுகிறது, எனவே தூய இதயத்துடன் வழிபட்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறாமல் போகாது என்ற ஐதீகம் உள்ளது.
நாளந்தா
பண்டைய இந்தியாவில் கல்வி கற்கும் இடமான நாளந்தா, நாட்டின் ஆரம்பகால பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் மற்றும் இந்தியா, திபெத், சீனா, கொரியா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் தாயகமாக இருந்தது.
பாட்னாவில் இருந்து சுமார் 95 கிமீ தொலைவில், இந்த புகழ்பெற்ற கல்வி மற்றும் துறவற நிறுவனம் இன்று அதன் இடிபாடுகள் ஸ்தூபிகள், கோவில்கள் மற்றும் விகாரைகள் மூலம் அதன் கதைகளை சொல்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான இந்த ஈர்ப்பு இடிபாடுகளுக்கு அடுத்ததாக ஒரு கண்கவர் தொல்பொருள் அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.
பாட்னா கோளரங்கம்
பாட்னா நகரில் அமைந்துள்ள பாட்னா கோளரங்கம் ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய கோளரங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆடிட்டோரியத்தின் உள்ளே, வானியல் தொடர்பான பலவிதமான திரைப்பட நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாட்னாவின் மிகவும் பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையம், ஜப்பானிய அமைதி பகோடா, லௌரியா நந்தன்கர், படன் தேவி மந்திர், காந்தி சங்க்ரஹலயா, சீதாமர்ஹி, காந்தி மைதானம், இஸ்கான் கோயில், கேசரியா ஸ்தூபம், புத்தர் நினைவுப் பூங்கா ஆகிய இடங்களையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!