அன்றாட வாழ்வு தரும் சலிப்புகளும் அயர்ச்சியும் நம்மை அவ்வப்போது ஒரு சுற்றுலாவிற்கு, ஒரு புதிய இடத்திற்கு தள்ளுகின்றன. சிலர், அதிலும் திருப்தியடையாமல், பெரும் சாகசத்திற்கு தயாராகின்றனர். அதுதான் தொலைதூர பைக் பயணங்கள். சாலைகள், நெடுஞ்சாலைகள் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்ட காலத்தில் முன்புபோல் பைக்கில் செல்வது அத்தனை சிரமமல்ல. இந்தியா என்று பரந்து விரிந்த மிகப்பெரிய தேசத்தில் பைக் ஆர்வலர்கள் அவசியம் செல்ல வேண்டிய நீண்ட தூர சாலைப் பயணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மும்பை - புனே எக்ஸ்பிரஸ் வே
Photo Courtesy : Ankur Gulati
இந்தியாவின் முதல் ஆறு வழிப்பாதை இந்த நெடுஞ்சாலை. 2002'இல் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை இந்தியாவின் மிக பிஸியான நெடுஞ்சாலைகளில் ஒன்று.
94 கி.மீ தூரம் வரை விரியும் இந்த சாலையில், குகைகளும், ஊசி வளைவுகளும் பைக் ஓட்டுபவர்களுக்கு பெரும் சவாலாய் அமையும். இந்த த்ரில் அனுபவத்திற்கே வார இறுதியில் பலர் பூனேவை சுற்றி இருக்கும் மலைவாசஸ்தலங்களுக்குப் - லோனாவாலா, கண்டாலா, பயணிப்பர். கோவில்பட்டிக்கும் லோனாவாலாவிற்கும் ஒரு தொடர்பு உண்டு. முன்னது கந்தக பூமி; லோனாவாலா அழகான மலை வாசஸ்தலம். ஆனால் இரண்டிலுமே பிரசித்தி பெற்றது, சுவையான கடலை மிட்டாய்கள். லோனாவாலாவில் சிக்கி என்று சொல்வார்கள். லோனாவாலா சென்று சிக்கியோடு திரும்பாமல் இருந்தது எவருமில்லை.
பாம்பன் பாலம் சாலை - ராமேஸ்வரம்.
Photo Courtesy : Ravichandra84
ராமேஸ்வரத்தை இந்தியாவோடு இணைக்கும் இந்தப் பாலம் இந்தயாவின் முதல் கடல்ப் பாலம். 1914'இல் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் நூறாண்டுகளை கடந்து இன்றும் சரித்திரம் படைக்கிறது. இரு பக்கமும் பிரமாண்ட கடலின் நடுவே பைக் ஓட்டிச் செல்லும் அனுபவத்திற்கு ஈடாகுமா மற்ற வாகனங்களில் செல்வது ?
பெங்களூர் - ஷிவனசமுத்திரம் நெடுஞ்சாலை
Photo Courtesy : Sunnya343
என்னால் மும்பை வரைக்கெல்லாம் செல்லமுடியாது. பக்கத்திலேயே சுற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? பெங்களூர் - ஷிவனசமுத்திரம் உங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும். பெங்களூரிலிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ளது ஷிவனசமுத்திரம் அருவி. குற்றாலத்தைவிட பிரமாண்டமாய் விழும் இந்த நீர்வீழ்ச்சிக்கு நீங்கள் பெங்களூரிலிருந்து காலையிலேயே புறப்பட்டால் மூன்று மணி நேரத்தில் சேரலாம். மழைக்காலத்தில் செல்ல அருமையான நெடுஞ்சாலை.
சென்னை - பாண்டிச்சேரி
Photo Courtesy : Joe Ravi
மும்பை-பூனேவாசிகளுக்கு எக்ஸ்பிரஸ் வே போல, சென்னைவாசிகளுக்கு விருப்ப ஸ்பாட் இந்த ஈ.சி.ஆர் சாலைப் பயணம். திருவான்மியுரைத்தாண்டியவுடன் ஆரம்பமாகும் இந்த சாலை வழிநெடுக தீம் பார்க்குகளும், கடல்ப்புற உணவகங்களும், காபி ஷாப்புகளும் இளைஞர்களிடம் வெகு பிரசித்தம்.
140+ கி.மீ தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரியை முன்றரை மணி நேரங்களில் அடைந்து விடலாம்.
60 கி.மீ தொலைவில் சிற்பங்களின் நகரமான மாமல்லபுரத்தை அடையலாம். செல்லும் வழியெல்லாம் நிரம்பியிருக்கும் இளநீர் உங்கள் பயணத்தை மேலும் உற்சாகமடைய வைக்கும்.
சென்னை - காஞ்சிபுரம்
74 கி.மீ'இல் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் கோவில் நகரமான காஞ்சிக்கு நீங்கள் சென்றடையலாம். அதிக சிக்கல் இல்லாத சுத்தமான சாலையில் எளிதாக நீங்கள் செல்லலாம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்த சாலையில் செல்வோருக்கு ஒரு முக்கிய சுற்றுலா தளம்.